Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2011

என்னைக் கைது செய்யுங்கள்-அத்வானி ஆவேசப் பேச்சு: யாத்திரை போகப் போவதாக அறிவிப்பு

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது, நிரூபணமாகியுள்ளது. இதுதொடர்பான பாஜகவின் ஸ்டிங் ஆபரேஷனுக்கு உத்தரவிட்டதே நான்தான். எனவே அரசு தைரியமிருந்தால் என்னைக் கைது செய்யட்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.

மேலும் ஊழலுக்கு எதிராக யாத்திரை போகப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் காரணமாக ஸ்தம்பித்தது. இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபாவில் இன்று அத்வானி பேசுகையில், 2008ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்தது அரசுத் தரப்பு. இதுகுறித்து அறிய வந்ததும் எங்களது எம்.பிக்கள் மூலம் நாங்கள் அரசுத் தரப்பை சிக்க வைக்க ஸ்டிங் ஆபரேஷனை நடத்தினோம். இது எனக்கு முன்பே தெரியும். ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மோசமான செயலை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதால்தான் நான் அப்போது எதுவும் சொல்லாமல் இருந்தேன்.

எங்களது கட்சியினரை கைது செய்துள்ள அரசு, தைரியமிருந்தால், துணிச்சல் இருந்தால் என்னைக் கைது செய்யட்டும். நான் இந்த ஸ்டிங் ஆபரேஷனுக்கு காரணம். எனவே என்னைக் கைது செய்யுங்கள்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள எங்களது கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் பகன் சிங் குலஸ்தே மற்றும் மகாவீர் சிங் பகோரா ஆகியோர் அப்பாவிகள் என்றார்.

லோக்சபாவில் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். இதற்காக கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

லோக்சபாவில் அத்வானியின் ஆவேசப் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பும், அதை எதிர்த்து பாஜக தரப்பும் ஆவேசமாக பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைதான் ராஜ்யசபாவிலும் நிலவியது.

நாடாளுமன்றப் பேச்சுக்குப் பின்னர் அத்வானி பேசுகையில், ஊழலுக்கு எதிராக யாத்திரை செல்ல விரும்புகிறேன். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக இதை மேற்கொள்ள நான் விரும்புகிறேன் என்று கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...