Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 16, 2010

எது நிஜம்?:தினமணி தலையங்கம்


நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று. நீதிபதிகளே இப்படியா, நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காண வைத்துவிடுமே என்பதுதான் நமது அச்சத்துக்குக் காரணம்.
கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும், நீதிபதி கியான் சுதா மிஸ்ராவும் தெரிவித்த கருத்து நீதித்துறையையே ஒரு வினாடி அதிர வைத்தது.

""அலகாபாத் உயர் நீதிமன்றத்தைப் பற்றிப் பல புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அந்த நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள் சிலரின் வாரிசுகளும் உறவினர்களும் பட்டம் பெற்று அந்த நீதிமன்றங்களில் பணிபுரியத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சொகுசுக் கார்களும், பிரம்மாண்டமான பங்களாக்களும், வங்கிகளில் பெரும் சேமிப்புகளுமாகக் கோடீஸ்வரர்களாய் வளையவரத் தொடங்கி விடுகிறார்கள்.

எல்லோரும் அப்படி என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. சிலர் தங்கள்மீது களங்கத்தின் நிழல்கூடப் படிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், பலர் தங்களது உறவு முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு செல்வத்தில் கொழிக்கிறார்கள்'' என்பதுதான் அந்த நீதிபதிகள் தெரிவித்த அதிர வைக்கும் கருத்து.
லக்னௌ மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த நிலைமையை மாற்றத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும்கூட அந்த நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். உத்தரப் பிரதேச நீதித்துறை கொதித்து எழுந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தங்களது உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தரக் களங்கம் கற்பித்துவிடும் என்றும் அதை நீதிமன்றக் குறிப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

இப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்க நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு உரிமையும் தகுதியும் உண்டு. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தாத்தா டாக்டர் கே.என். கட்ஜு, மோதிலால் நேருவுக்கு நிகரான வழக்குரைஞர் மட்டுமல்ல, ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியும்கூட. நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தந்தை எஸ்.என். கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். மாமா பி.என். கட்ஜு அதே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவே இருந்தவர். 1991-ல் மார்க்கண்டேய கட்ஜு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்கும்வரை, தனது தந்தையோ, மாமாவோ நீதிபதிகளாக அமர்ந்திருக்கும் நீதிமன்றங்களில் வழக்காடுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.

அப்படி ஒரு பின்னணியுடைய நீதிபதிக்கு, சில நீதிபதிகளும் அவர்களது வாரிசுகளும் நீதித்துறையைக் கேவலப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாதுதான். ஆனால், இப்படி ஒரு கருத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்ட பிறகும், உண்மை வெளிக்கொணரப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டால்தானே மக்களுக்கு நீதித்துறைமீதும், ஆட்சிமுறை மீதும் நம்பிக்கை தொடர முடியும்?

எல்லா உயர் நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் இதேபோன்ற நிலைமைதான் தொடர்கிறதா? அப்படியானால், அதைத் தீர விசாரித்து நீதித்துறையின் கௌரவத்தையும், சாமானியனுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நிலைநாட்ட வேண்டாமா? பணம் கொடுத்துத் தீர்ப்பை வாங்குவது என்று வந்துவிட்டால் நீதித்துறையும் ஒரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம்போல ஆகிவிடுமே, அதை நாம் அனுமதிக்கலாமா?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைச் சந்தித்து மத்திய அமைச்சர் பேசுகிறார் என்று தொலைபேசியைக் கொடுக்க வழக்குரைஞர் துணிந்தது எதனால், எதற்காக என்பதெல்லாம் இப்போது இரண்டாம் பட்சமாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை மறைக்கப் பார்த்திருக்கிறாரோ என்கிற ஐயப்பாடல்லவா மேலோங்கி இருக்கிறது.

கடைசிவரை தன்னிடம் யார் தொடர்புகொண்டு தனது நண்பர்களுக்காக சிபாரிசு செய்தது என்பதை நீதிபதி ரகுபதி தெரிவிக்கவே இல்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகஇருக்கும் ஹெச்.எல். கோகலே, அமைச்சர் ஆ. ராசாவின் பெயரை நீதிபதி ரகுபதி குறிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்தி, அந்தக் கடிதத்தை அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை இருப்பதாகக் கூறியிருப்பது அதிர்ச்சி அலைகளை எழுப்பாமல் என்ன செய்யும்?

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருந்தார், உண்மையை மறைத்தார் என்றால், அவர் வகித்த பதவிக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தப் பிரச்னையில் எது உண்மை? உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியே உண்மையை உறைபோட்டு மூடப் பார்த்தாரா என்பது வெளிப்படுத்தப்பட்டே தீரவேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் பலர் ஊழல் பேர்வழிகள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷணையும் அவரது தந்தை சாந்திபூஷணையும் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கக்கூட முடியாத நிலையில் உச்ச நீதிமன்றம் தத்தளிக்கும் நிலைமை அதைவிடக் கொடுமை. இந்த நிலைமையும் தொடரக்கூடாது.
நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும். எது நிஜம்? என்று கண்டறியத்தான் நீதித்துறை. அதனால், நீதித்துறை சுய பரிசோதனைக்குத் தயாராகியே தீரவேண்டும்!
நன்றி:தினமணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...