Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 26, 2011

தேசியக் கொடியும்! தேசப்பற்றும்!!

காஷ்மீர் மானிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்ற நச்சுக் கருத்தை விதைப்பது தான் இவர்களின் நோக்கம்.தேசப்பற்று என்றால் என்ன? என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது

தேசப்பற்று அவசியம் என்பதில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. தேசத்துக்கு ஆபத்து என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லிம்களுக்கும் சேர்த்துத் தான் ஏற்படும் என்பதை இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளனர். தேசத்தை நேசிப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.தேசத்தின் மீது பற்று இருந்த காரணத்தால் தான் பாஜகவின் முன்னோடிகள் வெள்ளையர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்த போது வெள்ளையனுக்கு எதிராக உயிரைக் கொடுத்து முஸ்லிம்கள் போராடினார்கள்.

தங்களுக்கு என தனி நாடு உருவான போதும் தங்கள் நாட்டை விட்டு போகாமல் இங்கேயே தங்கி தேசப்பற்றைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டுமே.
மற்ற எந்தச் சமுதாயத்துக்கும் இந்தப் பரீட்சை வைக்கப்படவில்லை. ஆனாலும் ஆங்கிலேயனுக்கு வால் பிடித்த பரம்பரையில் வந்தவர்கள் இன்று தேசப்பற்றின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களாக வேடம் போட்டு தேசியக் கொடியை ஏற்றப் புறப்பட்டிருப்பது கேவலத்திலும் கேவலமாகும்.

காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தான் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சங்பரிவாரக் கும்பலால் திரித்துக் கூறப்படுகிறது.காஷ்மீரில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதும், ஏற்றுவோம் எனக் கூறுவதும் தான் அரசியல் சட்டப்படி தேச விரோதச் செயலாகும்.. முதலில் தேசம் என்றால் என்ன? தேசப்பற்று என்றால் என்ன? காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாறு என்ன? என்பதை விளங்கிக் கொண்டால் பாஜகவினர் செய்யும் இந்தச் செயல் எப்படி தேச விரோத நடவடிக்கையாக உள்ளது என்பது விளங்கும்.

இந்தியா எனும் தேசத்தை ஒருவன் மதிக்கிறான் என்றால் நமக்காக நாமே உருவாக்கிக் கொண்ட சட்டத்தை அவன் மதிக்க வேண்டும். சட்டத்தில் சொல்லப்பட்டதை எதிர்த்து ஒருவன் செயல்பட்டால் அவன் தான் தேச விரோதியாவான்.
முதலில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாற்றை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரமான இரண்டு நாடுகளாக ஆக்கப்பட்டன. ஆனால் காஷ்மீர் மாநிலத்தை வெள்ளையர்கள் இந்தியாவுடனும் சேர்க்கவில்லை. பாகிஸ்தானுடனும் சேர்க்கவில்லை. அதைத் தனி நாடாகவே விட்டுச் சென்றனர்.

இந்து மன்னரான ஹரிசிங் என்பவரின் ஆட்சியின் கீழ் அங்கே மன்னராட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தன்னாட்சியுடன் பாகிஸ்தானுடன் இணைய 1947 ல் ஒப்பந்தம் செய்தார். இதன் பின்னர் காஷ்மீர் மன்னரை இந்திய அரசாங்கம் சரிக் கட்டியதால் அவர் இந்தியாவுடன் நிபந்தனையின் அடிப்படையில் இணைய ஒப்புக் கொண்டு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.

இதன் படி இந்திய ராணுவம் இந்திய எல்லையில் இருந்தும் பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருந்தும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா கூறுகிறது. எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு பாகிஸ்தானை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விகாரம் 1948 ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம்.

ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால் தான் இது வரை ஓட்டெடுப்பு நடத்தவில்லை. ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதி மொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஓட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.

இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும்.
காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார்.

ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.
இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951 ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார்.
இதன் பின்னர் 370 வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது.

பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது. ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது.
பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.

ஆனாலும் மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின் படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை.
இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு அதன் படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இது குறித்து இந்திய அரசியல் சாசனம் பின்வருமாறு கூறுகிறது

ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,
இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது

The Constitution of Jammu and Kashmir
Preamble. – We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves – ………
IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.
இது என்ன கூறுகிறது?
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்.

சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?.

அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

மேற்கண்ட காஷ்மீர் அரசியல் சாசனத்தில் காஷ்மீரின் தேசியக் கொடி எது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை இந்திய அரசியல் சாசனமும் ஒப்புக் கொள்கிறது.
ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.
144. Flag of the State:
144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.
இப்போது காஷ்மீரில் இந்திய தேசியக் கொடி ஏற்றும் பிரச்சனைக்கு வருவோம்.
இந்தியாவின் அரசியல் சாசனப்படி காஷ்மீருக்கான இந்திய தேசியக் கொடி மேலே சொல்லப்பட்டது தான்.

அது தான் காஷ்மீரத்துக்கான இந்திய தேசியக் கொடி என்று இந்திய அரசியல் சாசனம் சொல்லும் போது அதை மீறும் வகையில் அரசியல் சாசனத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு அந்த மாநிலத்திற்கு எது தேசியக் கொடியாக இல்லையோ அதைத் தான் நாங்கள் ஏற்றுவோம் என்று ஒருவர் கூறினால் அவர் இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறுகிறார். இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறும் யாரும் தேச விரோதிகளாகத் தான் இருப்பார்களே தவிர ஒருக்காலும் தேசபக்தர்களாக முடியாது.

தேசியக் கொடியை அரசியலாக்கும் கயவர்கள் முஸ்லிம்கள் தேசியக் கொடியை எதிர்க்கிறார்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முயல்கிறார்கள். ஆனால் இவர்கள் எது சட்டப்படி காஷ்மீரின் தேசியக் கொடியாக இல்லையோ அதை காஷ்மீரின் தேசியக் கொடி என்று கூறி தேச விரோதச் செயலைச் செய்கிறார்கள். காஷ்மீருக்கு எது இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கிறதோ அதை ஏற்க மறுக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் தேச விரோதிகளே என்பதை நிரூபிக்கிறார்கள்
இது போல் தான் கர்நாடக மாநில ஹூப்லியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்ற முயல்வதும் அதை முஸ்லிம்கள் எதிர்க்கும் போது முஸ்லிம்கள் தேசப் பற்று இல்லாதவர்கள் எனச் சித்தரிப்பதும் இவர்களின் வாடிக்கை.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான தனி உடமையான இடத்தில் சங்பரிவாரம் அத்து மீறுகிறது என்பது தான் இங்கே பிரச்சனை. தேசியக் கொடி அல்ல. அங்கே தேசியக் கொடி ஏற்றுவதன் மூலம் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது அல்ல என்று நிலை நாட்டப் பார்க்கிறார்கள். இந்த அத்து மீறலுக்கு தேசியக் கொடியைக் கேடயமாக ஆக்கி தேசியக் கொடியின் மரியாததையைக் குலைத்த தேச விரோதிகள் இவர்கள் தான்.
அத்வானியின் வீடு முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று வழக்கு இருக்கும் போது அத்வானியின் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம்கள் தேசியக் கொடி ஏற்றப் போனால் அது தேசியக் கொடி பிரச்சனை என்று சங்பரிவாரம் எடுத்துக் கொள்ளுமா? அல்லது அத்வானியின் இடத்தை முஸ்லிம்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுமா?

இந்தக் காவிக் கும்பல் நாட்டில் அமைதியக் குலைத்து நல்லிணக்கத்தைக் கெடுத்து சிறுபாண்மை சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைப்பதை மட்டுமே ஒரே கொள்கையாகக் கொண்டுள்ளது.இவர்களின் எண்ணம் பலிக்காத வகையில் இதை முஸ்லிமல்லாத மக்கள் மத்தியில் கொண்டு சென்று இவர்களின் தேச விரோதச் செயலை முறியடிக்க வேண்டும். இதற்காக உழைக்க வேண்டிய அளவுக்கு முஸ்லிம்கள் உழைக்க வேண்டும்
370 வது பிரிவு கூறுவது என்ன
370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும்
(அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்
(ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவத்ற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும்

(2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும்
மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.
(இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும்.

(ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதி விலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம்.
ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது,

இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.
(2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களூக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம்.
எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- Thankhs: Onlinepj.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...