Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 30, 2012

அமீர்கான்:சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை


புதுடெல்லி:எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி முஸ்லிமின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்கு அமீர்கான் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பொய் குற்றச்சாட்டை சுமத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் டெல்லி போலீசாரால் அமீர்கான் பிடித்துச் செல்லப்பட்டார். மைமூனாபீ அமீர்கானின் தாயார் ஆவார். மூளையில் இரத்த நாளம் உடைந்து தளர்வாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை 14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்போம் என கருதவில்லை.

ஜனவரி 9, 2012 ஆம் ஆண்டு மகன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவரால் தனது மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த இயலவில்லை. கடுமையான முயற்சிக்கு பிறகே வார்த்தைகள் உடைந்து போய் அவரிடமிருந்து வெளியாகின.
முஹம்மது அமீர்கான் மீது டெல்லியை சுற்றி நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 20 வழக்குகள் சுமத்தப்பட்டன. தற்போது பலத்த சட்டரீதியான போராட்டத்திற்கு பிறகு 17 வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்டார். இம்மாதம்(ஜனவரி)தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 வழக்குகள் மீதமுள்ளன. 2 வழக்குகளில் மேல்முறையீடுச் செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனையை ரத்துச் செய்தது.

14 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியான அமீர்கான் முதலில் வானத்தை அண்ணாந்து பார்த்தார். “நான் கடந்த 14 ஆண்டுகளாக வானத்தில் நட்சத்திரங்களை பார்க்கவில்லை. நான் உயர் பாதுகாப்பு நிறைந்த தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். இரவு துவங்கும் முன்பே நான் சிறை அறையில் அடைக்கப்படுவேன். ஆதலால் என்னால் கடந்த 14 ஆண்டுகளாக நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை. இப்பொழுது நான் வானத்தில் நட்சத்திரங்களை பார்த்து எனது சுதந்திரத்தை உணர்கிறேன்” என்று அமீர்கான் கூறுகிறார்.

14 ஆண்டுகள் தனிமைச் சிறை. மூன்றாம் தர(thirddegree torture) சித்திரவதைகள். அமீர் மாமூலான வாழ்க்கைக்கு திரும்ப பல மாதங்கள் தேவைப்படும்.

இவ்வளவு வழக்குகளில் இருந்து விடுபட்டு சிறையை விட்டு வெளியே வருவோம் என அமீர் நம்பவில்லை. ஆமை வேகத்தில் நடக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் அவர் தனது நம்பிக்கையை இழந்திருந்தார்.



“ஒன்றுக்கு மேல் ஒன்றாக 20 வழக்குகளை போலீஸ் என் மீது சுமத்தியது. படு தாமதமான நீதிமன்ற நடவடிக்கைகள் தாம் எனக்கு உச்சபட்ச துயரமாக ஆகிவிட்டது. கடந்த 14 ஆண்டுகளில் நான் மனோரீதியான கவலையால் பாதிக்கப்பட்டேன். உலகம் மிகவும் மாறிவிட்டது. எனக்கு மொபைல் ஃபோனை எப்படி இயக்குவது என்பது கூட தெரியாது. நான் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தான் முதன் முதலாக மொபைல் ஃபோனை பார்க்கிறேன்.” என அப்பாவித்தனமாக கூறுகிறார் அமீர்.

சிறையில் அமீர், மேல்நிலை வகுப்பை தேறாத கைதிகளுக்காக நடத்தப்படும் Bachelor Preparatory Program படிப்பில் தேர்ச்சி பெற்றார். 20 குண்டுவெடிப்பு வழக்குகள் சுமத்தப்பட்ட அமீர்கான் 2011 ஆம் ஆண்டு ‘காரகார்பந்தி ஜீவன்’ என்ற தேசிய சிறை மாத இதழில் 2011-ஆம் ஆண்டு சிறந்த கட்டுரையை எழுதியதற்கான விருதை பெற்றுள்ளார். அவர் எழுதிய கட்டுரைக்கான தலைப்பு ‘மகாத்மா காந்தியும், அணிசேரா இயக்கமும்’ என்பதாகும்.

திஹார் சிறையில் வைத்து இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU)பி.ஏ பட்டப்படிப்பிற்கு சேர்ந்தார்.

தன்னைக் கைது செய்தவுடன் ஒரு தீவிரவாதியின் குடும்பம் என பழி தூற்றி தனது உறவினர்கள் தனது குடும்பத்தை ஒதுக்கி தள்ளியதைக் குறித்து பேசுகையில் உடைந்து போகிறார் அமீர்.

முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் மனப்பாங்கால் மிகவும் காயப்பட்டுள்ளார். தான் சிறையில் வாடும் வேளையில் எந்தவொரு சமுதாய தலைவர்களும் தனது குடும்பத்தினரை சந்தித்து உதவ முன்வரவில்லை எனக் கூறும் அமீர், பொருளாதார மற்றும் சட்டரீதியான உதவிகளை தன்னந்தனியாகவே தனது குடும்பம் சந்தித்தது என தெரிவிக்கிறார்.

“எனது அண்டை அயலாரும், உற்றார் உறவினரும் என்னை ஒரு தீவிரவாதியாகவே கருதினார்கள். எனது சமூகமும், உறவினர்களும் கூட நாங்கள் உதவிக்காக ஏங்கிய வேளையில் உதவ முன்வராததை நான் சிறையில் இருந்த வேளையில் எனக்கு எனது பெற்றோர்கள் தெரிவித்தனர். அதனால் நான் மிகவும் உடைந்து போனேன்.

அமீரால் தனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்குகூட கட்டணத்தை கொடுக்க முடியவில்லை. வழக்கறிஞர்கள் மனிதநேயத்தின் அடிப்படையில் அமீருடைய வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார்கள்.

சமூகமோ, உறவினர்களோ, சிவில் சமூகமோ எவ்வித உதவியும் தீவிரவாத வழக்குகள் சுமத்தப்பட்ட இந்த அப்பாவிக்கு அளிக்கவில்லை. வயதான, நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்தாம் இந்திய அரசுடன் கடுமையான சட்டரீதியான போராட்டத்தை சொந்தமாக நடத்தியுள்ளார்கள்.

ஆகஸ்ட் 2001-ஆம் ஆண்டு அமீருக்கு நம்பிக்கை அளித்த தந்தை மாரடைப்பால் இறந்து போனார். அதன் பிறகு அவரது சகோதரியும், தாயாரும், தூரத்து உறவினர் ஒருவரும் சட்டரீதியான தொடர் போராட்டத்தில் உறுதுணையாக இருந்துள்ளார்கள். தற்போது அமீரின் விடுதலைக்குப் பிறகு உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கியுள்ளதை எண்ணி அவர் மகிழ்ச்சி அடைகிறார்.

“நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் எனது வாழ்க்கையும், எனது குடும்பமும் சீர்குலைந்து விட்டன.” என அமீர் கூறுகிறார்.

போலீசாரின் தவறான குற்றச்சாட்டால் தனது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தொடர்ந்து சட்டரீதியாக போராடிய தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார். அமீரின் குடும்பம் தங்களிடம் இருந்த அனைத்தையும் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக செலவழித்துவிட்டார்கள். அவரது தாய் தளர்வாத நோயால்பா திக்கப்பட்டுள்ளார் .மிகவும் பின் தங்கிய குடும்பம் கவனிப்பாரற்று உள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த அமீர் வீட்டில் இருந்து வெளியேசெல்ல அஞ்சுகிறார். “எங்கே நான் வெளியே சென்றால் மீண்டும் என்னை போலீஸ் பிடித்து சித்திரவதைச் செய்து சிறையில் அடைத்துவிடுவார்களா?” என அச்சத்துடன் கேட்கிறார் அமீர்.

அமீருக்கு தற்பொழுது இரண்டு பிரச்சனை. ஒன்று பாதுகாப்பு. இரண்டு மறுவாழ்வு. போலீசுக்கு பயந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து மீடியாவிடமோ வேறு நபர்களிடமோ பேச தயங்குகிறார் அமீர். இரண்டாவதாக அவரது வாழ்க்கையை கழிப்பதற்கான வேலை தேவை. அவரோ பயத்தால் வெளியே செல்ல தயங்குகிறார். என்ன வேலை செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. வழிகாட்டவும் ஆள் இல்லை. தனது சுமூகமான வாழ்க்கைக்கு அவர் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளை நம்பியுள்ளார்.

தற்பொழுது இரண்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ளன. அவ்வழக்குகளில் வாதாட வழக்கறிஞர்களுக்கு அளிப்பதற்கான குறைந்தபட்ச தொகை கூட அவரிடம் இல்லை.

அமீருக்கு நேர்ந்த இந்த துயரம் அவருக்கு மட்டும் நேர்ந்தது அல்ல. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு சம உரிமையை வழங்கும் இந்தியாவை குறித்து கனவு காணும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட துயரமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...