Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 13, 2011

என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம்?

லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.


லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.


உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?


1951-ல் இத்தாலியக் காலனியாக இருந்த லிபியா விடுதலை பெற்று சுதந்திர நாடானது. லிபியாவின் கிழக்குப் பகுதியான சைரனைக்காவின் முக்கியமான செனூசி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒன்றாவது இத்ரிஸ் என்கிற ராஜா, லிபியாவின் மன்னரானார். லிபியாவின் மேற்குப் பாதியில் கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மூன்று முக்கியமான ஆதிவாசி இனங்களும் கதத்ஃபா இனத்தவரான மும்மார் கடாஃபியின் தலைமையில் உள்நாட்டுக் கலகத்தில் ஈடுபட்டு, மன்னராக இருந்த முதலாம் இத்ரிசைப் பதவியிலிருந்து துரத்தி 1969-ல் ஆட்சியைக் கைப்பற்றின.


1969-ல் பதவியைக் கைப்பற்றியது முதலே, ஆதிவாசி இனக் குழுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபி மேற்கு லிபியாவின் முக்கியமான இனங்களான கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா, ஃபெஸ்ஸன், திரிபோலித்தானியா போன்றவற்றின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருப்பதால்தான் இன்றுவரை அதிபராகத் தொடர முடிகிறது. எகிப்து, டுனீசியா போன்ற நாடுகளின் அதிபர்களைப்போல அல்லாமல் மும்மார் கடாஃபி தனது பெயரில் வெளிநாட்டு வங்கிகளின் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றோ, அளவுக்கு அதிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவோ அவர்மீது குற்றச்சாட்டுகளும் கிடையாது. தன்னைச் சுற்றி பெண்களைக் காவலர்களாக வைத்திருக்கிறார் என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.


மேற்கு லிபியாவைச் சேர்ந்த அதிபர் மும்மார் கடாஃபி புத்திசாலித்தனமாக கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களை பொருளாதார ரீதியாக வளர விடாமலும், அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. மேலும், தனது ராணுவத்தையே முழுமையாக நம்பாமல் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதும் நிஜம்.


கிழக்கு லிபியாவைச் சேர்ந்த இனக்குழுக்கள்தான் இப்போது அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்கு லிபியாவிலுள்ள எல்லா இனக்குழுக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான், எகிப்திலும் டுனீசியாவிலும் ஏற்பட்டதுபோல, லிபியாவில் உள்நாட்டுக் கலகம் இன்னும் தொடர்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், லிபியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிற முனைப்புடன் வல்லரசு நாடுகள் செயல்படத் துடிக்கின்றன.


பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பாராசூட் மூலம் விநியோகம் செய்தால் என்ன என்று யோசனை கூறுகிறார். சவூதி அரேபியா மூலம் ஆயுதங்களைத் தந்து உதவினால் என்ன என்று அமெரிக்கா யோசிக்கிறது. புரட்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தும் லிபிய அரசும் படைகளை முடக்க, அந்த நாட்டிலுள்ள விமானநிலையங்களின் மீது குண்டு வீசித் தகர்த்தால் என்ன என்று யோசனை கூறுகிறார் அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி. இன்னொரு செனட்டரான ஜான் மெக்கெய்ன், இராக்கில் நடத்தியதுபோல நேசப்படைகள் நுழைந்து, அதிபர் மும்மார் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றிப் புதிய ஆட்சியை நிறுவினால் தவறில்லை என்கிறார்.


லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?


நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?


அதிபர் மும்மார் கடாஃபி அரசின் ராணுவத்தின் கை ஓங்கி வருவதாகவும், புரட்சியாளர்களின் எதிர்ப்புக் குறைந்து வருவதாகவும் தெரிகிறது. உள்நாட்டுக் கலகத்துக்கு மேற்கு லிபிய ஆதிவாசி இனக்குழுக்களுக்கும், கிழக்கு லிபிய இனக்குழுக்களுக்குமான பதவிப் போட்டிதான் காரணம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டினரின் அக்கறைக்குக் காரணம் லிபியாவின் எண்ணெய் வளம். 2003-ல் இராக். 2011-ல் லிபியா. என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம், தெரியவில்லையே!

Source: dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...