Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 25, 2011

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடும் வீழ்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால், நெல்லை சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்ய வசதியாக, சேமிப்புக் கிடங்கு வசதிகளை அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.24 லட்சம் ஏக்கர் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், வடவாறு பாசனப் பகுதிகள் பெண்ணாடம், கறிவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை தொடங்கி விட்டது. இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்து விட்டது.

நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 112 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நெல் வியாபாரிகள் அறுவடை இயந்திரங்களுடன், நெல் கொள்முதலில் களத்தில் இறங்கி உள்ளனர். ÷தற்போது அறுவடை ஆகும் சன்னரக நெல்லுக்கு, அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு ரூ. 1,100 வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 11 வரை தற்போது விலை கிடைக்கிறது.

ஆனால் தனியார் நெல் வியாபாரிகள், சன்னரகம் மூட்டை (62 கிலோ) ரூ. 628-க்கு கொள்முதல் செய்கிறார்கள் (கிலோ விலை சுமார் ரூ. 11). ÷பொதுவாக சம்பா அறுவடை காலத்தில் சன்னரக நெல்லுக்கு அரசு கொள்முதல் நிலையங்களைவிட, தனியார் வியாபாரிகள் குறைந்தது ரூ. 100 ஆவது கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வார்கள். மேலும் டிசம்பர் மாதத்தில் பி.பி.டி. நெல் (பழையது) குவிண்டால் ரூ. 1,500-க்கு விவசாயிகள் விற்பனை செய்து உள்ளனர்.

எனவே இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போது தனியார் வியாபாரிகளின் கொள்முதல் விலை, அடிமாட்டு விலை என்றும், நெல் சாகுபடிச் செலவைக் கணக்கிட்டால் இந்த விலை கட்டுபடியாகாது என்றும் கூறுகிறார்கள் விவசாயிகள். ÷களத்துக்கே வந்து தனியார் கொள்முதல் செய்கிறார்கள் என்பதைவிட, அரசு கொள்முதல் நிலையங்களைவிட எந்த வகையிலும் தனியார் வியாபாரிகளால் விலையில் ஆதாயம் இல்லை என்றும் விவாயிகள் கூறுகிறார்கள்.

எனவே நெல்லை சேமித்து வைத்து நியாயமான விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்வதற்கு ஏற்றவகையில், அரசு சேமிப்புக் கிடங்கு வசதிகளை மேம்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களில் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

"சன்னரக நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, மத்திய மாநில அரசுகளின் சேமிப்புக் கிடங்குகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இங்கு சேமிக்கும் விவசாயிகளுக்கு விளைப் பொருளின் அடக்க விலையில் 90 சதவீதம் கடன் வழங்கப்படுகிறது. இந்த வசதியை விரிவுபடுத்த வேண்டும். ÷நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்து இருக்கும் கூடுதல் விலை அடிப்படையில் தமிழகத்தில் நெல் விலையை உயர்த்த வேண்டும்' என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கண்ணன் கூறுகையில்,

"டிசம்பர் மாதத்தில் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,500 கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.1,100-க்கு மேல் கிடைக்கவில்லை. தனியார் வியாபாரிகள் நெல் வாங்கவே தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் கர்நாடக மாநிலத்தில் இருந்து சன்னரக நெல்லும் அரிசியும் வந்து குவிந்து கொண்டு இருக்கிறது. சன்னரக நெல் குவிண்டால் ரூ. 1,100-க்கு கொள்முதல் செய்தால் அதில் இருந்து கிடைக்கும் அரிசி விலை, மூட்டைக்கு லாபம் ரூ. 250 உள்பட கிலோ ரூ. 20 தான்.

ஆனால் சந்தையில் சன்னரக அரிசி விலை, கிலோவுக்கு ரூ. 30-க்குக் கீழ் குறையவில்லை. அந்த விலை விவசாயிக்குக் கிடைக்கவில்லையே. காரணம் இடைத்தரகர்கள். ÷தற்போது நெல் கொள்முதல் செய்பவர்கள் பெரும்பாலும் இடைத்தரகர்கள்தான். குறைந்தபட்சம் மத்திய அரசு அறிவித்து இருக்கும் புதிய விலை அடிப்படையில், தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...