Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 31, 2010

அரசு பணியில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!

அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கு தெரியபடுத்தவும்.(பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்). அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவான்! Download As PDF

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்


தன் வினையே தன்னைச் சுடும்' என்ற பழமொழிக்கு மிகப் பொருத்தமானவர்கள் யாரென்று கேட்டால் அனைவருமே சுலபமாக சொல்லிவிடலாம் புகைப்பிடிப்பவர்கள் என்று. விரல்களுக்கிடையே மரணத்தை சுமந்துக் கொண்டு சிந்தனையை சிறைவைத்த மனிதர்கள்தான் புகைப்பிடிப்பவர்கள் எனில் அது மிகையன்று. ஊதித்தள்ளும் புகை தலைக்கு மேலே வட்டமிடும் பொழுது தனது வாழ்க்கையும் கட்டம் கட்டப்படுகிறது என்பதை புரிந்தே வைத்துள்ளார்கள் புகை பழக்கமுடையோர்.
ஆண்டுதோறும் மே மாதம் 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து 1987 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடித்த பொழுதிலும் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புகையிலை தயாரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த ஆண்டு புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி WHO என்றழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி ஒவ்வொரு எட்டு வினாடிகளுக்கு ஒருவர் இவ்வுலகில் புகைத்தல் மூலம் உயிரைத் துறக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 5.4 மில்லியன் மனிதர்கள் புகைத்தல் மூலம் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். கடந்த ஆண்டு உலகில் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சிகரெட்டுகள் விற்பனையாகியுள்ளன.இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில் புகையின் உபயோகம் மூலம் உலகில் ஆண்டிற்கு 15 லட்சம் பெண்கள் மரணமடைகின்றார்கள் என்பதுதான்.151 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் புகையிலையை உபயோகிக்கும் ஆண் மற்றும் பெண் இளைய வயதுடையோரின் எண்ணிக்கை சமமாக உள்ளது. புகையினால் மரணமடையும் ஆறு லட்சம் பேரில் மூன்றில் இரண்டு பாகமும் பெண்களாவர். புகைப்பிடிப்பது மட்டுமல்ல புகைப்பிடிப் பொருளுடனான பழக்க வழக்கமும் மரணத்திற்கு காரணமாக அமைகிறது. இதனை ஈரானில் ஐ.நா வின் தகவல் மையம் தெரிவிக்கிறது.
வளர்ந்துவரும் நாடுகளில் பெண்கள் புகையிலையை உபயோகிப்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் இதற்கெதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவிக்கிறார்.வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் இதர நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.நமது இந்திய நாட்டிலும் பெண்கள் மத்தியில் புகைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. மும்பையில் புகை பிடிக்கும் பெண்களில் 50 சதவீதம் பேர் கடும் பணிச் சுமை காரணமாகவே அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மும்பையில் நடத்தப்பட்ட இரு சர்வேக்களில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.பிபிஓ, கால்சென்டர்களில் பணியாற்றும் பெண்கள் பணிச் சுமை, போட்டி, அதிகமான ஊதியத்தால் கிடைத்துள்ள சுதந்திரத்தால் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருகி்ன்றனர்.ஆங்கில தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் உள்ளிட்ட மீடியாக்கள், பொழுதுபோக்கு தொலைககாட்சி சேனல்களி்ல் பணியாற்றும் பெண்களில் 5 முதல் 35 சதவீதம் வரை நாளொன்றுக்கு 4 முதல் 10 சிகெரெட்களை புகைக்கி்ன்றனர். இதில் சிலர் செயின் ஸ்மோக்கர்கள் ஆவர்.திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஹாஸ்டல்களி்ல் தனியே தங்கியிருப்போர், பேயிங் கெஸ்ட் ஆகிவற்றில் தங்கியிருக்கும் பெண்களில் 15 முதல் 20 பேர் பசியைப் போக்கவோ அல்லது டயட்டிங் காரணமாகவோ புகை பிடிக்கின்றனர். இவர்கள் காசநோய்க்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.பி.பி.ஓ. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர் 'ஹூக்கா' பார்களுக்கு சென்று புகைப்பதன் மூலம் பணிச் சுமையிலிருந்து தப்புவதாகவும் தெரிவித்துள்ளனராம்.
உலகில் காணப்படும் நச்சுத்தன்மைமிக்க தாவர வகைகளில் புகையிலையும் ஒன்றாகும். இதன் தண்டுப்பகுதியை விட இலைப்பகுதியில் தான் அதிக இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை மருத்துவ,விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.இன்றைய காலக்கட்டம் வரை நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வுகளில் புகையிலையில் சுமார் 4 ஆயிரம் இராசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதிற்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன்மோனக்சைட்,தார்(இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது),நிகோடின்,நைட்ரிக் ஆக்ஸைட்,மெர்குரி(பாதரசம்) போன்றவையாகும்.புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர்.
மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் அதிக விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துகிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார்கள். தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக் கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பயன்படுத்தி புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக் கூடியது.அடிமையானவர்களில் 60%–90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர் என்று அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வில்லியம் பொலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.
வலைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப் பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் பெண்கள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளநாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.புகையிலை பயன்பாட்டால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதைப்புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரப்பையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.
புகையினால் ஏற்படும் பாதிப்பு இத்துடன் முடியவில்லை இன்னும் பாருங்கள், பணப்பயிரான புகையிலையை பயிரிடுவதால் 1 கோடி முதல் 2 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர் பயிரிடும் நிலம் அபகரிக்கப்படுகிறது.1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்- உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை.
உலக மக்கள்தொகையை ஒரு பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம், எப்படி தங்கள் வருமானத்தை தொடர்ச்சியாகப் பெருக்குவது என்ற தந்திரத்தை அவர்கள் அப்போது கற்றுக் கொண்டார்கள்.
புகையிலை பரவலாகி பழக்கமாகும் வரை, புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பொய் என்பது போன்ற ஒரு தோற்றத்தை, தங்களுக்குச் சார்பான விஞ்ஞானிகள் குழு மூலம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து உருவாக்கினர்.இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. என்ற இந்தியன் டுபாகோ கம்பெனி அடிப்படையில் ஒரு புகையிலை நிறுவனமே.உலக புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் புகையிலை பயிரிடுவதற்காக இரண்டு லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் 42 ஆயிரம் எக்டேர் பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது.புகையிலை பயிரிடுதல், எரிபொருள், புதிய வகை பயிர்கள் பயிரிடுதல், "பேக்" செய்வது ஆகிய காரணங்களுக்காக புகையிலை சார்ந்த காடழிப்பு நடைபெறுகிறது. இதற்காக பெரும்பாலான வளரும் நாடுகளில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக அளவில் 1.7 சதவீத காடுகளின் பரப்பு இதற்கு மட்டுமே அழிந்து வருகிறது. மொத்த காடுகளின் பரப்பளவில் 4.6 சதவீதம் புகையிலை பயிரிடப்படும் நாடுகளில் மட்டும் அழிக்கப்படுகிறது.சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை போன்றவற்றை தயாரிப்பதற்கு புகையிலை பயன்படுத்தப்படுகிறது.
உலக பீடி உற்பத்தில் 85 சதவீதம், அதாவது 19 கோடி கிலோ பீடி இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலக புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம் (ஏழை பீடி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், குழந்தை உழைப்பு போன்ற வேறு சமூகப் பிரச்சினைகளும் இதில் அடங்கியுள்ளன).புகையிலை பண்ணைகளில் 20 ஆயிரம் குழந்தைகளும், பீடி-சிகரெட் பாக்கெட் தயாரிப்பு பணியில் 27 ஆயிரம் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகப் பேரணி தெரிவிக்கிறது.தமிழகத்தில் மெல்லும் வகை புகையிலை தென்மாவட்டங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தவிர, தஞ்சாவூரிலும் கடற்பாங்கான மண் உள்ள பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. மதுரையின் சில இடங்களில் குறைவான எரியும் தன்மை கொண்ட சுருட்டு தயாரிக்கப் பயன்படும் புகையிலை பயிரிடப்படுகிறது.
புகையிலையை பயிரிடுவதனால் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் பல்லுயிரினம் பாதிக்கப்படுகிறது. 12 பூஞ்சை வைரஸ் நோய்கள், 29 பூச்சிகள் தாக்குதல்கள் போன்றவை புகையிலை பயிரிடப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. புகையிலையை பயிரிடுவதற்கு பயன்படுத்தும் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையை அடைந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. புகையிலையினால் காடுவளம் பாதிக்கப்படுகிறது.ஒரு டன் புகையிலையை பதப்படுத்துவதற்கு ஒரு எக்டேர் மரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்துவதற்கு 7.8 கிலோ மரக்கட்டை எரிக்கப்படுகிறது.உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு ஏக்கர் புகையிலை பயிரிடுவது 150 மரங்களை அழிப்பதற்குச் சமமாகும். 600 கிலோ புகையிலையை பதப்படுத்த உதவும் எரிபொருளைக் கொண்டு 20 வீடுகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம்.போபாலில் உள்ள இந்திய காட்டு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1962 முதல் 2002 வரையிலான 40 ஆண்டு காலத்தில் புகையிலை பதப்படுத்துதல், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்புக்காக 680 சதுர கிலோ மீட்டர் காடுகள் அல்லது 86.8 கோடி டன் மரக்கட்டைகள் அல்லது 22 கோடி டன் கட்டுமானத் தரம் வாய்ந்த மரக்கட்டைகள் அல்லது 66.8 கோடி டன் எரிபொருள் சுரண்டப்பட்டுள்ளது.இவ்வாறு அழிக்கப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டால் அதைக் கொண்டு அணல் மின்நிலையம் ஒன்றை இயக்கி,
தலைநகர் தில்லி, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவையான மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கலாம்.இப்பொழுது கூறுங்கள் புகை நமக்கு பகைதானே? வெறும் பகையல்ல கொடும்பகை என்பதை மறந்துவிடவேண்டாம்.பிரபஞ்சத்தை படைத்து பாதுகாத்து வரும் வல்ல இறைவன் தனது திருக்குர்ஆனில் மனிதப் படைப்பை பற்றிக் குறிப்பிடும் பொழுது இவ்வாறு குறிப்பிடுகிறான்:
"திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்"(அல்குர்ஆன் 95:4).அத்தகையதொரு அழகான படைப்பான மனிதன் தனது உடல் நலத்தை சீரழித்து வாழ்வை சூன்யமாக்கும் புகைக்கு அடிமைப்படுதன் மூலம் பாரதூரமான அநீதத்தை தனக்கு இழைக்கிறான்."உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்"(அந்நிஸா: 25).
மனிதனுக்கு தனது உயிரை அழித்துக் கொள்ள எவ்வுரிமையும் இல்லை என்கின்ற பொழுது இறைவனால் வழங்கப்பட்ட தனது வாழ்வை அழிக்கும் இந்த கொடுமையிலிருந்து விடுபட்டால்தான் அவன் இவ்வுலகிலும் மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்விலும் நிம்மதியாக வாழ முடியும்.விஷத்தன்மை மிக்க வேதிப்பொருட்கள் அடங்கிய புகையிலையை தெரிந்தே பயன்படுத்தி அதன் மூலம் தனது இன்னுயிரை இழக்கும் செயல் தற்கொலைக்கு சமம்தானே!தற்கொலைக்கு என்ன தண்டனை என்பதை அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்...)கூறுவதைப் பாருங்கள்:"எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ அவர் நரகத்தில் எப்பொழுதும் உயரமான இடத்திலிருந்து விழுந்து கொண்டே இருப்பார், எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதோ அவரது கையில் விஷம் இருக்கும் அதை நரகத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார், எவர் இரும்பு ஆயுதத்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் கையில் அந்த இரும்பு ஆயுதம் இருக்கும் அதைக் கொண்டு எப்போதும் நரகில் தன் வயிற்றை கிழித்துக் கொண்டே இருப்பார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூற்கள்: அஹமது, அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.
பொருள் இழப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, தனது ஆன்மாவுக்கும், உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு தன்னை சார்ந்தோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய கேடுகெட்ட பழக்கத்தை விட்டொழிப்போம். புகை நமக்கு என்றுமே கொடும் பகையாக இருக்கட்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

source:பாலைவனத் தூது

மே 30, 2010

உயிரை இழக்க நேரிடும் உழைப்பு உனக்கு

வெளிநாட்டில், குறிப்பாக அரபு நாட்டில் ஆடுமேய்ப்பது, பாலை வெயி லில் சாலை போடுவது, அரபி வீட்டில் அடுப்படி நெருப்பில் சமைப்பது, வீட்டு குழந்தைளுக்கு மலம் கழுவதுதான் காலமெல்லாம் உன் கதியானது. இதுவே உன் வாழ்க்கை விதியானது.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நீ அரபு நாட்டு அடிமை.

ஆண்டுக்கொருமுறை பரோ ல் வரும் அரபு நாட்டு ஆயுள் கைதி.
இது உன் வெளிநாட்டு வாழ்க்கை நிலை என்றால் உன் உள்நாட்டு வாழ்க்கை நிலை என்ன?

உன் நாட்டில், உள் நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்ணும் சமுதாயமே !
ஈராடைக்கு மேலாய் எதுவுமில்லாத ஏதி சமுதாயமே!
கொத்தடிமைக் கூலியாய் படிப்பறிவில்லாத தற்குரியாய் குத்தப்படும் தீவிரவாதத்தின் முத்திரையாய்! கூறப்படும் பயங்கரவாதத்தின் மறுபெயராய்! குற்றப் பரம்பரையாய்!
கூனிக் குறுகி வாழும் என் சமுதாயமே!
வெட்ட வெளியே உன் கழிப்பறையாய் !
கூரை குடிசையே உன் குடியிருப்பாய் !
குழிவிழுந்த கன்னமாய் ! கூன் விழுந்த முதுகாய் !
வறுமையே வாழ்க்கையாய் !
வாடுவதே உன்பாடாய் !
காலம் கழிக்கும் என் சகோதரனே !
கலவரத் தீயில் கட்டு கட்டாக உன் சமுதாயம் மட்டும். கரிக்கட்டைகளாக சாகவும் சரியவும் காரணம் என்ன?
காக்கிச் சட்டை அணிந்த அந்த காவல் துறையிலும் நாட்டைக் காக்கும் இராணுவத் துறையிலும் நீ இல்லாததுதான். அனைத்துத் துறையிலும் நீ அறியாமல் ஒதுக்கப்படவும் ஓரங்கட்டப்படவும் காரணம் என்ன?

அதிகாரத்துறையில் நீ இல்லாததுதான்.வன்முறை வழக்கில் நீ வாழ்நாள் கைதியாகி உன் உயிர் சுவாசம் முடியம் வரை சிறைவாசம் அனுபவிக்கின்றாயே ஏன்?
அநீதி இழைக்கப்பட்ட உனக்கு நீதி கிடைக்காமலும் நீதி மன்றத்தில் உன் வழக்கு மட்டும் நிலுவையில் நிற்கவும் காரணம் என்ன? நீதித் துறையில் நீ இல்லாததுதான்.
ஒரு தலித் தாக்கப்படும் போது கொந்தளிக்கின்ற நாடாளுமன்றம் , ஒரு குஜராத்தில் உன் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 3000 பேர் கொளுத்தப்பட்ட விவகாரம், நாடாளுமன்றத்தில் ஒரு முணுமுணுப்பு கூட இல்லாமல் பிசுபிசுத்து போனது ஏன்?

இட ஒதுக்கீடு இல்லாததுதான். நாடாளுமன்றத்திற்கு உன் சமுதாயம் உரிய பிரதிநிதித் துவத்தில் செல்லாததுதான்.
இனியும் இந்த அவலமும் அவமானமும் வேண்டாமெனில் கல்வியிலும் இப்போது பட்டிய லிடப்பட்ட இத்தனை துறைகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில்,

விடுதலைப் போராளியே! வீரத் தியாகியே ! தீவுத் திடல் நோக்கி திரண்டுவா !இனி என் சமுதாயம் வீழ்வதற்கும் மாள்வதற்கும் இல்லை. இன்ஷா அல்லாஹ் ! வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உரிய உரிமை கொண்டது என்று முழங்கி ஜ‚லை 4, 2010 தீவுத் திடல் நோக்கி வந்திடுக.
உன் குடும்பம் குழந்தைகளுடன் ”போர் முரசு கொட்டும் புயலாய்!” ”ஆர்பரிக்கும் அலைகடலாய்!” உரிமைப் பேரணி மாநாட்டில் கலந்திடுக! என்று அன்புடன் அழைக்கின்றது டிஎன்டிஜே.”

வெண்முத்து சங்கு பெறுவதற்கு முங்க வேண்டும் ஆழ்கடல்.” ”உன் பத்து சதம் இடஒதுக்கீடு பெறுவதற்கு பொங்க வேண்டும் தீவுத் திடல்.”

மரணத் தருவாயில் மனிதன்!!!

கண்ணியமும் கருணையும் நிறைந்த இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229)

எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.

உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.
உற்றார், உறவினர், நண்பர்கள் என எத்தனையோ பேர் புடைசூழ இருந்தாலும் நேரத்தை அடைந்த அந்த மனிதனுக்கு மட்டுமே சூட்சம உலகின் தரிசனம் தரப்படுகிறது.
எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் கானும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை.
தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனின் மறைவான ஞானங்களின் உண்மையை சந்திக்க வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.
மெய்யான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும் அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.
ஏனைய கொள்கைகளும் சிந்தனையும் அந்நேரத்தில் உதவாதது மாத்திரமல்ல மனிதனுக்கு அவைகள் பாவச் சுமைகளாக மாறி விடும் அபாயங்களாக இருக்கின்றன.

அச்சுமைகளை கழற்றி விடவோ அல்லது பரிகாரம் தேடவோ முடியாத நேரமாகும். எனவே, மனித இனம் எச்சரிக்கப்படுகிறது!. தனக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் தன்னுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள! அந்த சீர்திருத்தம் குர்ஆனின், நபிவழியின் அடிப்படையில் அமைந்ததாக! இன்ஷாஅல்லாஹ்.!

தீயவர்களின் வேதனையின் ஆரம்பம்
தீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும்போது அவர்களுக்குக் கொடுக்கபடும் வேதனையைப் பற்றி பின்வரும் இறைவசனம் தெளிவுப்படுத்துகிறது.கண்ணியமிகு அல்லாஹ் தன் திருமறையில் '(ஏக இறைவனை)மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப் பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே!' (அல்குர்ஆன்: 8:50)

கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவனுடைய இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.

பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.
இறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப் பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)

தனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்க ளின் புலம்பலும்இ நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது. இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்'. (அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை
நல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (அல்குர்ஆன்: 89 : 27)

நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்பு வானவர்களால் கொடுக்கப்படுகிறது. மதினாவாசி ஒருவருடைய ஜனாஸாவை பின் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நங்களும் அவரைச் சுற்றி அமர்;ந்தோம். நபி(ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள்.திடிரென தன் தலையை உயர்த்தி 'கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்' என்று மூன்று தடைவ கூறினார்கள்.

பின்பு மரணத் தருவாயிலிலுள்ள ஒரு இறைநம்பிக்கையாளனுடைய நிலை பற்றி கூறினார்கள்'மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானாவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல்' என்று கூறுவார்.

தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்த விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.
அம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லியியீனிலே பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;! இறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்மரணிக்கும் தறுவாயில் இருக்கும்போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்பு செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார்.


கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கி தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நிங்களே வெளியேற்றுங்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்த தாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்' (அல்குர்ஆன்: 6:93)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள்.

போது நான் அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா? (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்? என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதுவல்ல. மாறாக இறைநம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான். (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)
ஆகவே நம்முடைய செயல்களை தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து மரணிக்க ஏக இறைவனை பிராத்திக்கின்றோம்.

'வெப்பம்' அதிகரிப்பால் 2300ம் ஆண்டில் பூமியில் மனிதர்கள் வாழ முடியாது- ஆய்வு முடிவு

சிட்னி:இன்னும் 300 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் மிக பயங்கரமாக அதிகரித்து மனிதன் உள்பட எந்த உயிரினமும் வாழவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து பூமியின் முந்தைய பல நூற்றாண்டு வெப்பநிலை குறித்த தகவல்களை பல வகைகளில் சேகரித்து ஆய்வு நடத்தினர்.

தங்கள் ஆய்வு முடிவுகளை Proceedings of the National Academy of Sciences, Australian National University academics ஆகியவற்றிடம் தாக்கல் செய்துள்ளனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இதே விகிதத்தில் நாம் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து புகையை வெளியிட்டு வந்தால் உலகின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து, 2300ம் ஆண்டில் உலகின் சராசரி வெப்பநிலை குறைந்தபட்சம் 7 டிகிரி சென்டிகிரேட் (13 பாரன்ஹீட்) அளவுக்கு அதிகரித்துவிடும்.இதனால் உலகின் சில பகுதிகளில் வெப்பநிலை மிகக் கடுமையாகி உயிர்கள் வாழவே முடியாத நிலை உருவாகும். 11 முதல் 12 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரித்தால், உலகம் முழுவதுமே மனிதன் உள்பட எந்த உயிரினமும் தப்ப முடியாது.இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாக 50/50 வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி:பாலைவனத் தூது

மே 27, 2010

தகவல் களஞ்சியம்.!!!

* 1660 ஆண்டுக்கு முன்புவரை கடிகாரங்களில் மணியைக் காட்டும் முள் மட்டுமே உண்டு .

* உலகின் அனைத்து கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது .

* தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு 8-வது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும் . . .

* அமெரிக்க சட்டசபை கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது .

*மகாத்மா காந்தியை ' காந்தியடிகள் ' என்று முதன்முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார் .* சூரியக் கதிர்கள் கடலுக்குள் 350 அடி வரை செல்லும் .

* மழையை அளக்க ' புளூவியோ மீட்டர் ' என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது .

*' போப் ' என்ற சொல் 'பாபா ' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும் .

* கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நம் நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது .

* 50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் -- மூங்கில் .

* நின்றுகொண்டே உறங்கும் விலங்கு -- குதிரை .

* இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -- செரி .

ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.

* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.

* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.

* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.

300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது

1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.

சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.

* இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் பேங்க்.

இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.
* 22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.
* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
* பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30நிமிஷங்கள் மட்டுமே தூங்கும்.

மே 26, 2010

நமதூர் பள்ளியில் 58 சதவிகித மாணவ/மாணவிகள் தேர்ச்சி...

இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நமதூர் முஸ்லிம் உயர் நிலைப் பள்ளி மாணவ/மாணவிகள் 58 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தம் 44 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 25 மாணவ/மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடந்துள்ளார்கள்.

நமதூர் சிதம்பரம் மகள் ஸ்ரீ ராசாத்தி 392 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,
காயிதே மில்லத் தெரு அப்துர்ரஹ்மான் மகன் சைபுல்லாஹ் 351 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், நத்தமலையை சேர்ந்த மாணவி சுகந்தி 349 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று தேர்ச்சி அடந்துள்ளர்கள்.
நமதூர் மாணவிகள் (முஸ்லிம்) 4 பேர் தேர்ச்சி அடந்துள்ளார்கள் அல்ஹம்து லில்லாஹ்...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவி ஜாஸ்மின் முதலிடம்


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர்.
இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி : முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உ<ழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்.
3 பாடத்தில் முதலிடம் : மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜாஸ்மின் ஆங்கிலம் , அறிவியல் , கணிதம் ஆகிய பாடங்களில் முதல் மார்க்கு பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இது வரை இல்லாத அளவிற்கு அரசுப்பள்ளியில் படித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இவரது வெற்றியை அடுத்து இந்தப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அளவிலா மகிழ்ச்சியில் திகைத்து போயினர்.

ஃபத்வா படுத்தும் பாடு



ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் ஏற்படும் ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு தீர்வைத்தேடி மார்க்க அறிஞரை நாடுவார்.இஸ்லாத்தைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் தன்னுடைய அறிவைப் பொறுத்து அந்த மார்க்க அறிஞர் தனது அபிப்ராயத்தைக் கூறுவார். இதுதான் ஃபத்வா.ஒரு நோயைப் பற்றியும், அதற்கான சிகிட்சையைக் குறித்தும் ஒரு மருத்துவர் கூறும் அபிப்ராயத்திற்கு ஒத்ததுதான் இதுவும். ஒரு நோய்க்கு பல டாக்டர்களும் பல சிகிச்சை முறைகளைக் கூறுவதுபோல் பல மார்க்க அறிஞர்களும் அவர்களின் அறிவைப் பொறுத்து ஒரு பிரச்சனையில் பல அபிப்ராயங்களை கூறலாம்.இதனைத் தீர்வைத்தேடி அணுகியவர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமலிருக்கலாம்.ஒட்டுமொத்த சமூகமும் ஃப்த்வாக்களை பின்பற்றவேண்டிய எந்த வித நிர்பந்தமும் இல்லை.

ஆண்டுதோறும் பெரும்பாலும் செய்திகளுக்கு பஞ்சம் ஏற்படும்பொழுது, கர்மமே கண்ணாகயிருக்கும் பத்திரிகையாளர் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அளித்த ஏதேனும் ஃபத்வாவை கண்டுபிடிப்பர்.முஸ்லிம்கள் பிற்போக்கானவர்கள், முஸ்லிம் அறிஞர்களுக்கு உலக அறிவே கிடையாது அவர்களெல்லாம் பழமைவாதத்தில் ஊறிப்போனவர்கள் என்பதை வெளிப்படுத்துவதுதான் அவர்களின் லட்சியமாகயிருக்கும்.சமீபத்தில் இந்தியாவின் பிரபல ஊடகங்களில் உலாவிய ஒரு ஃபத்வாவை நீங்கள் ஆராய்ந்தால் இது புரியும். சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுதான் இந்த ஃபத்வா. திடீரென பத்திரிகைகள் ஏன் இதில் அதிகம் ஆர்வங்காட்டின என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகமாகும். ஒரு வாக்கியம்தான் ஃபத்வா. ஆனால் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் அதற்காக அதிகமான பக்கங்களையும், நேரத்தையும் செலவழித்தன.வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்திழுப்பதற்கான அனைத்து அம்சங்களும் அந்த ஃபத்வாவில் இருப்பதாக பத்திரிகை உலக ஜாம்பவான்கள் எண்ணினார்களோ என்னவோ?

பழைய ஒரு ஃபத்வாவை விவாதமாக்க பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் பெரும் முயற்சியை மேற்கொண்ட பொழுது அதன் பின்னணியில் பல காட்சிகளையும் நாம் காணநேர்ந்தது.மே மாதம் 11 ஆம் தேதி என்.டி.டி.வி இந்த ஃபத்வா குறித்த செய்தியை ஒளிபரப்புகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் இதர சேனல்கள் அதனை வாந்தியெடுக்க ஆரம்பித்தன. கண்ணும் காதும் மூக்கும் வைத்து பல சேனல்களும் பத்திரிகைகளும் பலவாறு கூடுதலான செய்திகளையும் சேர்த்து வெளியிட்டன.சரி ஃபத்வாதான் என்ன?

இந்தியாவின் பிரசித்திப் பெற்ற மதரஸாவான தேவ்பந்த் தாருல் உலூமிற்கு ஒருவர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கு நிவாரணம் தேடி ஒரு கடிதம் எழுதுகிறார்: 'இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒரு முஸ்லிம் பெண் வேலைக்கு செல்லலாமா? அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஹலாலா? ஹராமா?' என்பதுதான் அந்தக் கேள்வி.இவருடைய கேள்விக்கு அளிக்கப்பட்ட ஃபத்வா இதுதான்: 'ஆணும் பெண்ணும் ஒன்றாக பணியாற்றுவதும், பர்தா இல்லாமல் உரையாடுவதும், வெளிப்படையாக நடவடிக்கைகளில் பங்கேற்பதுமான சூழலில் ஒரு முஸ்லிம் பெண்மணி வேலைப்பார்ப்பது ஹராமாகும்'.இனி பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியை பார்ப்போம்.

வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்களுக்கெதிராக ஃபத்வா -என்.டி.

பெண்களின் வருமானம் ஹராம் - டைம்ஸ் ஆஃப் இநதியா

சக ஆண் பணியாளர்களுடன் பேசாதீர்கள்.முஸ்லிம் பெண் பணியாளர்களுக்கு தாருல் உலூம் ஃபத்வாமுஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது - சமய் லைவ்

முஸ்லிம் பெண்கள் பொதுஇடத்தில் வேலைச செய்யக்கூடாது என்று தாருல் உலூம்- இந்தியா டுடே

இப்பொழுது இதோ வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கெதிராக ஃபத்வா- இந்தியன் எக்ஸ்பிரஸ்

முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவருடன் பணியாற்றுவது இஸ்லாத்திற்கு மாற்றமானது- அவுட்லுக்

மேற்கத்திய நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் மஞ்சள் பத்திரிகைகள் ஏன் இந்தியாவுக்கு வருவதில்லை என கேள்வியெழுப்புவோருக்கு பதில் இதுதான்: இந்தியாவில் மஞ்சள் பத்திரிகையின் இடத்தை நிரப்புவது இந்தியாவின் பிரபலமான பத்திரிகைகளாகும்.ஃபத்வாவை ஒருமுறைக்கூடி ஆராய்வோம்:'தேவ் பந்த் முஃப்தி தனது ஃப்த்வாவில் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வது ஹராம் என்று கூறவேயில்லை. முஸ்லிம் பெண்மணி வேலைக்குச் செல்வது அல்ல இங்கு பிரச்சனை. பர்தா இல்லாமல் வெளிப்படையாக ஆணும் பெண்ணும் ஒன்றாக பணியாற்றுவதைத்தான் முஃப்தி குறிப்பிடுகிறார்.ஆனால் முஸ்லிம் பெண் வேலைக்குச் செல்வதோ அவளுடைய வருமானமோ ஹராம் என்று ஃப்த்வாவில் இல்லை. ஆதலால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பிரபல பத்திரிகைகள் வெளியிட்ட தலைப்புச் செய்திகளுக்கும் ஃபத்வாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

ஒரு சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிடுமுன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புக் கொண்டு விளக்கம் கேட்கும் சாதாரண அறிவு கூட பிரபல ஊடகங்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களுக்கு தேவை சூடான செய்திகள். அதற்காக எதையும் செய்ய அவர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர்.தொலைக்காட்சி சானல்கள் இன்னும் ஒரு படி மேலேச்சென்று 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட ஃபத்வாக்கள் குறித்தும் செய்திகளை வெளியிடுகிறது.உ.பி.மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் இம்ரானா என்ற பெண்மணியை அவருடைய மாமனார் கற்பழித்துவிட்டார் என்றும் இனி இம்ரானா அவருடைய கணவருடன் வாழத்தகுதியில்லை என தேவ் பந்த் மதரஸா ஃப்த்வா கொடுத்ததாக கூறி ஊடகங்கள் கிளப்பிய விவாதத்தின் சூடு தணிய பல நாட்கள் ஆனது.ஊடகங்கள் இவ்வாறு ஒரு நீண்ட போரையே இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடுத்து வருகின்றன என்ற குற்றச்சாட்டை நாம் மறுப்பதற்கில்லை.

ஏற்கனவே தகர்ந்துபோயிருக்கும் முஸ்லிம்களின் இமேஜை மேலும் கெடுப்பதுதான் இத்தகைய செய்திகள் என கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தபஸ்ஸும் கான் கூறுவதில் உண்மையுண்டு.இவ்வாறு முஸ்லிம்களைக் குறித்த செய்திகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும் ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு சில மசாலாக்களை சேர்த்து அச்செய்திகளின் சுவையை கூட்டுகின்றன.ஃபத்வா நல்லதோ கெட்டதோ அவற்றிற்கு முஸ்லிம் சமுதாயத்தில் ஆதரவு குறைவே என டெல்லியில் முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே ஆய்வை மேற்கொண்ட தபஸ்ஸும் கான் கூறுகிறார்.இளைஞர்கள் மத்தியில் மிகச்சிலரே இத்தகைய ஃபத்வாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

ஏதேனும் ஒரு சம்பவத்தைக் குறித்து ஊடகங்கள் மார்க்க அறிஞர்களின் வாயைக் கிளறுகின்றன. இவர்களுடைய எண்ணங்களை புரிந்துக் கொள்ளாமல் அல்லது எதிரிகளின் திட்டத்தை புரிந்துக் கொள்ளாமலேயே அவர்களும் சூழலைப்புரியாமல் ஃபத்வாக்களை வழங்கிவிடுகின்றனர். இதனை ஊடகங்கள் ஒரு சமுதாயத்தின் கொள்கையாக மாற்றிவிடுகின்றது. இதுதான் இஸ்லாம் என்று அவர்கள் பிரச்சாரம் செய்ய தலைப்பட்டு விடுகின்றனர்.

சானியா மிர்சா விவகாரத்தில் இவ்வாறுதான் நடந்தது. சானியா மிர்சா அணிந்திருக்கும் ஆடையைக் குறித்து ஒரு கேள்வி எழுந்தபொழுது அவருக்கெதிராக ஒரு ஃபத்வா வெளியிடப்பட்டது. அதனை ஊடகங்கள் கோலாகலப்படுத்தின. இஸ்லாத்தில் பெண்ணிற்கு தனது ஆடையைக்கூட தேர்ந்தெடுக்க உரிமையில்லையா? எனக்கூக்கூரல் எழுப்பின.ஆனால் இதேக்கேள்வியை சகோதரர் ஜாஹிர் நாயக்கின் கூற்றுப்படி ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் அல்லது போப்பிடம் சென்று செரீனா வில்லியம்ஸ் மற்றும் மரியா சரபோவாவின் ஆடைகளைக் குறித்து கேள்வியை எழுப்புவார்களா?

ஊடகங்களால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதுக் குறித்த ஃபத்வாவிற்கு தேவ்பந்த் விளக்கம் அளித்துவிட்டது.ஆனால் அதற்கு முன்பே முஸ்லிம் சமுதாயத்திற்கு காயங்களை ஏற்படுத்திவிட்டன ஊடகங்கள். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சில காட்சி ஊடகங்கள் இத்தகைய ஃபத்வாக்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டு விவாதம் என்ற பெயரில் முஸ்லிம் அறிவுஜீவிகளாகவும், சமூக சேவகர்களாகவும் வேடமிட்டுத்திரியும் சிலரை அழைத்து நடத்துகின்றன. இந்த அறிவுஜீவிகளும்(?) ஏதோ மெத்தப்படித்த மேதாவிகள் போன்று உளறிக்கொட்டுகின்றனர்.

சமீபத்திய தேவ்பந்த் ஃபத்வாவிலும் இதுதான் நடந்தது.சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி சானலில் நாகரிகா கோஷின் தலைமையில் நடந்த ஃபத்வா விவாதத்தில் பங்கெடுத்த எவரும் ஃபத்வாவின் மூலத்தைக் குறித்து ஆராயவில்லை. அதனால் அவர்கள் முஸ்லிம்களைக் குறித்த தவறான கருத்துக்களை முன்வைத்தனர்.அதாவது முஸ்லிம்கள் தனிமையானவர்கள்,அவர்களுக்கு எதார்த்த உலகத்துடன் எந்தத்தொடர்பும் இல்லை. முஸ்லிம் பெண்களை காப்பாற்றவேண்டியுள்ளது என அவசரப்பட்டு கருத்துக்கூறிய கமால் ஃபாரூக்கிற்கோ ஸாதியா தஹ்லவிக்கோ நாகரிகா கோஷின் நோக்கம் முஸ்லிம்களை காப்பாற்றுவது அல்ல என்பது புரியாமல் போனது பரிதாபம்.

முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கும்,மதரஸாக்களுக்கும் ஒரு வேண்டுகோள்.தற்காலப் பிரச்சனைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் பொழுது சூழலை அறிந்து ஃபத்வாவை வழங்குங்கள். அவசரப்பட்டு வழங்கும் ஃபத்வாக்களால் ஒரு சமூகமே மோசமாக சித்தரிக்கப்படுவதற்கு காரணமாகி விடுகிறோம் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.இங்கு முஸ்லிம் சமுதாயத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர்(ரலி...) அவர்கள் கூறிய கூற்றைக் குறிப்பிடுவது சாலச் சிறந்ததாகும். "எவர் ஒருவர் இஸ்லாத்தை கற்றுவிட்டு ஜாஹிலிய்யத்தை கற்கவில்லையோ அவர் இஸ்லாத்தை அலைக்கழித்துவிடுவார் என அஞ்சுகிறேன்".முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், தலைவர்களும் பாடம் பெறவேண்டிய காலத்தால் அழியாத வரிகள் இவை.

நன்றி :பாலைவனத் தூது

உலக மொழிகள் ( World's Languages )

 உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?

1. ஆங்கிலம் 2. ஸ்பானிஷ் 3. சீன மொழி 4. பிரெஞ்ச்...?

சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).

உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.
உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி - ஆங்கிலம்? என்றால் இல்லை,

ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 - அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.

ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் - 35க்கும் மேல்.

இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?

ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது. இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார் 18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் - இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.

திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?

தெலுங்கு.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர். உலக அளவில் பதினைந்தாவது இடம்.
தமிழ்:
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது. உலக அளவில் பதினெட்டாவது இடம்.

மலையாளம் & கன்னடம்:
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது. உலகில் அளவில் முறையே 29-வது, 31-வது இடங்களில் இருக்கிறது.
சீன மொழிகள்:
முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
சீன மொழி பேசும் மக்கள் தொகை உலக அளவில் இடம்
மந்தாரின் (Mandarin) 88.5 கோடி 1
வூ (Wu) 7.72 கோடி 10
யூ (Yue) (Cantonese) 6.62 கோடி 16
மின் நான் (Min Nan) 4.9 கோடி 21
ஜின்யூ (Jinyu) 4.5 கோடி 22
க்ஸியாங் (Xiang) 3.6 கோடி 28
ஹக்கா (Hakka) 3.4 கோடி 30
கான் (Gan) 2.06 கோடி 45

இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற வட்டார வழக்குகளை புரிந்து கொள்ள இயலாத அளவு வேறுபட்டிருப்பதால் தனி மொழிகள் என்றே கணக்கிடப்படுகிறது.

குறிப்பு:
நாடுகளைப் பட்டியலிடும் போது 1%க்கும் குறைவாக அந்த மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப் படவில்லை. மேலும் இது ஒரு உத்தேசக் கணக்கீடு.
நன்றி : களஞ்சியம்

மே 25, 2010

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதாவது தாங்கள் இறைநேசர்கள் என்பதற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர், பின்னர் தான் தாங்கள் வாழக்கூடிய நாட்டை குறிப்பிடுகின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.

மேற்கொண்டு பதிவிற்கு...
முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்கமுடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.

ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப் படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மாபெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த ஒரு தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.
இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் "மொரிஸ்கோஸ்" (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.
ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம் மேற்க்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).

கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.

உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும், அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?

கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria) தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் "பின்சோன் சகோதரர்கள்" (The Pinson or Pinzone brothers), அவர்களில்
1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.

இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño).கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.

ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில் மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.

1492 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தார். சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்க்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.

இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தது, இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.

ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்க்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.

இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும்.அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதற்கு அடுத்த வருடம், 1493 இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.

இம்முறை அவர் இறங்கியது ப்புர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன காலனி ஆதிக்கந்தான். ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.

அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.

ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.

இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.

அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆக,
அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் (1776-1789).
அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).
அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).

இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல "முஸ்லிம் லடினோஸ்" (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.

ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.

கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?

இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.

கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?

இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.

இன்ஷா அல்லாஹ்...தொடரும்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

நம் எல்லோருக்கும் இறைவன் நல்வழி நல்குவானாக...ஆமின்...

References:1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick4. History of United States - endotwikipediadotorg5. Islamic Spain - British Broadcasting Service (BBC)6. Isabella I of castile - endotwikipediadotorg.7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotukMy sincere thanks to1. Br.Eddie of thedeenshowdotcom
நன்றி :ஆஷிக் அஹ்மத் அ

துபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கைகொடுக்கும் புதிய உடன்பாடு


துபாய்:கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டு நிறுவனத்துக்கு கைகொடுக்கும் விதத்தில் ஒரு புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.இதன்படி இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன்தொகையான 23.5 பில்லியனில் 14.4 பில்லியன் டாலரை இரண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்ள கடன்கொடுத்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. 5 ஆண்டுகள் மற்றும் 8 ஆண்டு தவணைகளில் இந்த கடன் தொகை செலுத்தப்படும்.மீதியுள்ள 8.9 பில்லியன் டாலர் கடனை, துபாய் அரசே செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம், உடனடியாக இந்த பெரும் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பித்துள்ளது துபாய் வேர்ல்டு.துபாய் வேர்ல்டு நிறுவனத்தின் கடன் நெருக்கடியால் உலக சந்தையே பெரும் சரிவுக்குள்ளானது நினைவிருக்கலாம்.
நன்றி:இந்நேரம்

மே 24, 2010

கடல் நீர் குடி நீராக மாறும் அதிசயம் !!!

நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோரும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் . ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகல்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி.

ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம் . ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள் . அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டிருக்கும் . இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம் .
இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது .அமேசான் அமேஸ் என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றுதான்.

திருக்குர்ஆன் சொல்கிறது.....
இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும்இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (திருக்குர்ஆன் 27:61)

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்ப்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.(திருக்குர்ஆன் 55:19,20)

துடிக்​காத துப்​பாக்​கி​கள்!



என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெரிக்காவுக்கு உணர்த்​தி​விட்​டது.​​ஆப்​கா​னிஸ்​தா​னில் கடந்த சில ஆண்​டு​க​ளா​கவே தங்கி சண்டை போட்டு​வ​ரும் அமெ​ரிக்​கா​வுக்கு,​​ இந்​தத் தலி​பான்​களை நம்​மால் அடக்​கவே முடியவில்லையே ஏன்? என்ற கேள்வி மண்​டை​யைக் குடைந்து கொண்​டி​ருந்​தது.​​அமெ​ரிக்க ராணு​வத்​தின் ஆய்​வுப் பிரிவு களத்​தில் சென்று செய்த சில ஆய்​வு​க​ளுக்​குப் பிற​கு​தான் கோளாறு எங்கே என்று தெரி​ய​வந்​தது.​​


அமெ​ரிக்கா இப்​போது எம்-​4 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​து​கி​றது.​ இது மிக​வும் நவீ​ன​மான துப்​பாக்கி என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.​ 5.56 மில்லி மீட்​டர் குறுக்​க​ள​வுள்ள குண்​டு​கள் இதில் பயன்படுத்தப்படுகின்​றன.​ ​​வியட்​நாம் போரில் பயன்​ப​டுத்​திய எம்-​16 ரக துப்​பாக்​கியை மேம்​ப​டுத்தி,​​ நவீ​னப்​ப​டுத்​தி​ய​தன் மூலம்​தான் எம்-​4 உரு​வாக்​கப்​பட்​டது.​ அப்​ப​டி​யி​ருந்​தும் இது பயன் தரா​மல் இருப்​பது ஏன் என்று ஆய்​வுக்​குழு இப்​போது கண்​டு​பி​டித்​து​விட்​டது.​​தலி​பான்​கள் நவீன துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தா​மல்,​​ இன்​னும் பழைய​கால துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்​து​கின்​ற​னர்.​முதல் கார​ணம்,​புதிய துப்​பாக்​கி​க​ளுக்கு நிறைய செல​வ​ழிக்க வேண்டும்.​ அடுத்து,​​ பழைய துப்​பாக்​கி​க​ளைக் கையாண்ட அனு​ப​வம் தரும் நம்​பிக்கை கார​ண​மாக துப்​பாக்​கியை மாற்​றிக்​கொள்ள அவர்​கள் விரும்​ப​வில்லை.​ மூன்​றா​வ​தாக,​​ தங்​க​ளு​டைய எதி​ரி​களை அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்த பழைய துப்​பாக்​கி​களே தலிபான்களுக்​குப் போது​மா​ன​தாக இருக்​கின்​றன.​​


அமெ​ரிக்கா பயன்​ப​டுத்​தும் எம்.-​4 ரக நவீன துப்​பாக்​கி​கள் சில நிமி​ஷங்​க​ளுக்​கெல்​லாம் ஏரா​ள​மான குண்​டு​களை துரி​த​க​தி​யில் உமிழ்ந்துவிடு​கின்​றன.​ இந்​தத் துப்​பாக்கி வியட்​நா​மி​லும் ஈராக்​கி​லும் ஓர​ள​வுக்​குப் பலன் தந்​த​தற்​குக் கார​ணமே எதி​ரி​கள் நகர்ப்​பு​றங்​க​ளில்,​​ மிக அரு​கில் வந்து சிக்​கி​ய​து​தான்.​ வியட்​நா​மில் நக​ரங்​க​ளி​லும் காடு​க​ளி​லும் எதி​ரி​களை மிக நெருக்​க​மாக சந்​தித்து சுட்​ட​னர்.​ எனவே இந்​தத் துப்​பாக்​கி​க​ளின் கொல்​(லும்)​திறன் கூடு​த​லாக இருந்​தது.​​ஈராக்​கில் பாக்​தாத்,​​ ரமாடி,​​ பலூஜா போன்ற நக​ரங்​க​ளில்​தான் அமெரிக்கப் படை​கள் அதி​கம் சுட்​டன.​ அங்​கெல்​லாம் எதி​ரி​கள் மிக அரு​கில் வந்து துப்​பாக்​கிக் குண்​டு​களை வாங்​கிக் கொண்​ட​னர்.​​


ஆப்​கா​னிஸ்​தா​னமோ மலைப் பாங்​கான பகுதி.​ இங்கே தலி​பான்​க​ளைப் பார்த்து அமெ​ரிக்க வீரர்​கள் சுட்​ட​துமே அந்த குண்​டு​கள் சீறிப்​பாய்ந்​தா​லும் எதி​ரி​கள் இருக்​கு​மி​டம் அரு​கில் செல்​லும் போது வேகம் குறைந்து,​​ இலக்கி​லி​ருந்து விலகி தாக்​கு​வ​தால் தாக்​கு​த​லுக்கே வலு​வில்​லா​மல் போய்​வி​டு​கி​றது.​​தலி​பான்​கள் அமெ​ரிக்க வீரர்​கள் வரு​வ​தைக் கவ​னிக்​கா​மல் எங்​கா​வது பார்த்​துக் கொண்​டும்,​​ போய்க்​கொண்​டும் ​ இருந்​தா​லும் அமெ​ரிக்க துப்பாக்​கி​க​ளின் சத்​தம் அவர்​களை உஷார்​ப​டுத்​தி​வி​டு​கி​றது.​ அத்​து​டன் அந்த குண்​டு​கள் வலு​வில்​லா​மல் இருப்​ப​தால் சாதா​ரண தடுப்​பு​கள் மூலமே தலி​பான்​கள் அடி​ப​டா​மல் தப்பி விடு​கின்​ற​னர்.​


அதே சம​யம் அவர்​கள் வைத்​துள்ள பழ​மை​யான துப்​பாக்​கி​கள் 2,000 அடி முதல் 2,500 அடி வரை​யுள்ள இலக்​கு​க​ளைக்​கூட ஊடு​ரு​விச் செல்​லக்​கூ​டி​யவை.​ எனவே தலி​பான்​கள் திருப்​பிச்​சுட்​டால் அந்த குண்​டு​கள் அமெரிக்க வீரர்​கள் மீதும் அவர்​க​ளு​டன் செல்​லும் இதர வீரர்​கள் மீதும் பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்​ப​டுத்​து​கின்​றன.​​இந்த ஆய்வு கார​ண​மாக துப்​பாக்​கி​களை மாற்​றிக்​கொள்ள அமெ​ரிக்க ராணு​வத் தலைமை முடிவு செய்​தி​ருக்​கி​றது.​


அத்​து​டன் தன்​னு​டைய எல்லா படைப்​பி​ரி​வு​க​ளி​லும் குறி​பார்த்​துச் சுடும் திற​மை​யுள்ள வீரர்​கள் 10 அல்​லது 12 பேரை குழு​வாக நிய​மித்​துக் கொண்டு,​​ தலி​பான்​கள் பயன்​ப​டுத்​து​வ​தைப் போன்ற பழைய,​​ அதே சம​யம் வலு​வான துப்​பாக்​கி​களை அவர்​க​ளி​டம் தந்து தலி​பான்​க​ளுக்கு ஈடு கொடுக்க அமெ​ரிக்கா முடிவு செய்​தி​ருக்​கி​றது.​​ஆப்​கா​னிஸ்​தா​னர்​களை முத​லில் அடக்க முற்​பட்ட பிரிட்​டி​ஷார் ​(1832-1842) பிரெய்ன் பெஸ் ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தி​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​களோ ஜெசைல் பிளிண்ட்​லாக்ஸ் என்​கிற பழைய ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்தி அவர்​க​ளு​டைய தாக்​கு​தல்​களை முறி​ய​டித்​த​னர்.


​​1980-களில் சோவி​யத் யூனி​ய​னைச் சேர்ந்த ராணுவ வீரர்​கள் ஏ.கே.​ 47 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​திப் பார்த்​த​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​கள் இரண்​டா​வது உல​கப் போரில் பயன்​ப​டுத்​தப்​பட்ட லீ-​என்​ஃ​பீல்டு ரக துப்​பாக்​கி​க​ளைக் கொண்டே அவர்​களை முறி​ய​டித்​த​னர்.​ இந்த ரக துப்​பாக்​கி​யில் பெரிய லீவ​ரும் போல்​டும் இருக்​கும்.​​இப்​போது அமெ​ரிக்கா எம்.​4 ரக துப்​பாக்​கி​க​ளுக்​குப் பதி​லாக எம் 110 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்த முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ இவை 2,500 அடி தொலை​வு​வரை பாய்ந்து இலக்​கு​களை நாசப்​ப​டுத்​தும்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னிய தலி​பான்​கள் போர்த் திறத்​தைத் தங்​க​ளு​டைய மூதா​தை​யர்​க​ளி​ட​மி​ருந்து பெற்​றி​ருப்​ப​தால்,​​ காலத்​துக்​கேற்ற நவீன ரகங்​களை நாடா​மல்,​​ போர்க்​க​ளத்​துக்​கேற்ற நம்​ப​க​மான துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.


எது எப்படியோ மேலே சொன்னது போன்று என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெ​ரிக்​கா​வுக்கு உணர்த்​தி​விட்​டது.
நன்றி :தினமணி


மாநில தேர்​தல் ஆணை​யா​ள​ராக் சையத் முனீர் ஹோடா நிய​ம​னம்

தமிழ்​நாடு மாநில தேர்​தல் ஆணை​யா​ள​ராக மூத்த ஐ.ஏ.எஸ்.​ அதிகாரியான சையத் முனீர் ஹோடா நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.​இ​து​வரை அந்​தப் பத​வி​யில் இருந்த டி.​சந்​தி​ர​சே​க​ர​னின் பத​விக் காலம் மே 21 உடன் நிறை​வ​டைந்​தது.​மு​னீர் ஹோடா நிய​ம​னம் குறித்து மாநில ஆளு​நர் சுர்​ஜித் சிங் பர்னாலா சனிக்​கி​ழமை ஆணை பிறப்​பித்​தார்.​ப​தவி ஏற்​கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டு காலத்​துக்கு அந்​தப் பதவி​யில் முனீர் ஹோடா இருப்​பார்.​இ​வர் ஏற்​கெ​னவே தமி​ழக அர​சின் உள்​துறை செய​லா​ளர் உள்​ளிட்ட பொறுப்​பு​க​ளில் இருந்​துள்​ளார்.​ இப்​போது தமிழ்​நாடு பவர் பைனான்ஸ் கார்ப்​ப​ரே​ஷ​னின் நிர்​வாக இயக்​கு​ந​ராக உள்​ளார்

மே 23, 2010

ஹஜ் பயணிகள் தேர்வுக்கு சென்னையில் மே 27-ல் குலுக்கல்

சென்னை, மே 22: ஹஜ் புனித யாத்திரை செல்வதற்கு பயணிகளைத் தேர்வு செய்வதற்கானகுலுக்கல் மே 27-ம் தேதி சென்னையில் நடக்கிறது என்று தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கா. அலாவுதீன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து 2994 பேர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுவர் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து விண்ணப்பித்து இன்னும் தேர்வு செய்யப்படாத 202 பேருக்கு இடம் ஒதுக்கியது போக மீதி 2792 பேர் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
இதற்கு 1204 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
சென்னை ராயப்பேட்டையில் நியூ கல்லூரியில் காலை 10 மணிக்கு குலுக்கல் நடைபெறும்
விண்ணப்பம் செய்திருப்பவர்கள் இந்தக் குலுக்கலில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தை உலுக்கிய விமான விபத்துக்கள்

1962 ஜூலை 7:அல் இத்தாலியா 771 விமானம் மும்பையிலிருந்து 84 கிலோமீட்டர் தொலைவில் தகர்ந்து வீழ்ந்தது. 94 பேர் மரணமடைந்தனர்.

1978 ஜனவரி 1:ஏர் இந்தியாவின் 855 விமானம் மும்பை பாந்த்ரா கடலில் தகர்ந்து வீழ்ந்தது. 213 பேர் மரணமடைந்தனர்.


1982 ஜூன் 21:ஏர் இந்தியா 403 விமானம் மும்பை ஸாஹர் சர்வதேச விமானநிலையத்தின் அருகில் நொறுங்கி வீழ்ந்ததில் 99 பயணிகளில் 15 பேரும், 12 விமானப் பணியாளர்களில் இரண்டுபேரும் மரணித்தனர்.


1985 ஜூன் 23:மாண்ட்ரீடிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 182 விமானம் ஐரிஷ் ஏர் பேஷின் மீது வீழ்ந்ததில் 329 பேர் மரணித்தனர்.


1988 அக்டோபர் 19:இந்தியன் ஏர்லைன்சின் 113 விமானம் அஹ்மதாபாத் விமானநிலையத்தில் தகர்ந்து வீழ்ந்ததில் 130 பேர் மரணமடைந்தனர்.


1990 பிப்ரவரி 14: இந்தியன் ஏர்லைன்சின் 605 விமானம் பெங்களூருக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் 92 பேர் மரணமடைந்தனர்.


1991 ஆகஸ்ட் 16:இம்பாலிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள ஒரு மலைக்குன்றில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தகர்ந்து வீழ்ந்ததில் 69 பேர் மரணித்தனர்.


1993 ஏப்ரல் 26:இந்தியன் ஏர்லைன்ஸின் 491 விமானம் அவுரங்காபாத்தில் டேக் ஆஃபிற்கிடையே ஒரு ட்ரக்குடன் மோதியதில் 63 பேர் மரணமடைந்தனர்.


1996 நவம்பர் 12:சவூதி அரேபியன் ஏர்லைன்சும், கஜகஸ்தான் ஏர்லைன்சும் இந்திய ஆகாய மார்க்கத்தில் மோதியதில் 349 பேர் மரணமடைந்தனர்.


2000 ஜூலை 17:அலைன்ஸ் ஏர் ஃப்ளைட் சி டி 7412 விமானம் பாட்னா விமானநிலையத்தில் தகர்ந்து வீழ்ந்ததில் 60 பேர் மரணமடைந்தனர்.


நன்றி:பாலைவனத் தூது


இந்த அநீதிக்கு யார் பொறுப்பு?

1997 ஆம் ஆண்டு ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம் நீருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கடந்த 21-5-2010 அன்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் இரண்டாம் தாரக் குடிமக்களாக நடத்தப்படுவது போல் நீதித்துறையிலும் முஸ்லிம்களின் உரிமைகள் மீதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.
கடுமையான குற்றச்சாட்டால் கைது செய்யப்படுவோர் முஸ்லிமாக இல்லாவிட்டால் சில மாதங்களிலேயே அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர்.
காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட எத்தனையோ குற்றவாலிகள் சில மாதங்களில் ஜாமினில் வெளியே வந்துள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் சமுதயாத்தின் முக்கிய பிரமுகராக இருந்து கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபாவுக்கு ஜாமின் வழங்கிட தொடர்ந்து நீதிமன்றம் மறுத்து வந்தது.
12 ஆண்டுகளாக குணங்குடி ஹனீபா சட்ட ரீதியாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப் போயின.
குற்றமற்றவர் என்று இப்பொழுது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருடைய 12 ஆண்டு காலத்தை திருப்பிக் கொடுக்குமா?
பொய் வழக்கில் கைது செய்த கருணாநிதியும் அவரது அதிகாரிகளும் திருப்பிக் கொடுப்பார்களா?
12 ஆண்டு சிறை வாசத்தில் தனது இளமையையும் ஆராக்கியத்தையும் இழந்து தனிமனித சுதநத்திரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டது போல் இவர்களுக்கு ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்வார்களா?


குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ஹனீபா கைது செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் பட்ட துயரம் போல் கருணாநிதியின் குடும்பத்துக்கும் நீதிபதிகளின் குடும்பத்திற்கு ஏற்பட்டால் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்று இவர்கள் நினைத்து பார்க்க வேண்டாமா?
குணங்குடி ஹனீஃபாவை ஜாமினில் விடக் கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பல வருடங்களாக குரல் எழுப்பி வந்தன.
தமழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த தேர்தல் முடிந்த பின் துனை முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து குணங்குடி ஹனீபாவை ஜாமினில் விடுங்கள் என வழியுறுத்தியது.
ஜாமின் மனு போடச் சொல்லுங்கள் அரசு தரப்பில் ஆட்சேபினை தெரிவிக்க மாட்டோம் என ஸ்டாலின் உறுதியளித்தார். இதை நம்பி குணங்குடி ஹனீபா ஜாமின் மனு தாக்கல் செய்த போது அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததால் கடைசி ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
திமுக வின் இந்த பச்சைத் துரோகம் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக வுடன் இருந்த நல்லுறவை அன்றோடு துண்டித்துக் கொண்டது.
இது குறித்து கடுமையான தலையங்கம் உணர்வில் எழுதப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்க்ள.
அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து வகையிலான முட்டுகட்டைகளை போட்ட போதும் பொய் வழக்கு என்பதால் குணங்கு ஹனிஃபா விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.
ஒரு வேளை அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூட அவர் சிறையில் கழித்த 12 ஆண்டுகளை விட குறைவாகவே தான் தண்டனை வழங்கப்பட்டிக்கும் என்பதை நினைக்கும் போது குணங்குடி ஹனிபாவிற்கு எத்தகைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குணங்கு ஹனீபா அவர்கள் விடுதலை செய்பட்டு வரும் போது அனைத்து இயக்கத்தினரும் வரவேற்க வந்த போது தவ்ஹீத் ஜமாஅத் ஏன் வரவில்லை என்று சிலருக்கு தோன்றலாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐ பொருத்தவரை வரவேற்பு கலாச்சாரத்தை ஏற்றக் கொள்வதில்லை.

கஷ்மீரில் முஸ்லிம் பெரும்பான்மையை தகர்க்க சென்ஸசில் திருட்டுத்தனம்- கிலானி குற்றச்சாட்டு


புதுடெல்லி:'கஷ்மீரில் வசிக்காதவர்களையெல்லாம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்தியது ஜம்மு கஷ்மீரில் முஸ்லிம் மக்களின் பெரும்பானமையை தகர்ப்பதற்கான சதி' என ஹுரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் செய்யத் அலிஷா கிலானி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்சஸில் தேவையில்லாமல் தலையிடுவதாகவும், இதற்காக மாநிலத்திற்கு வெளியேயிருந்து சென்சஸ் பணிக்கு அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.'கஷ்மீரில் வசிக்காதவர்களையெல்லாம் சென்சஸில் உட்படுத்தினால் கஷ்மீரில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகிவிடுவர். இதற்கெதிராக முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். முஸ்லிம்களின் குடிமகன் கட்டத்தில் கஷ்மீர் முஸ்லிம் என்றுதான் குறிப்பிட வேண்டும்.கஷ்மீர் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு கேட்டை உருவாக்கும் விதமாக தயாரிக்கப்பட்ட இண்டர்-டிஸ்ட்ரிக்ட் ரிக்ரூட்மெண்ட் மசோதாவும் இதேரீதியான சதித்திட்டமாகும்.அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு 8 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் இம்மசோதா கஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.கஷ்மீரில் கில்ஜித்தா, பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுய நிர்ணய உரிமையை விட குறைந்த எந்த ஃபார்முலாவும் தேவையில்லை.ராணுவம் தான் மாநிலத்தின் சூழலை கெடுக்கிறது. ராணுவத்தை முற்றிலும் வாபஸ் பெறாமல் சமாதானத்திற்கு வாய்ப்பில்லை. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பி.எஸ்.எ போன்ற கறுப்புச் சட்டங்களின் மூலம் சிறையிலடைக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யவேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவைக்கூட அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர்'. இவ்வாறு கிலானி கூறுகிறார்.
செய்தி:பாலைவனத் தூது & தேஜஸ் மலையாள

மே 22, 2010

மங்களூர் விமானநிலைய லேண்டிங் எப்பொழுதுமே பீதிவயப்படுத்துவதாகும்!

துபை:'மங்களூருக்கு விமானத்தில் பயணம் செய்வது பீதிவயப்படுத்தும் ஒன்றாகும்' என இவ்வழியே அடிக்கடி பயணம் செல்லும் கல்ஃப் நியூஸின் சீனியர் ரிப்போர்டர் சத்திய நாராயாணன் கூறுகிறார்.'மலைக்குன்றின் மேல் ஒரு மேசையை வைத்தால் எவ்வாறிருக்குமோ அதைப்போல்தான் மங்களூர் பாஜ்பே ஏர்போர்ட்.மிகவும் சிறிய ரன்வேயில் சிறிது நகர்ந்தாலே அது கீழே விழும் நிலையில் உள்ளது. ஓவ்வொரு பயணத்திலும் சில இஞ்சுகள் வித்தியாசத்தில் விமானம் லேண்ட் செய்வதை பீதியுடனே காண்கிறோம்.' என்று நாராயணன் மேலும் கூறினார்.துபை:'

மே 21, 2010

ரயில் குண்டுவெடிப்பு வழக்கு:குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 8 சிறைவாசிகள் விடுதலை


1997-ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுவித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி சேரன், வைகை, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடித்தது. இதில் 18 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுவித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர்- NSSO ஆய்வறிக்கை

முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறுகிறது.உயர்கல்வியில் முஸ்லிம்கள் பழங்குடி மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.மத்திய புள்ளிவிபரம் மற்று திட்ட அமுலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NSSO வெளியிட்டுள்ள அறிக்கையின் தலைப்பு, ’இந்தியாவில் கல்வி, 2007-08:பங்களிப்பும் செலவும்’ என்பதாகும்.இவ்வறிக்கை கூறுவதாவது: ’100 முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்றால் அவர்களில் 10 பேர் மட்டுமே உயர்வகுப்பு கல்வி பயில செல்கின்றனர். ஆனால் பழங்குடியினரில் 11 பேரும், அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினரில் 12 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 14 பேரும் செல்வதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது'.’இந்தியாவில் கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய சமூகம் என்பது வெளிப்படையான ரகசியம்’ என லோக் பரிஷத் என்ற அரசு சாரா நிறுவனத்தின் அர்ஷத் அஜ்மல் கூறுகிறார்.இவ்வறிக்கை மேலும் ஒரு உண்மையை தெரிவிக்கிறது. அது என்னவெனில் நகரபகுதியிலிலுள்ள முஸ்லிம் மாணவர்கள் 100 பேரில் 7 பேர்தான் உயர்வகுப்பு கல்விக்கு பயில செல்கின்றனர். ஆனால் இது கிராமப்பகுதியில் 100க்கு 12 ஆகும்.இதற்கு என்னகாரணம் அஜ்மல் கூறுகிறார், "நகரப்பகுதியில் முஸ்லிம்கள் தொழிலாளிகளாகவும், ரிக்‌ஷா ஓட்டுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதே கடினமாக உள்ளது. இந்நிலையில் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க பள்ளிக்கூடம் அனுப்புவது கடினம்" என்றார்.மேலும் அவர் தெரிவிக்கையில், "கல்வியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கட்டாயமாகும். ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை அமுல்படுத்த வேண்டும்". என்றார்.கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்ததாக கல்வியில் நல்லநிலையில் உள்ளனர். இவ்வாய்வு கடந்த ஜூலை 2007 ஆம் ஆண்டு முதல் ஜூன் 2008 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டதாகும்.இந்த ஆய்வு 4,45,960 நபர்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 63,318 நகரப்பகுதி குடும்பங்களையும், 37,263 கிராமப்புற குடும்பங்களையும் சார்ந்தவர்கள். 7,953 கிராமங்கள், 4,682 நகர ஒன்றியம் ஆகியவற்றில் நடத்தப்பட்டது

மே 20, 2010

கடலூரில் சூறாவளியுடன் மழை


கடலூர் : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.வங்கக் கடலில் உருவாகியுள்ள 'லைலா' புயல் சின்னம் காரணமாக கடலூர், நாகை மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன், குளிர்ந்த காற்றும் வீசியது. கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண் ருட்டி பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:தொழுதூர் 90, மேமாத்தூர் 51, கீழ்செருவாய் 43, புவனகிரி 24, பெலாந்துறை 3, கொத்தவாச்சேரி 20, விருத்தாசலம் 17, சேத்தியாத்தோப்பு 15.5, பண்ருட்டி 15.20, சிதம்பரம் 12, லக்கூர் 11, காட்டுமன்னார்கோவில் 10, கடலூர் 9.6, வானமாதேவி 8.3, குப்பநத்தம் 6.2, காட்டுக்கூடலூர் 5, பரங்கிப்பேட்டை 5, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் வேப்பூர் 4 மி.மி., அளவு மழை பெய்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் 600 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்த 'லைலா' புயல் நேற்று அதிகாலை சென்னையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் காலை 6.20 மணிக்கு 40 முதல் 50 கி.மீ.,வேகத்தில் 30 நிமிடம் வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.திடீர் சூறாவளிக் காற்றால் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் விழுந்தன.கடல் அலை 12 அடி முதல் 15 அடி வரை எழும்பி சீற்றத்துடன் காணப்பட்டது. கரைகளில் நிறுத்தி வைத்திருந்த கட்டுமரங்களை ராட்சத அலைகள் கடலில் இழுத்து சென்றன.

கடலூரில் ரூ.25,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை



கடலூரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.25,000 கோடி செலவில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சி.பி.சி.எல்.) தலைவர் பி.எம்.பன்சால், நிர்வாக இயக்குனர் கே.பாலச்சந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்...கடந்த ஆண்டில் இதுவரை கண்டிராத அளவு கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டதாலும், அதிக விலையுள்ள கச்சா எண்ணெயை சுத்திகரிக்க வேண்டிய கட்டாயத்தாலும் ரூ.397.28 கோடி நஷ்டம் ஏற்பட்டது.ஆனால், இந்த ஆண்டில் வரிக்கு பின் ரூ.603.22 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. 2009-2010ம் ஆண்டில் விற்பனை மதிப்பு ரூ.29,183.84 கோடியை எட்டியுள்ளது.அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.10,000 கோடி முதலீட்டில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.காவிரிப் படுகையில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ள சிதம்பரனார் ஜெட்டியில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதேபோல், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சுத்திகரிப்பு ஆலைக்கு ரூ.100 கோடி செலவில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.மணலி சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை கொண்டு வருவதற்காக எண்ணூருக்கு அருகே சொந்தமாக துறைமுக வசதிகளை நிறுவுவதற்கான திட்டத்தையும் ஆராய்ந்து வருகிறோம்.ரூ.1,200 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டம், ஒப்புதல் பெறப்பட்ட நாளில் இருந்து 36 மாதங்களில் நிறைவடையும்.கடலூரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.25,000 கோடி செலவில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.இதேபோல், ரூ.65 கோடி செலவில் மணலியில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை அமைக்கப்படும் என்றனர்.


Source: thatstamil

நபிகளாரின் கேலிச்சித்திரம் வரையும் போட்டியை அறிவித்த ஃபேஸ்புக்கிற்கு பாகிஸ்தானில் தடை




இஸ்லாமாபாத்:அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்...)அவர்களை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வரையும் போட்டியை அறிவித்த ஃபேஸ் புக்கிற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.caricatures என்றழைக்கப்படும் கேலிச்சித்திரங்களை போஸ்ட் செய்ய ஃபேஸ் புக் தனது பயனீட்டாளர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்தது. ஏராளமானோர் இத்தகைய கேலிச்சித்திரங்களை வரைந்து அனுப்பவும் செய்தனர்.ஃபேஸ்புக்கின் இத்தகைய நடவடிக்கை முஸ்லிம் சமுதாயத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதற்கெதிராக எதிர்ப்பு எழவேண்டும் எனக்கூறி பாகிஸ்தானில் இஸ்லாமிக் லாயர்ஸ் மூவ்மெண்ட் என்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ஃபேஸ் புக்கிற்கு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ் அளிக்க தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் ஃபேஸ்புக்கிற்கு தடை ஏற்படுத்தியதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாகிஸ்தானில் 4.5 கோடி ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் உள்ளனர். 'முஹம்மது டே' என்ற பக்கத்திற்கு 40000 நபர்களின் ஆதரவு உள்ளது. அதற்கெதிரான பக்கத்திற்கு 53,000 நபர்களின் ஆதரவு உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மே 19, 2010

ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி- முதலிடத்தில் இந்தியா

ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் மட்டும் 24.6 பில்லியன் திர்ஹாம் அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. இது யுஏஇ நாட்டின் மொத்த இறக்குமதியில் 60 சதவீதமாகும்.இந்த நாடுகளுக்கு அடுத்த நிலையில் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, மலேசியா ஆகியவை உள்ளன.

நாம் அந்நியர்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
This Article has been updated at 11.10 hrs, 17th May 2010.Updated Info: "Strangers" Video included at the end of the article.
சகோதரர் காலித் யாசின் (Khalid Yasin) அவர்கள், தன் பதினாறாம் வயதில் இஸ்லாத்தை தழுவியவர். பலரையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தவர். அவர், "Strangers" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

"சிறு வயதிலிருந்தே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்மையாளராக, உண்மையாளராக அறியப்பட்டவர்கள்.

அப்படிப்பட்டவர், ஒரு சமயம் தன் மக்களை அழைத்து, ஒ குறைஷிகளே, உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த மலைக்கு பின்னாலிருந்து ஒரு படை நம்மை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நம்புவீர்களா? என்று கேட்ட போது,

ஆம், நம்புவோம் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அந்த மக்கள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அப்படி. மக்கா நகர மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்கள் அவர்கள்.

பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்தார்கள், அப்படியென்றால் இதையும் கேளுங்கள். இறைவன் ஒருவனே, அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. நான் அவனுடைய தூதர், என்று கூறி சிலை வணக்கங்களை கண்டித்தபோது, அந்த மக்களுக்கு அவர் கூறிய அந்த செய்தி முற்றிலும் அந்நியமாகத் தெரிந்தது.

இது நாள் வரை பெரிதும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட, உண்மையாளராக இருந்த அவர் அந்த நாளிலிருந்து அந்நியராகப் பார்க்கப்பட்டார்.

ஆம், இனி அவர்களில் ஒருவரில்லை நாயகம் (ஸல்) அவர்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தியை ஏற்றுக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்த ஏழையும் பணக்காரனும், கருப்பு நிறத்தை கொண்டவனும் வெள்ளை நிறத்தை கொண்டவனும்,அரபியோ அரபி அல்லாதவரோ,அடிமையோ சுதந்திரமானவனோ என்று அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்நியரானார்கள்.

மக்கா நகரில் பெரிதும் மதிக்கப்பட்டாரே அபூபக்கர் (ரலி) அவர்கள், அவரும் அந்நியரானார். முஹம்மது (ஸல்) அவர்கள் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை கொன்றொழித்து விட்டுதான் வருவேன் என்று ஆவேசமாக புறப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள். அவர் கொலை வெறியுடன் புறப்பட்ட அந்த நாளிலேயே முஸ்லிமானார். அந்த நாளிலிருந்து அவரது சமூகத்தில் அவரும் அந்நியரானார். இன்றைக்கு அந்நியராக இருக்கும் நாம், அந்த அந்நியர்களுடன் தான் நம்மை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்காக மாபெரும் தியாகங்களை செய்த அவர்களோடுதான் நம் குழந்தைகளை தொடர்பு படுத்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எவரிடத்தில் இந்த மூன்று குணங்கள் இருக்கிறதோ அவர் ஈமானை சுவைத்து விட்டார் என்று கூறி, முதல் குணமாக கூறியது, அவர் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் வேறு யாரையும் விட அதிகம் நேசிப்பார் என்பது.

ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தன் தந்தையிடம் கூறினார்,

"தந்தையே, உங்களை போரில் சந்திக்க நேர்ந்த போது, உங்கள் மீதான பாசத்தாலும், மரியாதையாலும் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டேன்"

அப்போது அபூபக்கர் (ரலி) கூறினார்கள், "வல்லாஹி, நான் உன்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை கொன்றிருப்பேன். ஏனென்றால் நீ அப்போது எதிரி கூட்டத்தில் இருந்தாய்".

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் யாரையும் விட அதிகம் நேசித்தவர்கள் அந்த அந்நியர்கள்.

இதோ இங்கு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு உறவினர்கள் இருக்கலாம். அவர்கள் ஹராமான பொருட்களை விற்று கொண்டிருக்கலாம், ஹராமான செயல்களை செய்து கொண்டிருக்கலாம், உங்கள் வீட்டில் இருந்துக்கொண்டு தொழாமல் இருக்கலாம். ஆனால் நீங்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அவர்களை பார்த்தால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்லுவீர்கள், அவர்களுடன் காபி அருந்துவீர்கள், அவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசுவீர்கள், அவர்களை கடந்து செல்லும்போது வாழ்த்து சொல்வீர்கள், ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு புறம்பாக நடக்கும் போது அதை எடுத்து சொல்லமாட்டீர்கள். இதற்க்கெல்லாம் நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அதிகம் நேசிக்காததே காரணம்.

இன்னும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குள் இன்னும் இஸ்லாத்தை பற்றிய தீப்பொறி இருக்கிறது. ஆனால் அவர்களோ குப்பைகளில் உழல்கிறார்கள், அதையே உண்கிறார்கள், அந்த குப்பைகளை வீட்டிற்குள்ளும் கொண்டு வந்து விடுகிறார்கள். நான் யாரைப்பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இங்கே இருப்போரில் அப்படிப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். அல்ஹம்துலில்லாஹ்.ஏனென்றால் இதுதான் உங்களுக்கு வேறு எங்கிருப்பதை காட்டிலும் சிறந்த இடம். நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள்.

ஆக, முஸ்லிங்களே, அந்த அந்நியர்கள் செய்த தியாகத்தை, வாழ்ந்த வாழ்க்கையைத் தான் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும்.

அவர்கள் தான் நம் பிள்ளைகளுக்கு ஹீரோக்களாக இருக்க வேண்டும், மைக்கல் ஜோர்டனோ, மைக்கல் ஜாக்சனோ, கால்பந்து விளையாட்டு வீரர்களோ, கூடைப்பந்து விளையாட்டு வீரர்களோ அல்ல.

தினமும் நம் பிள்ளைகளுக்கு அந்த அந்நியர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றிய டேப்களை கேட்க செய்வோம். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவோம். இப்படியே ஒரு 90 நாட்கள் செய்து பாருங்கள். அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை நீங்கள் காணலாம். அவர்களுக்கு பரிசளிப்பதை ஒரு முதலீடாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த முதலீட்டை நீங்கள் செய்யத் தயங்கினால், வெளியே இருந்து தவறான செயல்களுக்கு அவர்களை தூண்ட, வேறு சிலர் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நம் பிள்ளைகளுக்கு ஒசாமா இப்ன் ஜைத் (ரலி) யாரென்பதை சொல்லித்தருவோம். அந்த பதினாறு வயது சிறுவனை நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, அலி (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) என்று அனைவரும் இருந்தபோதும், இவர்தான் சிறந்தவர் என்று கூறி ஒப்படைத்தார்களே அந்த சிறுவனைப் பற்றி சொல்லி கொடுப்போம்.

அபிசீனியாவில், மன்னர் நஜ்ஜாசியிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அவரை கவர்ந்தாரே ஜாபர்(ரலி), அவரைப் பற்றி சொல்லித் தருவோம்.

களவில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களிடமிருந்து வந்தாரே அபூதர் (ரலி), அவரைப் பற்றி சொல்லித்தருவோம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, மக்கா நகர மக்களிடம் சென்று, லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ் என்று உரக்கச் சொல்ல போகிறேன் என்று அபூதர் (ரலி) சொன்னார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம், வேண்டாம் நீங்கள் அப்படி செய்தால் அவர்கள் உங்களை தாக்குவார்கள் என்று கூறியபோதும், இல்லை நான் சென்று அந்த மக்களிடம் சொல்ல வேண்டும் என்று சென்று, அந்த மக்கள் முன் ஷஹாதாவை உரக்க கூறினார்கள். கூறியதற்கு தண்டனையாக தாக்கப்பட்டார்கள். மயங்கி விழுந்தார்கள். அடுத்த நாள் மறுபடியும் சென்று கலிமாவை உரக்க கூறினார்கள். மறுபடியும் தாக்கப்பட்டார்கள். பின்னர் நாயகம் (ஸல்) அவர்கள், அபூதரை மக்காவை விட்டு வெளியேறச் சொல்லி விட்டார்கள்.

இதோ இவர்கள் தான் அந்நியர்கள். தங்கள் வாழ்க்கை முறையை நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கற்றவர்கள். இறைச் செய்தியையும், நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் மட்டுமே ஏற்று வாழ்ந்தவர்கள்.

முஹம்மது என்ற சகோதரர் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறார். அவர் இஸ்லாமை சரி வர பின்பற்றவில்லை. அதனால் அந்த அலுவலக மேலாளரால் மிதவாத முஸ்லிம் என்று பாராட்டப்படுகிறார்.

ஒரு நாள் நிலைமை மாறுகிறது. முஹம்மது தன் மார்க்கத்தை நன்கு புரிந்துக் கொள்கிறார். மேலாளர் மதியம் மணி 12.30 க்கு, "வாருங்கள் கீழ போய் சாப்பிட்டு வருவோம்" என்கிறார். ஆனால் முஹம்மதோ, "இல்லை, இது லுஹர் நேரம், நான் தொழ செல்ல வேண்டும்" என்கிறார். மேலாளருக்கோ அதிர்ச்சி,

"முஹம்மது என்ன ஆயிற்று உங்களுக்கு?

"இனி என்னால் முன் போல இருக்க முடியாது. இதை நீங்கள் விரும்பவில்லையென்றால் அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை".

எப்போது அவர் அப்படி சொன்னாரோ அந்த நிமிடத்தில் இருந்து அந்நியராகி விட்டார்.
அவர் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றுவதனால் அவரது மேலாளரால் மேலும் மதிக்கப்படலாம். ஆனால் முஹம்மதுக்கு அவர் அந்நியராகும் வரை இது புரிந்திருக்கவில்லை.

நீங்கள் நினைக்கலாம், மிதவாத முஸ்லிம் என்று எதையும் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் உங்களை மதிப்போடு நடத்துவார்கள் என்று. இல்லை, நீங்கள் மிதவாதி என்று சொன்னாலும் அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். உங்களுக்கான உண்மையான மரியாதையெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கிறது. அவன் கட்டளையிட்டதை நீங்கள் முழுமையாக பின்பற்றுவதில் தான் இருக்கிறது.

அதுபோல, ஒரு சகோதரி இருக்கிறார். அவர் இதுநாள் வரை ஹிஜாப் அணிந்ததில்லை, இஸ்லாம் சொல்கின்ற பெண்ணாக வாழ்ந்ததில்லை. அவருடைய கணவரும் அதை பெரிதாக அலட்சியப்படுத்தியதில்லை. ஒரு நாள், குரானைப் படிக்கிறார், சுன்னாஹ்வை படிக்கிறார். கண்களில் கண்ணீர் வழிகிறது. இத்தனை நாளாய் இப்படி வாழ்ந்து விட்டோமே என்று வருந்துகிறார். இனி ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்வது என்று முடிவெடுக்கிறார்.

அவருடைய மாற்றத்தை கண்ட அவரது கணவர், "என்ன ஆயிற்று உனக்கு?" என்று கேட்கிறார்.

"இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொண்டேன், இனி என்னால் முன் போல் வாழ முடியாது"

"நீ அடிப்படைவாதியாகி விட்டாய். இனி நீ எனக்கு தேவையில்லை".

ஆம், இப்போது அந்த சகோதரி அந்நியராகிவிட்டார். அவருடைய கணவர், அவரை விட்டு விலகினால், அல்லாஹ் அவருக்கு வேறொரு அந்நியரை துணையாகக் கொடுப்பான்.

அந்நியர்களாக இருப்பதற்குண்டான விருப்பமும், தைரியமும் நம்மிடம் இருக்க வேண்டும். நீங்கள் அந்நியராக இருப்பதனால் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தாரே கேட்கலாம்.

அல்லாஹ்விடத்தில் அச்சம், நம்பிக்கை, தியாகம், ஒழுக்கம், தைரியம், விசுவாசம், மரியாதை, கல்வியைத் தேடுவது,ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது, சகோதரத்துவம், பொறுமை, ஒத்துழைப்பு ஆகிய இவைகள் தான் அந்நியருக்கான குணநலன்கள்.

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நீங்களும் நானும் அந்நியர்களாக இருக்க வேண்டும். நாம் அந்நியராக இருந்தால், இஸ்லாத்திற்க்கெதிரான சிலரது எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்காது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

அவர்களிடம் அணுகுண்டு, Hydrogen குண்டு என்று பலவிதமான, மனித இனத்திற்கு நாசம் விளைவிக்கக்கூடிய குண்டுகள் இருக்கலாம்.

ஆனால் அல்லாஹ், நமக்கு அவைகளையெல்லாம் விட சக்தி வாய்ந்த குண்டை கொடுத்திருக்கிறான். அதற்கு பெயர் D-BOMB, ஆம் அது DAWAH BOMB. இந்த ஆற்றல் மிகுந்த குண்டு கட்டிடங்களை சிதறடிக்காது, மக்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் இது அவர்கள் உள்ளங்களை ஊடுருவிச் சென்று அவர்களது மனதில் பலமான தாக்கத்தை உண்டு பண்ணி அவர்களையும் அந்நியர்களில் ஒருவராக மாற்றிவிடும் தன்மை கொண்டது.

நீங்களும் நானும் இந்த குண்டை எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆம், நாம் பெற்ற இஸ்லாம் என்ற பொக்கிஷத்தை அவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக இருக்கச் செய்வானாக...

வழி தவறி சென்று கொண்டிருக்கும் சில முஸ்லிம்களை, இறைவன், கூடிய விரைவில் அந்நியர்களில் ஒருவராக திரும்பச் செய்வானாக....

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு"

அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. பதிவின் நீளம் கருதி சகோதரர் காலித் யாசின் அவர்கள் கூறிய பல தகவல்கள் விடப்பட்டுள்ளன. இந்த உரையை முழுமையாக காண விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் வீடியோவை பார்க்கலாம்.
இந்த உரையை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலித் யாசின் அவர்கள் நிகழ்த்தி என்னுள் தாக்கத்தை ஏற்ப்படுத்திய மற்றொரு உரை, "Purpose of Life" என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவில் அவர் நிகழ்த்திய உரை.

அந்த உரையின் முடிவில், இருபதிற்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை தழுவினார்கள். அந்த உரையையும் நீங்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


This Article Inspired by:
1. Sheik Khalid Yasin's Lecture "Strangers".

"Strangers" Video can be downloaded from:
1. http://www.kalamullah.com/khalid-yasin.html

My Sincere Thanks to:
1. One Islam Productions, New South Wales, Australia. http://www.1islam.net
2. Br. Jafar Safamarva

நன்றி
ஆஷிக் அஹ்மத் அ

மே 18, 2010

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம்

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?
எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:
டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?
விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,
42/25,ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ்,இரண்டாவது தளம்
(வி.ஜி.பி. அருகில்),அண்ணா சாலை,
சென்னை -600 002.
தொலைபேசி:044- 2852 7579,2841 4736,98401 16957.
சி.ரங்கநாதன், இயக்குநர்,
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,

source:பாலைவனத் தூது

ஊடக சுதந்திரம் பேச்சளவில் மட்டும்: அமெரிக்காவில் ஏராளமான அரபு சேனல்களுக்கு தடை

வாஷிங்டன்:ஊடக சுதந்திரம் இல்லை என்று ஈரானையும், க்யூபாவையும் பார்த்து கூப்பாடுப் போட்ட அமெரிக்கா 17 அரபு நாடுகளின் தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு விரோதமானது எனக்கூறித்தான் இதுக்குறித்த மசோதா அமெரிக்க காங்கிரஸில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது 395 பேர் ஆதரித்தனர். 2 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போதுள்ள கொள்கைக்கு எதிரானதுதான் இந்த மசோதா.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

காசு போட்டால் தங்கம் கொடுக்கும் வெண்டிங் மெஷின்


உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் காசு போட்டால் பல்வேறு பொருட்களை கொடுக்கும் வெண்டிங் மெஷிண்கள் இருக்கின்றன.

குடிதண்ணீர் முதல் சூடான காஃபி வரை ஏராளமான பொருட்கள் இந்த காசு போட்டால் பொருட்களை கொடுக்கும் இயந்திரங்கள் மூலம் பெறப்படுகின்றன.

ஆனால் 'காசு போட்டால் தங்கம் கொடுக்கும்' ஒரு இயந்திரம் உலகில் முதல் முறையாக செயற்படத் தொடங்கியுள்ளது.

அபுதாபியிலுள்ள ஒரு முன்னணி ஹோட்டலிலேயே இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆடம்பரமும், அதிகமான தேவைகளும், செல்வச் செழிப்பும் இருக்கும் வளைகுடா நாடுகளில் இப்படியான ஒரு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களின் பாணியில் அபுதாபியின் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் இருக்கும் இந்த 'காசு போட்டால் தங்கம் கொடுக்கும் இயந்திரம்' வடிவமைக்கப்பட்டு செயற்படுகிறது.

தங்கத்தின் விலையை தினசரி கவனித்து அதற்கு ஏற்ற வகையில் எவ்வளவு பணத்துக்கு எவ்வளவு தங்கம் என்கிற ரீதியில் கணக்கிட்டு இந்த இயந்திரம் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் ஒன்று, ஐந்து, மற்றும் பத்து கிராம் தங்கக் காசுகளையும், பிஸ்கட்டுகளையும் அளிக்கிறது.

ஜெர்மன் நாட்டின் தொழில்வல்லுநரான தாமஸ் கீஸ்லர் அவர்களின் எண்ணத்தில் உதித்த இயந்திரம் இது.

இந்த இயந்திரத்தின் துவக்க விழாவும் சரியாக திட்டமிட்டே செயற்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு, ஒரு கிராம் 45 டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.

இந்த இயந்திரத்தில் பணத்தைப் போட்டு தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த நிமிடத்தில் உலக அளவில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலையும் கிடைக்கும் என்றும் கீஸ்லர் கூறுகிறார்.