Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2010

இட ஒதுக்கீடு கோரி போராட்டம்

சென்னை : முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்தது.
மாநில பொதுச் செயலர் காஜாமொய்தீன் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவைத் தலைவர் பாஷா, துணைத் தலைவர் தஸ்தகீர், பொருளாளர் அப்துல் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இந்தியா முழுக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று சச்சார் கமிட்டி புள்ளி விவரம் அளித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி உள்ளதால், அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பல மாதங்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.எனவே, மத்திய அரசு இனியும் காலதாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொடர் முழக்கம் செய்யப்பட்டது.

மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல்?

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று, மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் விண்ணப்பித்தது. இதில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து நான்கு ரூபாயாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான உயர் மின் அழுத்த இணைப்பு பெற்றவர்களுக்கு, ரூ.3.50லிருந்து, ரூ.4.20 ஆகவும், உயர் அழுத்த இணைப்பு பெற்றுள்ள வணிக நிறுவனங்களுக்கு, ஐந்து ரூபாயில் இருந்து, ரூ. 5.80 ஆக உயர்த்த மனு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு இணைப்புகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4 ரூபாயாகவும், 401 முதல் 600 யூனிட் வரை உபயோகிப்போருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4.25 ஆகவும், 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 4.75லிருந்து, 5.75 ஆகவும் உயர்த்த அனுமதி கோரியுள்ளது. இது தவிர தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள கல்லூரி, சினிமா தியேட்டர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவகையான இனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு மின்வாரியம் மனுவில் கோரியிருந்தது. இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங் களில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய மின்கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் மற்றும் உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மின்கட்டண உயர்வு குறித்து அறிவிக்கவுள்ளனர். கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் அறிவிப்பு தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஆஜரான பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளை பரிசீலித்துள்ள ஆணையம், அதற்கேற்ப, மின்வாரியத்தின் வேண்டுகோளில் சிலமாற்றங்களைச் செய்து, இன்று அறிவிக்கவுள்ளது. வீடுகளுக்கான மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீட்டு இணைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பெற்றுள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

ஜூலை 30, 2010

ஐஸ்கட்டி உருகுவதால் 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்; சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை. 30-

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜூலை 29, 2010

பொதுப்பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு : - தமிழக அரசு TNTJ - விற்கு விளக்கம்

ஒவ்வொரு நூறு இடங்களில் 69 இடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மீதி 31 இடங்கள் பொதுப்பட்டியல் மூலமும் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டமாகும். 69 இடங்களை நிரப்பும் போது அதில் 3.5 மூன்றரை சதவிகித இடங்கள் முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். மீதி உள்ள 31 இடங்கள் அதிகத் தகுதி உள்ளவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த 31 இடங்களில் முஸ்லிம்களும் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் பொதுப்பட்டியலில் போட்டியிடும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு.
சட்டத்தில் தெளிவாக இப்படி கூறப்பட்டாலும் அந்தந்த துறை அதிகாரிகள் முஸ்லிம்கள் பொதுப்பட்டியலில் போட்டியிடும் போது உங்களூக்கு மூன்றை மட்டும் தான். அது நிரப்பப்பட்டு விட்டதால் பொதுப்பட்டியலில் உரிமை கோர முடியாது என்று நிராகரிக்கும் தகவல்கள் அதிக அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு வந்தன.
இதை முதல்வரின் கவனத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு சென்றது. இதன் பின்னர் தமிழக அரசு இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து தவ்ஹீத் ஜமாஅதுக்கு பின் வரும் விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பொதுப்பிரிவில் முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை எந்த அதிகாரியாவது மறுத்தால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் இணையதளத்திற்கு சென்று அரசின் விளக்கத்தை பிரிண்ட் எடுத்துச் சென்று காட்டி உங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம். அப்படியும் நீதி கிடைக்காதவர்கள் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநிலத் தலைமையை தொடர்பு கொள்ளலாம். TNTJ Download As PDF

கம்ப்யூட்டர் உலகின் அடுத்த புரட்சி

ஜுலை29:உள்ளங்கையில் வைத்து பட்டனை தட்டினால்,கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?
ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், 'ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது
இந்தப் புதிய கருவிக்கு, 'ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும்.நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.
மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, 'சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில்,கைகளில் பல்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

பிதுவின்-அரேபிய பழங்குடிகளின் கிராமத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது இஸ்ரேல்








ஜூலை29:இஸ்ரேலிய அரசு 300க்கும் மேற்பட்ட பிதுவின்-அரேபிய பழங்குடியின கிராமங்கள் உள்ள தெற்கு நெகவ் பாலைவனப் பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியது.இஸ்ரேலால் அங்கீகரிக்கப்படாத 45 கிராமங்களில் அல்-அராகிப் கிராமமும் ஓன்று. இங்கு 40 வீடுகள் உள்ளன. அல்-அராகிப் என்ற கிராமம் முழுவதும் புல்டோசர்களால் இடித்து அழிக்கப்பட்டது அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகள்,கால்நடைகள்,மரங்கள் மற்றும் உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.



Negev Co-existence Forum-ன் டைரக்டர் ஹை நோச் கூறுகையில்; "இஸ்ரேலிய 5 புல்டோசர்கள் காலை 5.30 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்தன. 3 முதல் 4 மணி நேரத்திற்குள் எல்லா வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டன என்று அதிர்ச்சியுடன் கூறினார்.கிராம மக்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் வீடுகளை இடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இஸ்ரேலிய காவல் துறையினரால் காயப்படுத்தப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் பீர்செபா என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள இடுகாடுகளுக்கு நகர்ந்து அங்கு கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்." என்றும் அவர் கூறினார்.



மேலும் அவர் கூறும்போது "30க்கும் மேற்பட்ட சிறிய வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன நூற்றுக்கணக்காண மக்கள் ராஹட் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 3 நபர்கள் அதிகமாக கேள்வி கேட்டதற்காக கைது செய்யப்பட்டனர் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இஸ்ரேலிய அரசு அல்-அராகிப் கிராமவாசிகளுக்கு வீடுகளை காலி செய்ய சொல்லி ஜூன் 15 அன்று நோட்டீஸ் விநியோகித்தது. இந்த சூழலில் இப்பகுதி எப்பொழுது வேண்டுமானாலும் அளிக்கப்படலாம் என்ற அச்சத்துடனேயே மக்கள் வாழ்ந்து வந்தனர்.தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகளையும் இடித்து விட்டனர். மின்சாரத்திற்காக வைத்திருந்த ஜெனரேடர்களையும் அப்புறப்படுத்தி விட்டனர். இது போர் தொடுக்கும் நடவடிக்கையைப் போன்று உள்ளது.மேலும் எங்களை இந்த பகுதிகளில் வாழவும் விடமாட்டார்கள் இது நினைத்து கூடப் பார்க்க முடியாதது.கிராம மக்கள் தற்போது அடிப்படை உதவி மற்றும் மாற்று ஏற்பாடாக தங்குவதற்கு கூடாரம் அமைப்பதற்கான உதவிகளையும் எதிர்பார்த்து உள்ளனர்."என்றும் நோச் கூறுகின்றார்.



இதுகுறித்து இஸ்ரேலிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோசன் பிளட் என்பவர் கூறுகையில்; "இங்கு உள்ள வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன. நீதி மன்றத்தின் தீர்ப்பு 11 வருடங்களாக செயல்படுத்தப்படவில்லை. இவர்களுக்கு வீடுகளை காலி செய்வதற்கான நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யாததால் நீதிமன்ற உத்தரவுப் படி இவர்களை இடம்பெயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்." என்றார்.Negev Co-existence Forum-ன் படி 1,55,000 பிதுவின்-அரேபிய பழங்குடிகள் நெகவ் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய பகுதியின் குடிமக்கள் தாம். இவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேலிய அரசு இவர்களை அங்கீகரிக்க வில்லை மேலும் குடிதண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனவும் கூறுகின்றனர்

ஜூலை 28, 2010

பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்


இஸ்லாமாபாத், ஜூலை 28-

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லா மாபாத்துக்கு இன்று காலை “ஏர்புளூ” என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லாமாபாத்தை நெருங்கி கொண்டிருந்தது.

இஸ்லாமாபாத் அருகே உள்ள மார்காலா மலைக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தது.

அப்போது விமானம் திடீரென விமான நிலைய ரேடாரில் இருந்து மறைந்தது. ரேடியோ தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

உடனே உஷார் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்துக்கு என்ன ஆனது? என்று தேட தொடங்கினார்கள்.

விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கி கிடந்தது தெரிய வந்தது.

அந்த இடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இறங்க முடியவில்லை.

மலையின் உச்சி பகுதியில் விமான பாகங்கள் நொறுங்கி கிடந்தன. அதில் இருந்து தீப்பிளம்பும், புகையும் வந்தபடி இருந்தன.

விமானம் கிடக்கும் இடத்துக்கு செல்ல சாலை வசதி ஏதும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினரை நீண்ட நேர முயற்சிக்கு பிறகு கீழே இறக்கினார்கள்.

அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் இறந்து கிடந்தனர். சிலர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டனர்.

இதுவைர 45 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 114 பேரும் பலியாகி இருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இஸ்லாமாபாத் பகுதியில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இன்று விமானம் அங்கு வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. மேக மூட்டமும் அதிகமாக இருந்தது. எனவே வானிலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேட்டில் கீழே பஸ் ஸ்டாண்ட் மேலே மெட்ரோ ரயில் ஸ்டேஷன்

வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, கோயம்பேட்டில் உள்ள புறநகர் பஸ் நிலையத்தின் மாடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ளதுபோல் சென்னையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தூண்கள் அமைக்கும் பணி சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இரண்டு பாதையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் பாதை, வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை செல்லும். இதில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையாக இருக்கும். சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாதையாக இருக்கும்.
அதன்படி, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் தரைக்கு அடியிலும், சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், ராணுவ அலுவலர் பயிற்சி மையம், மீனம்பாக்கம், சென்னை விமான நிலையத்தின் ரயில் நிலையங்கள் தரை பகுதிக்கு மேல் இருக்கும்.
இரண்டாவது பாதையாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை அமைக்கப்பட உள்ளது.
இது, சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை சுரங்கப்பாதையாக இருக்கும். திருமங்கலத்தில் இருந்து பரங்கிமலை வரை உயர்த்தப்பட்ட பாதையாக இருக்கும். அதன்படி சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, செனாய் நகர், அண்ணா நகர் (கிழக்கு), அண்ணா நகர் டவர், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்கள் தரைக்கு அடியில் இருக்கும். கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர்& கே.கே.நகர், சிட்கோ (கத்திபாரா பாலம் அருகே), ஆலந்தூர், பரங்கிமலை ஆகிய ரயில் நிலையங்கள் தரைக்கு மேல் பகுதியில் இருக்கும்.
இதில் ஆலந்தூரில் வண்ணாரப்பேட்டை& விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயிலும், சென்ட்ரல்& பரங்கிமலை செல்லும் மெட்ரோ ரயிலும் வந்து செல்லும். பரங்கிமலை ரயில் நிலையம் இரண்டு அடுக்கு ரயில் நிலையமாக உருவாக்கப்படுகிறது. தற்போதுள்ள மின்சார ரயில் நிலையம் தரை தளத்திலும், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்படும் பறக்கும் ரயில் நிலையம் முதல் மாடியிலும், சென்ட்ரல் & பரங்கிமலை வரை செல்லும் மெட்ரோ ரயில் நிலையம் 2வது மாடியிலும் அமைக்கப்படும். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் வரும் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் மெட்ரோ ரயில் மூலம் செல்ல அலையத் தேவையில்லை. வசதியாக, புறநகர் பஸ் நிலையத்தின் மாடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று மெட்ரோ ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பீ14600 கோடியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்கப் பாதை அமைக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட உள்ளது. 2014&2015ம் நிதியாண்டுக்குள் சென்னை நகரில் மெட்ரோ ரயில் ஓடும்.கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தோற்றம். இதன் மீதுதான் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.

ஜூலை 27, 2010

போலி என்கவுன்டர் வழக்கில் அப்ரூவர் ஆகிறார் போலீஸ் அதிகாரி

ஆமதாபாத் :குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி அமீன், அப்ரூவராக ஆகிறார். இதனால், குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் சொராபுதீன் என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., இது போலி என்கவுன்டர் என புகார் கூறியுள்ளது. இந்த வழக்கில், குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள் ளார். இதனால், ஆத்திரம் அடைந்துள்ள பா.ஜ., மேலிடம், "சி.பி.ஐ., அமைப்பை, மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' என, குற்றம் சாட்டியுள்ளது.இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் டி.எஸ்.பி., என்.கே.அமீன், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அமீன் உட்பட 15 போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அமீன் அப்ரூவராக மாறி சாட்சியம் அளிக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவரது வக்கீல் ஜெகதீஷ் ரமணி தெரிவித்தார்.
நேற்று காலை சி.பி.ஐ., அலுவலகத்துக்கு சென்று, அதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்த ஜெகதீஷ், செய்தியாளர்களிடம் கூறுகை யில், "போலி என்கவுன்டர் வழக்கில் அமீன், அப்ரூவராக மாறி சாட்சியம் அளிக்கவுள்ளார். இதற்காக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அமீன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் படியும் மனுவில் கோரப்பட் டுள்ளது. அப்ரூவராக மாறுவதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது' என்றார்.
போலி என்கவுன்டர் வழக்கில் ஏற்பட் டுள்ள இந்த திடீர் திருப்பம் காரணமாக, குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, குஜராத் மாநில முன்னாள் சி.ஐ.டி., அதிகாரிகள் ராய்கர், மாதூர் ஆகியோருக்கு சி.பி.ஐ., சார்பில் நேற்று சம்மன் அனுப்பப்பட்டது.இவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், மீண்டும் விசாரணைக்காக அவர்களை அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி, சி.பி.ஐ., சார்பில் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமீத் ஷாவும், ஜாமீன் கோரி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு அளித்துள்ளார்.
காங்கிரசின் சதி: கட்காரி ஆவேசம் : குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா கைது குறித்து பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது:பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் நோக்கத்துடன் அமீத் ஷாவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் சுமத்தியுள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்போம். அதே நேரத்தில், காங்கிரஸ் சார்பில் எங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தேர்தல் சவாலையும் சந்திப்போம். தேர்தலில் காங்கிரசை மக்கள் தூக்கி எறிவர். இந்த வழக்கில், காங்கிரஸ் உள்நோக்கத்துடன் செயல்படுவதை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

அடிப்படை கல்வி உரிமை சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதா?

புதுடில்லி :"அடிப்படை கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ.,) முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானது என்ற சில முஸ்லிம் அமைப்புகளின் பயம் அவற்றின் அறியாமையால் ஏற்பட்டுள்ளது' என்று, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அனைவருக்கும் அடிப்படை கல்வி உரிமைச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானது என்று ஜாமியத் உலேமா -இ- இந்த் மற்றும் அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லிஸ் -இ- முஷாவராவாத் உள்ளிட்ட சில அமைப்புகள் அச்சம் தெரிவித்திருந்தன. இந்திய அரசியல் சாசனத்தின் 29, 30ம் பிரிவுகள், மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்களின் கல்வி நிறுவனங்கள் அவர்களின் விருப்பப்படி இயங்கவும் அனுமதி அளிக்கின்றன.ஆனால், மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டம், இப்பிரிவுகளுக்கு எதிரானது என்று அந்த அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.

இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று நான் நினைக்கவில்லை. மத்திய அரசின் நோக்கமும் அதுவல்ல. இந்த பயம் அறியாமையால் ஏற்பட்டுள்ளது. இச்சட்டம் மூலம், மதரசாக்களின் கல்விக்கோ அல்லது 29, 30வது பிரிவுகளுக்கோ குந்தகம் வராது. இருப்பினும் இச்சட்டம் பற்றிய கவலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும்.இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிப,ல் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

ஜூலை 26, 2010

விண்வெளியில் பூமியை போன்று 140 கிரகங்கள்

நியூயார்க், ஜூலை. 26-
விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத் திரங்கள் குறித்து அமெரிக் காவின் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் மறைந்து கிடக்கும் 706 புதிய கிரகங்களையும், 5 புதிய சூரிய மண்டலத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து ஊடுருவி ஆராய்ச்சி செய்து பார்த்தபோது பூமியை போன்று 140 புதிய கிரகங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இங்கு பூமியை போன்று பாறைகள் நிலம் மற்றும் தண்ணீர் உள்ளன.

எனவே, இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடந்த 6 வாரத்தில் கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் இந்த அதிசயங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பூமியை போன்று உள்ள கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியம் உள்ளதா? என கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற் கொள்ளப்பட உள்ளது என பேராசிரியரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான டிமிதர் சசெல்லோவ் தெரிவித்துள்ளார்.

ஜூலை 25, 2010

இந்தியாவில் குறைந்த விலை LAPTOP


உலகத்தில் மிக குறைந்த விலை LAPTOP இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. IIT ‎மாணவர்களின் கண்டுபிடிப்பான இதை வெளியிட்டு பேசிய கபில் சிபல், இந்தியா ‎தகவல் தொழிநுட்ப வளர்ச்சியில் அடுத்த அடிக்கு முன்னேறியுள்ளது என்று ‎கூறினார்.

குறிப்பாக மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இதன் அடக்க விலை 35 முதல் 48 அமெரிக்க டாலர். ‎Motherboard, Chip, Processing, Connectivity உட்பட. 1600 முதல் 2300 வரை இந்திய ரூபாயின் ‎மதிப்பில் Internet Browsers, PDF வசதிகள் உள்ளது.‎ Linux Operating System உள்ள இந்த லேப்டாப் 2011 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு ‎வரும். ‎Solar Power மூலமாகவும் இயங்கும்.

தீவிரவாதம் மூலம் கேரளாவை முஸ்லிம் நாடாக்க முயற்சி; முதல்-மந்திரி பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம், ஜூலை 25-
கேரளாவில் சர்ச்சைக் குரிய கேள்வியை தயாரித்த பேராசிரியர் கையை ஒரு கும்பல் வெட்டியது. இது தொடர்பாக ஒரு அமைப்பை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான சி.டி. மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் பல்வேறு சதி திட்டங்கள் இருந்தன. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம் வந்து குவிந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

டெல்லியில் நடந்த முதல்-மந்திரி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தனிடம் இந்த விஷயம் பற்றி நிருபர்கள் கேட்டனர். அப்போது அச்சுதா னந்தன் கூறியதாவது:-

ஒரு முஸ்லிம் அமைப்பினர் இளைஞர்களை தங்கள் பக்கம் கவர பணத்தை வாரி இறைக்கின்றனர். மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களை மத மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் திசை திருப்பவும் முயற்சிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அவர்களை ஆதரிக்க வில்லை.

20 ஆண்டுக்குள் கேரளாவில் முஸ்லிம்களை மெஜாரிட்டி ஆக்கி அதை முஸ்லிம் நாடாக்க முயற்சி நடக்கிறது.

இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறாம். இது போன்ற ஆபத்தான இயக்கங்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் ஆகஸ்டு 15-ந்தேதி நடத்த இருந்த மாநாட்டுக்கு தடை விதித்து இருக்கிறோம்.

தற்போது இந்த இயக்கம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை எதுவும் முஸ்லிம் சமூதாயத்தை பாதிக்காத வகையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள உள்துறை மந்திரி கோடியேரி பாலகிருஷ்ணன் கூறும் போது தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் தான் புதிய இயக்கமாக மாறி உருவெடுத்து இருக்கிறதா? என்பதை கண்டறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர் என்றார்.

டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மாட்டிறைச்சிக்குத் தடை

புதுடெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி காலப்பகுதியில் மாட்டிறைச்சி உணவுப்பரி்மாறலை தடைசெய்ய போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் எடுத்துள்ள முடிவு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தினசரி உணவில் பெரும்பாலும் மாட்டிறைச்சியை சேர்த்துக்கொள்ளும் வழமையுள்ள ஆஃப்பிரிக்க மற்றும் மேலை நாடுகளைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்பதால், இந்த அறிவிப்பினால் அவர்கள் சிரமப்படுவார்கள் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாட்டிறைச்சியிலிருந்து பெறப்படுகின்ற சக்தியை விளையாட்டு வீரர்களுக்கு மாற்றுவழிகளில் வழங்க போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான வி.பாஸ்கரன் தெரிவித்தார்.இவ்வாறான முடிவுகள் எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுக்களை நடத்த எதிர்பார்த்துள்ள இந்தியாவுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத மற்றும் கலாசார வழக்கங்களின்படி மாட்டிறைச்சி உணவு தவிர்க்கப்படுவது சரியானது தான் என்கின்ற வாதம் இந்தியாவில் உள்ள போதிலும் வெளிநாடுகள் பல பங்குகொள்ளும் காமன்வெல்த் போட்டிகளில் இந்த தடை தேவையற்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜூலை 24, 2010

நன்மையின் பெயரால்?

ஷஃபான் மாதம் 15ஆம் இரவு நம்மவர்களால் மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த விழாவை கொண்டாடுவதில் தமிழக மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளி வாசல்களிலும் காலங்காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். முன்னோர்கள்களில் சிலர் இதனை உருவாக்கினர் என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை. அதற்காக முயற்சிகளை மேற்கொள் வதுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால் படிக்காதவர்கள் எப்படி உண்மையை உணரமுடியும்?
மூன்று யாசீன்இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் மூன்று 'யாசீன்' ஓதி துன்பம் துயரங்கள் நீங்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் 'தக்தீர்' எனும் விதியை நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையிலேயே மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.ஷஃபான்15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை ஷஹாபாக்களின் செயல்களிலோ, தாபீயீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு ஆதாரம் எதுவுமில்லை.
இப்படிச் செய்வது நன்மையானது என்றால், நம்மைவிட நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் இதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர்தான் இதனை உருவாக்கினர். இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் இந்த இரவில் 100 ரக்அத்துக்கள் தொழவேண்டும் என்று கூறியிருப்பதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது.
நன்மைகள் தானேதொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என்று, நம்மில் பெரும்பான்மையினர் பலரும் நினைக்கலாம். சற்று நிதானமாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள். "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அலி (ரழி) அபூதாவூது, நஸயீ)
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) ஜாபிர் (ரழி) புகாரீ, முஸ்லிம், நஸயீ)ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இத்தகு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக்கொண்டு செய்துவரும் போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்

8ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது- தமிழக அரசு உத்தரவு

ஜுலை.24:எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-"6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.இந்த சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது, படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது,தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது.எந்த மாணவரையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது".இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 23, 2010

காட்டுமன்னார் கோவிலில் நாளை காஸ் நுகர்வோர் முகாம்

கடலூர் : காட்டுமன்னார்கோயிலில் காஸ் நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட் டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோயில் தாலுகா அலுவலகத்தில் நாளை (24ம் தேதி) காலை 11 மணிக்கு டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் காட்டுமன்னார்கோவில் வட்டத் திற்கான காஸ் நுகர்வோர் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடத்தப்படும்.காஸ் நுகர்வோர்கள் இக் கூட்டத்தில் பங் கேற்று காஸ் சிலிண்டர் பெறுவது தொடர்பாக தங்களது குறைகள் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 22, 2010

காபூல்:ஆஃப்கன் தலைநகர் காபூலில் இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய்,தமது நாட்டு படையினரே ஆஃப்கனிஸ்தானின் பாதுகாப்புப் பொறுப்பையும் 2014 ஆம் ஆண்டுக்கு முன் ஏற்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஆஃப்கனின் 34 மாகாணங்களிலும் பாதுகாப்பு பொறுப்பை அந்தக் காலகட்டத்தில் ஆஃப்கான் பாதுகாப்புப் படையினரே முழுமையாக ஏற்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் எதிர்பார்க்கும் நிலையில், 70 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட உதவி மாநாட்டின் இறுதியில் பேசிய ஹமீத் கர்சாய் இவ்வாறு தெரிவித்தார்.

ஆஃப்கனில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக உலகளவில் முக்கியத்துவம் மிக்க ஒத்துழைப்பை வழங்கவும், அமைதியையும் மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்கவும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.அந்த மாநாட்டின் முடிவில் பேசிய ஐ.நா. சபையின் தலைமைச் செயலர் பான் கி மூன், இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மிகவும் முக்கியமானவை என்றார். இந்த காபூல் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் சுமார் 40 பேர் வெளியுறவு அமைச்சர்களாவர்.இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் ஆதரவு தனக்கு கிடைத்திருப்பது குறித்து அங்கு குறிப்பிட்ட ஆஃப்கன் அதிபர் கர்சாய் அவர்கள், எல்லாரும் ஒரு மோசமான பொது எதிரியை எதிர்த்துப் போராடுவதாக கூறினார். ஆஃப்கனிஸ்தானில் ஒரு நல்லாட்சி எற்படவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எதிர்வரும் காலத்தில் அமெரிக்கா ஆஃப்கனிஸ்தானுக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாகக் கூறினார்.ஆஃப்கனிஸ்தானில் அமெரிக்கா வழங்குகின்ற இராணுவ உதவிக்கு நிகராக பொருளாதார உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நடந்து முடிந்த இந்த சர்வதேச கொடையாளி நாடுகளின் கூட்டத்தின் முடிவில், அந்நாட்டுக்கு வழங்கப்படும் உதவியில் 50 சதவீதத் தொகையை ஆஃப்கன் அரசின் வாயிலாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் முஸ்லிம்களுக்கு பாரபட்சமா?

இந்தியாவில்,வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.இது தொடர்பாக,தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதவீதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதவீதமும், கேரளத்தில் சுமார் 7 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 17 சதவீதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம் பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது.குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக, வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம்,பீகார்,ஆந்திரம்,கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 21, 2010

சிறுபான்மையினர் கல்விக்கடன், சிறுதொழில் கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர், ஜூலை 20: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கடன், சிறுதொழில் கடன் மற்றும் தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார்.
÷ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (முஸ்லிம், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்கள் நீங்கலாக மற்ற கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சியர்கள்) 2010- 11-ம் ஆண்டுக்கு சிறுதொழில் கடன்கள் வழங்க ரூ. 150 லட்சம், தனிநபர் கடன் வழங்க ரூ. 150 லட்சம், கல்விக் கடன் வழங்க ரூ. 10 லட்சம் அரசு ஒதுக்கி உள்ளது.
÷மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி மற்றும் பட்டயப் படிப்பு பயிலும், மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இக்கடன்கள் மத்தியக் கூட்டுறவு வங்கிகள், அவற்றின் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், சிறப்பாகச் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும்.
÷தனிநபர் கடனுக்கு 6 சதவீதம், சிறுதொழில் கடனுக்கு 4 சதவீதமும், கல்விக் கடனுக்கு 3 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும்.
÷கிராமப் பகுதியாக இருந்தால் ஆண்டு வருமானம் ரூ. 39,500-க்கு மிகாமலும், நகரப் பகுதியாக இருந்தால் ரூ. 54,500-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
÷பள்ளிச் சான்று, சாதிச்சான்று, வருமானச சான்று, இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலே குறிப்பிட்ட வங்கிகள், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆகியவற்றில் சமர்ப்பிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஜூலை 20, 2010

குஜராத் இனப் படுகொலை: பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டில் மோசடி

வதோதரா:2002 குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடுகள் சரியாக அடைவதில்லை என பலமுறை மனித உரிமை ஆணையங்களுக்கும்,சிறுபான்மையின கமிஷன்களுக்கும் புகார்கள் வந்துள்ளன.தற்போது முதல் முறையாக நஷ்டஈட்டை கொள்ளையடித்ததாக 14 அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.புபேன்சிங் பாபோர் என்பவரால் பகோர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில், சுமார் ரூ.38.25 லட்சம் அரசு கஜானாகளிளிருந்து சுருட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேரில்,12 பேர் தற்போதைய அரசு அதிகாரிகள் ஆவர். மனுதாரரின் கூற்றுப்படி 2002-2009 திலிருந்து பதிவியில் இருந்த அரசு அதிகாரிகளால் இந்நஷ்டஈடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் பணம் பெறாத நிலையில், அவர்கள் பணம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்தவர்களில் கிளர்க்கிலிருந்து தாலுகா மூத்த அதிகாரிகள் வரை அனைவருக்கும் பங்குண்டு என்பதாக கூறியுள்ளார்.ஒருவருக்கொருவர் ஒத்துழைத்த பிறகு இவர்கள் அரசு சார்பாக போலி சுற்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.இவர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி, கிரிமினல் நடவடிக்கைகள் என பல பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்."நாங்கள் இது குறித்து விசாரித்து வருகின்றோம், அனைத்து போலி ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம், விரைவில் சில கைதுகள் நடக்கும்" என்பதாக போலீஸ் துணை இன்பெக்டர் சவ்ஹான் தெரிவித்தார்

ஜூலை 19, 2010

நியூயார்க் நகர பள்ளிகளில் பெருநாள் விடுமுறையை சேர்க்க முஸ்லிம்கள் முயற்சி

நியூயார்க் நகர முஸ்லிம் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நகர அமைப்புகள் தங்களின் மார்க்கம் சார்ந்த விடுமுறைகளை நியூயார்க் நகர பள்ளிகளின் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இது தொடர்பாக சட்ட இயக்குநர்களிடம் தங்களின் திட்டத்தை சேர்க்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.பள்ளி விடுமுறை நாட்கள் பட்டியலில் ஈத்அல் ஃபித்ர் மற்றும் ஈத்அல் அல்ஹாவை சேர்ப்பதால் 9/11 தாக்குதலுக்கு பிறகு நிலவும் முஸ்லிம் விரோத அபிப்பிராயத்தையும், அவநம்பிக்கையையும் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.நியூயார்க் நகர பள்ளிகளில் 100,000 அல்லது 12 சதவீததிற்கும் மேலான முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்வாதாக அவர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து நூற்றுக்கணக்கானோர் நியூயார்க் சிட்டி ஹாலிற்கு வெளியில் திரண்டு மேயர் ப்லூம் பெர்க்கிற்கு இந்த விஷயத்தை வற்புறுத்தினர்.இந்த விடுமுறைகள் வார இறுதியிலோ அல்லது மற்ற விடுமுறை நாட்களில் வருவதால் கூடுதலாக 5 நாட்கள் மட்டுமே விடுமுறை விட வேண்டி இருக்கும் என்று கூறுகின்றனர்.ஆனால் மேயர் ப்லூம்பெர்க் மாணவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்ககூடாது என்று இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

'இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் ஜனநாயக உரிமை' - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

டெல்லி:'முஸ்லிம்களை கவுரவப்படுத்தும் வகையில் சிறப்பாக அவர்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை மாறாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதும், முஸ்லிம்களின் இடஒதுக்கீடும் அவர்களின் ஜனநாயக உரிமை' என்பதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய அரசு அளித்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;'முஸ்லிம் சமுதாயம் ஒரு மோசமான இருலுலகில் வாழ்வதை சச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இடஒதுக்கீடு போன்ற நடைவடிக்கைகளின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில்,அச்சமுதாயம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் முன்னேற்றம் அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு,இதன்படி இடஒதுக்கீடு மத்தியில் ஆளும் அரசின் கடமை என்பதாக குறிப்பிட்டுள்ளது.முஸ்லிம் சமுதாயம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இது முஸ்லிம்களின் உரிமையே தவிர அவர்களை அரசு கவுரவிக்கவில்லை என்பததாகவும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு தற்போது நிலவும் சூழலில் நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களின் நிலைமைகளுக்கும் இன்று நிலவும் இடைவெளியை என்றைக்கும் பூர்த்தி செய்ய இயலாது என்றும் கூறியுள்ளது.இடஒதுக்கீடு அல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் சுமார் 90 நகரங்களில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிக்கூட இல்லாத நகரங்களில் Multi-Sectoral development Program என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் 14 பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸின் 83 அமைப்புகளில் ஒன்றான ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு புறம்பானது என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் இச்சிறப்பு அளிக்கப்படுவது அரசியல் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்துதான் மத்திய அரசு இப்பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஜூலை 18, 2010

அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் ஆழ்ந்த தூக்கம் "அவுட்'

கம்ப்யூட்டர் மற்றும் ஜபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என, அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பவர்கள் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், கம்ப்யூட்டர், லேப்-டாப் மற்றும் ஜபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு நாளடைவில் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரியவந்தது.மனித மூளை காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து, இரவு ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.
இதை, "மெலட்டோனின்' என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒரு அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூறுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், "மெலட்டோனின்' ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ கூறுகையில், "மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் வடிவமைப்பை பெற்றறுள்ளது.இரவில் கம்ப்யூட்டரை தொடர்ந்து பார்ப்பதால், அதிலிருந்து வரும் நீல நிற வெளிச்சத்தைக் கொண்டு "மெலட்டோனின்' ஹார்மோன், தூக்கத்தை தவிர்த்து, விழிப்புடன் இருக்க மூளையைத் தூண்டும்.இதனால், நாளடைவில் தூக்கம் வருவதில் சிக்கல் எழும். இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களைப் படிப்பதும் நல்ல வழி,' என்றார்.-

வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., தலைமை இன்ஜினியர் வரை கைது : லஞ்சம் தொடர்வதால் வேதனை

ஒவ்வொரு துறை ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசு பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்நிலையில், வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., மற்றும் தலைமை இன்ஜினியர் என பலரும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பு சான்றிதழ் பெற லஞ்சம், மின் இணைப்பு பெற லஞ்சம், குடிநீர் இணைப்பு பெற லஞ்சம், பணத்தை மீட்டுத் தர லஞ்சம் என அனைத்து துறைகளும் தற்போது லஞ்சத்தில் திளைத்து வருகின்றன. சாதாரண வருமான சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்றால், அவருக்கு கீழ் வேலை பார்ப்பவருக்கு கணிசமான தொகை கொடுத்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். இதே போன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி, வருவாய் துறை, போலீஸ் என அனைத்து துறைகளிலும் லஞ்சம் இல்லையேல் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதை நாம் அறிய முடிகிறது. ஆனால் அரசோ, ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கி வருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மின்சார வாரியத்தில் மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, வாரியத்திற்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை கூடுதல் இழப்பு ஏற்படுகிறது.ஊதிய உயர்வுக்கு பின், மின்வாரியம் சார்பில் தலைமை பொறியாளருக்கு மாதம் சாராசரியாக 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் அவர், அந்த சம்பளம் போதாமல் ஊழியர் இடமாற்றம், மின் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டே வருகிறார் என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. சமீபத்தில், சென்னையில் லஞ்சம் பெற்றதாக தலைமை இன்ஜினியர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது எடுத்துக்காட்டு. இவர்கள் தவிர வாரத்திற்கு இரண்டு வி.ஏ.ஓ.,க்கள், ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்படுகின்றனர்.
மற்ற துறைகளில் லஞ்சம் பெற்றால் தடுக்க வேண்டிய போலீஸ் துறையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் லஞ்சம் பெறப்படுகிறது. சமீபத்தில் டி.எஸ்.பி., ஒருவர் மற்றும் எஸ்.ஐ., - தலைமைக்காவலர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று இன்னும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள், குறிப்பிட்ட துறைகளுக்கு லஞ்சப் பணத்துடன் போனால் மட்டுமே காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் அரசு சம்பளத்தை வாரி இறைத்த போதிலும், லஞ்சம் கரை புரள்வதும், மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் மட்டுமே, "குடும்பம் நடத்த முடியும் என்ற அவல நிலை' அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதும் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலை 15, 2010

ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் 8 மாநிலங்களில் கடும் வறுமை: 42 கோடி பேர் தவிப்பு

ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்தியா குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த தகவல்கள் இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது.

2020-ம் ஆண்டு அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்து விடும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் 8 மாநிலங்களில் மிக கடுமையான வறுமை நிலவுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதே சம், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மக்கள் வறுமையில் சிக்கி தவிப்ப தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

8 மாநிலங்களிலும் 42 கோடி பேர் வறுமையில் தவிக்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 நாடுகளில் 41 கோடி பேர் வறுமையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த ஆண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவம், பொறியியல், தொழில் படிப்புகளிலும் வேலைவாய்ப்பிலும் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 69 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், அருந்ததியினர், இஸ்லாமியர் என சதவீத வாரியாக பிரித்து தரப்படுகிறது.
இந்நிலையில், தொழில் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1994ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும். இடைக்கால உத்தரவில், சம்பந்தப்பட்ட ஆண்டில் மாநில அரசு அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடரலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர்குமார் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அரசியலமைப்பு சட்ட வழக்காக விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பின்தங்கிய மக்கள் உள்ளனரா என்பதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் தமிழக அரசு கொடு¢க்க வேண்டும்.
அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்று மண்டல் கமிஷன் வழக்கில் விலக்கு அளிக்கப்பட்டதை, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம்.
அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கலாம். அதுவரை, தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும். இந்த உத்தரவோடு இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

தினகரன்-14-7-2010

ஜூலை 14, 2010

நமதூரில் திருடர்கள் அட்டூழியம்....

நேற்று இரவு நமதூர் பிஸ்மி தெருவில் இரண்டு வீட்டில் பீரோவை உடைத்து திருடர்கள் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

ஜூலை 12, 2010

இந்திய முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல - அமெரிக்க அதிகாரி

வாஷிங்டன்:இந்தியாவில் உள்ள 160 மில்லியன் முஸ்லீம்களும் தீவிரவாதிகள் கிடையாது என்றும்,என் சமூகம் இப்படி அழைக்கப்படுவதை கண்டு நொந்துப்போயுள்ளதாக இந்திய அமெரிக்கரும்,ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஃபராஹ் பண்டித் கூறியுள்ளார்.இந்தியாவில் முஸ்லீம்களின் தீவிரவாதம் தலைதூகியுள்ளதா? என்ற கேள்விக்கு ஃபராஹ் ஆவேசமாக பதிலளிக்கையில், ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகள் கிடையாது என்றார்.முஸ்லீம்கள் எந்த விதமான தீவிரவாதத்திலும் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிய ஃபராஹ்,உண்மையைச் சொல்லபோனால் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள 'தீவிரவாதக் கறையை' முஸ்லீம்கள் துடைத்தெறிய போராடுகிறார்கள் என்றார்.'மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இதில் முஸ்லீம்களும் அடங்குவர் அவர்களும் அவாறான மத்திரையை களைய போராடுகிறார்கள்' என்றார். இந்நாடுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்ந்துவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.நடந்து கொண்டிருக்கும் போர்களைப் பற்றி கேள்வி கேட்டபோது, இப்போர்கள் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்ற ஒபாமாவின் கருத்தை ஃபராஹ் முன்மொழிந்தார்.

அப்சல் குரு-காங்கிரஸ் பற்றிப் பேசிய பி.ஜே.பி. தலைவர் கத்காரி ஒரு 'மனநோயாளி' - சமாஜ்வாதி

அலஹாபாத்:பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் அப்சல் குரு காங்கிரஸ் கட்சியின் மருமகனாக திகழ்வதாகவும் பி.ஜே.பி. தலைவர் நிதின் கத்காரி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.இது குறித்து விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி.குமார் ராமன் சிங்க், இது போன்ற கருத்துக்கள் ஒரு மனநோயாளியிடமிருந்தே எதிர்பார்க்க முடியும் என்றார்.இக்கருத்துக்களை துரதிஷ்டம் என்று கூறிய குமார், ஒரு தேசிய கட்சியின் தலைவரிடமிருந்து இதுபோன்ற கருத்துக்கள் ஒரு போதும் வரக்கூடாதது என்றார். இது வெறுப்பு கொண்ட பி.ஜே.பி. அரசியல் கொள்கையை பிரதிப்பலிப்பதாக கூறியுள்ள அவர், இந்திய ஜனநாயக கொள்கைக்கும் பி.ஜே.பி.யின் கொள்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளதாக தெரிவித்தார்.அப்சல் குரு விவகாரத்தில், பி.ஜே.பி வேண்டுமென்றே சிறுபான்மையின மக்களை சீண்டிப் பார்க்கிறது என்று கூறியுள்ள குமார், இங்கு தான் சமாஜ்வாதி கட்சிக்கும் பி.ஜே.பி போன்ற கட்சிக்கும் மாற்றங்கள் இருப்பதாக தெரிவித்தார்.'காங்கிரஸை நாங்கள் எதிர்த்தாலும், இதுபோன்ற கேவலமான ஒழுக்கமற்ற தன்மையை ஒருபோதும் கையில் எடுத்தது கிடையாது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் சிங்க், பி.ஜே.பி. தலைவருக்கு காலில் வர வேண்டிய 'புண்' வாயில் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.'அரசியல் அனுபவமில்லாத கட்காரிக்கு, எங்கு எப்பொழுது என்ன பேச வேண்டும் என்பதே தெரியாது என்றார். இது போன்ற மனிதர்கள் தேசிய கட்சியின் தலைவர்களாக ஆக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது.' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏழு மாதங்களில் 90 அமெரிக்க வங்கிகள் திவால்

நியூயார்க்:அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 90 வங்கிகள் திவாலாகியுள்ளன.சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீங்கி பொருளாதார நிலை மேம்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது.அமெரிக்காவில் வேலையின்மையும் இப்போது அதிகரித்து வருகிறது. வேலையில்லாதவர்களில் விகிதம் 9 சதவீததத்தைத் தாண்டியுள்ளது. வரும் நாள்களில் மேலும் பல வங்கிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் தெரிகிறது.2010-ம் ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் என்ற அடைப்படையில் மூடப்பட்டுள்ளன.முக்கிய வங்கிகளான ஹோம் நேஷனல் வங்கி, பே நேஷனல் வங்கி, யூஎஸ்ஏ வங்கி, ஐடியா பெடரல் சேவிங்ஸ் வங்கி ஆகியவை ஜூலை 9-ம் தேதி மூடப்பட்டன.வேலைவாய்ப்பு இன்மை விகிதம் அதிகரிப்பதே சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் திவால் ஆவதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகளின் டெபாசிட்களுக்கு காப்பீடு வழக்கும் பெடரல் டெபாசிட் காப்பீட்டு நிறுவனத்தில் (எஃப்டிஐசி) சுமார் 8 ஆயிரம் வங்கிகள் காப்பீடு செய்துள்ளன. இப்போது வங்கிகள் திவால் ஆனதால் சுமார் 81 மில்லியன் டாலர் அந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் மூடப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாக வங்கிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.வங்கிகள் தொடர்ந்து மூடப்படுவதால், நாட்டின் வங்கி முறையே முழுத் தோல்வி அடைந்து விடும் வாய்ப்பு உள்ளது என்று எஃப்டிஐசி தலைவர் ஷீலா சி பேயர் தெரிவித்துள்ளார்.