Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 06, 2013

வெள்ள அபாய அச்சம்,மாவட்ட கலெக்டர் ரகசிய ஆய்வு !

வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். வடவாறிலிருந்து வரும் தண்ணீர் உத்திரசோலை மதகு வழியாக வீராணம் ஏரிக்குள் நுழையும். அதன்படி வீராணம் ஏரி நிரம்பியவுடன் வடவாறிலிருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்படும் அப்போது ஏரியின் தண்ணீர் வெளியேறாத வகையில் உத்திரசோலையில் உள்ள ஷட்டருடன் கூடிய மதகை மூடிவிடுவர். மீண்டும் தண்ணீர் வரும் காலங்களில் மட்டும் ஷட்டர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து, கொள்ளிடம் வழியாக கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை( புதன்கிழமை) கீழணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் உத்திரசோலையில் உள்ள மதகினை சுண்ணாம்பு அடித்தும், ஷட்டரை திறக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வடவாற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே 15 தினங்களில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டும். வறண்டு கிடந்த வீராணம் ஏரிக்கு தண்ணீர் வர இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மாவட்ட ஆட்சியர் ரகசிய ஆய்வு : மேட்டூர் அணையில் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும் என
தெரிகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் கொள்ளிடக்கரை, கீழணை ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதுவரை கொள்ளிடம் ஆற்று வழியாக கல்லணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. நேற்று முன்தினம் சோதனையாக திறக்கப்பட்டு உடனடியாக மூடப்பட்டதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

கொள்ளிடம் ஆற்றில் 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்பதால் வெள்ள அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில் மாவட்ட ஆட்சியர் ரகசியமாக ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது: ஆய்வில் விவசாயிகளிடம் எந்தவிதமான ஆலோசனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

-தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...