Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 14, 2013

கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதிப்படும் பொதுமக்கள்!

கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மீண்டும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தினமும் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருந்த காலம் போய் கடந்த சில ஆண்டுகளாக மின்சார தடை என்ற நிலை தொடர் கதையாகி விட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

குறிப்பாக சமையல் வேலைகளை செய்து வரும் இல்லத்தரசிகள் மின் சாதனங்களை பயன்படுத்த வழியின்றி தவிக்கின்றனர். அதுமட்டுமல்ல நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வருண பகவானும், வாயு பகவானும் கருணை காட்டியதால் காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி அதிகரித்து கடந்த சில மாதங்கள் வரை மின்சார தடை இல்லாத நிலை இருந்தது. இதனால் இனிமேல் மின்சார தடை இருக்காது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில்
இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலுக்கு வந்துவிட்டது. தினமும் 4, மணி நேரம், 5 மணி நேரம் என மின்சார தடை ஏற்படுகிறது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்றே தெரிவதில்லை.

இரவு நேரங்களில் மண்எண்ணெய் விளக்கு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி ஆகியவற்றை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். இல்லத்தரசிகள் காலையில் சமையல் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். அதேபோல தொழிற்சாலைகள் இயக்கம், அலுவலக பணிகள், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் பகலில் வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. இல்லை என்றால் மின்சார தடை ஏற்படும் போது புழுக்கம் ஏற்பட்டிருக்கும். மின்சார தடைக்கான காரணம் குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது தூத்துக்குடி, மேட்டூர், சென்னை அருகே உள்ள வல்லூர், ஆகிய இடங்களில் தலா ஒரு யூனிட்டும், நெய்வேலியில் 2 யூனிட்டுகளும் இயங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களை பொறுத்தவரை மின்சார உற்பத்தி நின்றுபோனால் மீண்டும் இயல்புநிலைக்கு வர குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஆகும்.இதன் காரணமாகத்தான் தற்போது மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இது ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் என கூறினார். ஆட்சியாளர்கள் தற்போதைய மின்சாரத்தின் தேவை அடுத்த 10 ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை அதிகரிப்பு, அப்போது மின்சாரத்தின் தேவை இவற்றை உணர்ந்து அதற்கான ஆயத்த பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ளாததுதான் இப்போது மின்சார தடை ஏற்படுவதற்கு காரணம். இனி வரும் காலங்களிலாவது ஆட்சியாளர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

இது ஒரு புறமிருக்க தொடக்க காலத்தில் இருந்தது போல் மின்தடை ஏற்படும் நேரங்கள் குறித்து முன் அறிவிப்பு செய்தால் மக்கள் முன்எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாக அமையும்.

-source:Dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...