Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 02, 2011

சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்!

மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்...

இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.

‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’’ என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்கள் புதுச்சேரி சமூக ஆர்வலர்கள். இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘வலுவில்லாத சினைமுட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள். ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை.

சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.

சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.


சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள்.

சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங்­­­­­களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி.வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.

திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.

இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்
thanks:தமிழக அரசியல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...