Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 09, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 90.6% மாணவர்கள் தேர்ச்சி!

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இத்தேர்வில் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றார்.  மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார்.  

ப்ளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுஷாந்தி 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆங்கிலத்தில் ஓசூரைச் சேர்ந்த பவித்ரா 198 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். கணிதத்தில் 3882 புலிகள் 200க்கு 200 பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை தேர்வு நடந்தது. இதற்காக 2210 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 74,197 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 38,392 பேர் மாணவிகள். புதுச்சேரியில் 120 பள்ளிகளில் படித்த 13,528 பேரும் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 1 லட்சம் பேர் எழுதினர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதினர். டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.  
தேர்வின்போது, கேள்வித்தாள் படித்து பார்க்க இந்த ஆண்டும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 

விடைத்தாளில் முதல் முறையாக மாணவர்களின் போட்டோ, தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்டவை அச்சிட்டு வழங்கப்பட்டன. ஹால்டிக்கெட்டிலும் மாணவ மாணவிகளின் போட்டோ இடம் பெற்றது.  மாணவர்களின் வருகையை பதிவு செய்ய போட்டோவுடன் கூடிய பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த தேர்வு மையங்களில் மாணவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டன. 

கேள்வித்தாள் இந்த ஆண்டு மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அத்தாட்சியாக மாணவர்களிடம் கையெழுத்து
பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.பிளஸ் 2 தேர்வில் கணக்கு, வேதியியல், விலங்கியல் தேர்வுகளில் சில பிழைகள் இருந்தன. இதைத் தவிர இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பெரிய அளவில் எந்த  குளறுபடியும் நடக்கவில்லை.
இதையடுத்து தேர்வு  முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் இணைய தளம் வழியாகவும், எஸ்எம்எஸ் மூலமாகவும், அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியல்
பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் இன்றே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் இன்றே தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே தனித் தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் பட்டியலை அந்தந்த தேர்வு மையங்களில பெற்றுக் கொள்ள வேண்டும்.

மறுகூட்டல்:
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணபிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் தேவையா, அல்லது மதிப்பெண் மறு கூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்கூட்டியே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பிறகே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

சிறப்பு துணைத் தேர்வு:
மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணபிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதி தேர்வு மையங்களிலும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.தேர்வுத் துறை இணைய தள முகவரி:
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in
www.dinakaran.com

 இது தவிர எஸ்எம்எஸ் மூலம்  தேர்வு முடிவுகளை  தெரிந்து கொள்ள 09282232585 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பி, தேர்வு முடிவுகளை பெறலாம். மேலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பிஷிசி  என்று டைப் செய்து தேர்வு எண்ணை பதிவு செய்து 53576 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.
thanks:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...