Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 20, 2011

வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகளிடம் குழப்பம்: 4 நாள் அவகாசம் போதுமா?

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன. ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், புதிய அரசு பதவியேற்பதற்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், இதற்குள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று கவலை அடைந்துள்ளன.


அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், மே மாதம் 13ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம். தேர்தலுக்கு போதிய கால அவகாசம் தராததற்கும், ஓட்டு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்ததற்கும், ஆளும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனை கடுமையாக அர்ச்சித்து வருகின்றன.இந்நிலையில், வெற்றியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரதான கட்சிகளிடையே திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 16ம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 17ம் தேதி, சட்டசபையை கூட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அத்தேதியுடன் சட்டசபை ஆயுட்கால வரையறை முடிகிறது.இதுபோன்ற சூழலில், ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், வெறும் நான்கு நாட்களே அவகாசம் இருப்பதால், இந்த குறுகிய காலத்திற்குள் ஆட்சி அமைக்க தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று, கட்சிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமெனில், 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பதில் சாத்தியமில்லை. இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளார். அதனால் தான், "கூட்டணி ஆட்சி அமைக்க தி.மு.க.,விற்கு தயக்கம் எதுவும் இல்லை' என, ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். எனவே, கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார், யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை. முதலில் முதல்வர், மற்ற இரு அமைச்சர்கள் பதவி ஏற்பு என்றாலும், அதைப் பேசி முடிவு செய்வதற்கு காலஅவகாசம் தேவை.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இக்கட்சி 160 இடங்களில் போட்டியிட்டுள்ளது. தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால், எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஓரிரு நாளில் அ.தி.மு.க., அரசு பதவியேற்கலாம். அதிலும் அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கும் போது கூட்டணிக் கட்சிகள் வருத்தமுறாதவகையில் தேர்வு தேவை. வேட்பாளர் பட்டியல் போல, முதலில் அறிவித்து பின்பு மாற்றினால் அது பிரச்னையை ஏற்படுத்தும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை வந்தால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

தே.மு.தி.க.,வைப் பொறுத்தவரை, "ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்' என, தெளிவாக கூறிவிட்டது.எனினும், இரு அணிகளிலும் இழுபறியான நிலை காணப்பட்டால், தேர்தல் முடிவுக்குப் பின், ஒவ்வொரு கட்சியில் இருந்தும், "இழுக்கின்ற' வேலைகள் நடக்கலாம். இதனால், கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படப்போவது உறுதி. இதையெல்லாம் நினைத்து, அரசியல் கட்சிகள் இப்போது குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியின்றி தவித்து வருகின்றன.


எப்படியிருந்தாலும், எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ, அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளிக்க வேண்டும். அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார்.ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதுடன், குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.அதைவிட, தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 13ம் தேதியே தெரிந்த போதும், வெற்றி பெறும் வேட்பாளர், தேர்தல் அதிகாரியின் சான்றிதழை அதே நாளில் பெற்றாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளை கமிஷன் அறிவித்து, சட்டசபையை கூட்டுவதற்கான அறிவிப்பு தொடர வேண்டும். அதற்குப் பின், இடைக்கால சபாநாயகர் தேர்வு என்று ஏராளமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், இத்தடவை தமிழகத்தில் முற்றிலும் வித்தியாசமான தேர்தல் மட்டுமல்ல, காத்திருப்புக்குப் பின் அரசு அமைவதும் பெரிய விவாதப் பொருளாகியிருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...