Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 25, 2010

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதாவது தாங்கள் இறைநேசர்கள் என்பதற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர், பின்னர் தான் தாங்கள் வாழக்கூடிய நாட்டை குறிப்பிடுகின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.

மேற்கொண்டு பதிவிற்கு...
முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்கமுடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.

ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப் படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மாபெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த ஒரு தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.
இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் "மொரிஸ்கோஸ்" (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.
ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.

கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம் மேற்க்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).

கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.

உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும், அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?

கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria) தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் "பின்சோன் சகோதரர்கள்" (The Pinson or Pinzone brothers), அவர்களில்
1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.

இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño).கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.

ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில் மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.

1492 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தார். சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
இண்டீஸ் என்பது செல்வ செழிப்புள்ள பகுதியாக அறியப்பட்டிருந்தது. இந்த இண்டீஸ் என்பது தற்போதைய ஆசிய நிலப்பரப்பு. ஆக அவர் ஆசியாவின் செல்வ செழிப்பை அடைவதற்க்காகதான் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவை அடைந்ததும் அதை இண்டீசென நினைத்து விட்டார்.

இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தது, இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.

ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்க்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.

இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும்.அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதற்கு அடுத்த வருடம், 1493 இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.

இம்முறை அவர் இறங்கியது ப்புர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன காலனி ஆதிக்கந்தான். ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.

அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.

ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.

இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.

அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆக,
அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் (1776-1789).
அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).
அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).

இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல "முஸ்லிம் லடினோஸ்" (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.

ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.

கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?

இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.

கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?

இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.

இன்ஷா அல்லாஹ்...தொடரும்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

நம் எல்லோருக்கும் இறைவன் நல்வழி நல்குவானாக...ஆமின்...

References:1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick4. History of United States - endotwikipediadotorg5. Islamic Spain - British Broadcasting Service (BBC)6. Isabella I of castile - endotwikipediadotorg.7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotukMy sincere thanks to1. Br.Eddie of thedeenshowdotcom
நன்றி :ஆஷிக் அஹ்மத் அ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...