Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 14, 2010

தூர்ந்து கிடக்கும் வீராணத்தின் துணை ஏரிகள்

கடலூர் மாவட்டத்தில் வீராணத்தின் துணை ஏரிகளாக உருவாக்கப்பட்டவை வாலாஜா, பெருமாள் ஏரிகள். மழை இல்லாத காலத்திலும், கொள்ளிடத்தில் வீணாகும் காவிரி நீரைப் பயன்படுத்தும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளுக்குக் காவிரி நீர் கிடைக்கும் வகையில், 1936-ல் கொள்ளிடம் கீழணை கட்டப்பட்டது.
வீராணம் ஏரி நிரம்பியதும் நீர் வீணாகாமல் இருக்க, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கும் வாலாஜா, பெருமாள் ஏரிகளுக்கும் உபரி நீர் செல்லும் வகையில், வீராணம் ஆயக்கட்டு முறை உருவாக்கப்பட்டு இருப்பது அற்புதமான நீர்ப்பாசன முறையாக அமைந்து உள்ளது. சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதால் மட்டுமே, வீராணம் ஏரி பற்றி விவசாயிகள் பேசுவது அரசின் காதுகளில் விழுகிறது. அதனால் வீராணம் ஏரியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைளில், நூறில் ஒன்றாகிலும் நிறைவேறுகிறது. ஆனால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி பற்றிய கோரிக்கைகளை தமிழக அரசு, தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகவே விவசாயிகள் கூறுகிறார்கள்.
வாலாஜா ஏரி 15 ஆயிரம் ஏக்கர், பெருமாள் ஏரி 10 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பளவைக் கொண்டவை. இந்த இரு ஏரிகளையும் 12 கி.மீ. நீளம் உள்ள நடுப்பரவனாறு இணைக்கிறது. பராமரிப்பு இன்மையால் கடந்த 50 ஆண்டுகளில் 10 அடி உயரத்துக்கு மண் மேடிட்டு, வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து, தற்போது ஒரு வாய்க்கால்போல் காட்சி அளிக்கிறது. பெருமாள் ஏரி விரைவில் தூர்ந்து விடும் அபாயம் உள்ளது. என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர், வாரத்தில் 3 நாள்கள் பெருமாள் ஏரிக்கும், 4 நாள்கள் வாலாஜா ஏரிக்கும் விடப்படுகிறது. சுரங்க நீரைச் சுத்திகரிக்காமல் விடுவதால், அதில் உள்ள கரித்துகள்கள் மற்றும் கழிமண், படிந்து, இரு ஏரிகளும் தூர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். எனினும் சுரங்க நீர் இந்த இரு ஏரிகளின் பாசனத் தேவையில் 25 சதவீதத்தைக் கூடப் பூர்த்தி செய்வதில்லை என்கிறார்கள்.
முப்போகம் விளையும் 30 ஆயிரம் நிலங்கள் நிச்சயமற்ற குறுவை சாகுபடிக்கும், நிச்சயமற்ற காலம் கடந்த சம்பா சாகுபடிக்கும் தள்ளப்பட்டுவிட்டது. இரு ஏரிகளும் தூர்வாரப்பட்டு, பரவனாற்றின் கரைகளைச் சீரமைத்து, வடகிழக்குப் பருவமழை காலத்தில் முறையாக உபரிநீர் கடலுக்குள் வழியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முப்போகம் நெல் விளையும் என்கிறார்கள் விவசாயிகள்.
இதுகுறித்து பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் கூறுகையில்,
"50 ஆண்டுகளில் வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து விட்டது. பெருமாள் ஏரி தூர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமிக்க முடியவில்லை. வழிந்தோடும் உபரி நீரும் விரைவில் கடலில் கலக்காததால் 20 கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஆண்டுதோறும் ரூ.15 கோடியை அள்ளி வீசுகிறது தமிழக அரசு. ஆனால் நிரந்தரத் தீர்வுக்கு வழிகாணவில்லை. பரவனாற்று நீர் எளிதில் வடிய, ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட அருவாமூக்குத் திட்டம் அறிமுக நிலையிலும், வாலாஜா ஏரியை ரு.25 கோடியில் தூர்வாரும் திட்டம், என்.எல்.சி. நிறுவனத்தின் அறிவிப்பு நிலையிலும் உள்ளது. பெருமாள் ஏரியைத் தூர்வார திட்டம் தயாரிக்கப்படுவதாக பல்லாண்டுகளாகத் தெரிவிக்கிறார்கள்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...