Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 07, 2012

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!


மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.
உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர்.மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மிஸ்டு கால் மூலமாக காதல் வலையில் சிக்குபவர்களிடையே பொருத்தங்கள் எதுவும் தேவை இல்லை. நிறம், அழகு, சாதி, குலம், குடும்பம், கல்வி, குணம், கலாச்சாரம், செல்வம் போன்ற எல்லைகள் எதுவும் இல்லை. இங்குள்ள ஒரே தகுதி குரல் மட்டுமே. அக்குரலில் காதல் தழும்புகிறதா? எனில் பூவின் மீது வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே மோகமும் பற்றிக்கொள்ளும். பூவிற்கும், வண்ணத்துப் பூச்சிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பின் ஆயுளே மிஸ்டுகால் மூலமாக உருவாகும் காதலுக்கும் பொருந்துவதால் வாழ்க்கை தடம்புரண்டு போய்விடுகிறது.

மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்
ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்….!!!
ஆனால் என்ன செய்ய! பாழாய் போன மனம் வசீகரிக்கும் குரலில் வலுவிழந்து விடுகிறதே.
யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.

1.வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.
2.கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.
3.தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.
4.காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்

அழையா விருந்தாளியின் மனசு!
மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.
அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.
இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.
இதற்கு என்ன காரணம்?
1.வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு தேவையான கல்வி நமது குடும்பங்களில் இருந்தோ, கல்வி நிலையங்களில் இருந்தோ , மார்க்க நிறுவனங்களில் இருந்தோ கிடைப்பதில்லை.
2.நவீன காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக உருவாகும் அபாயங்கள் குறித்து இந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுப்பதில்லை.
3.தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சமூகம் அலட்சியமான போக்கை கையாண்டு வருகிறது. காலத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பழைய சம்பிரதாயங்களில் இருந்து மாத்தி யோசிக்க சமூகம் தற்பொழுதும் தயாராகவில்லை.
4.தன் மீதான அதீத நம்பிக்கையில் வளரும் இந்த தகாத உறவுகள் வெகுவிரைவில் தீவிரமடைந்துவிடுகிறது.
5.பெண்களில் தீவிரமாக காணப்படும் எதனையும் எளிதில் உள்வாங்கும் குணம் பாலியல் ரீதியான தவறுகளை புரிய துணைபுரிகின்றது.
6.நவீன காலக்கட்டத்தில் பெண்களுக்கு கிடைத்துள்ள பொருளாதார சுதந்திரம் செல்ஃபோன் தொடர்புகளை அதிகரிக்க செய்கிறது.
7.தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் எந்த மோசமான காட்சிகளையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காணும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புதிய தலைமுறையினருக்கு இடையே ஆண்-பெண் உறவுகள் குறித்த பார்வையில் கலாச்சார வீழ்ச்சியை உருவாக்க இது காரணமாகிறது.
8.இல்லற வாழ்க்கையில் தம்பதியினர் இடையே பரஸ்பர அன்பும், பிணைப்பும் வறட்சியாக காணப்படுவதால் தாம்பத்தியம் குறித்த கனவு மாளிகைகள் தகர்ந்து போகின்றன. இல்லற வாழ்க்கையில் வெறும் உடல் இச்சை மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பொழுது வெகுவிரைவில் திருமண வாழ்க்கை சலித்துப் போகிறது.
9.வளைகுடாவாசிகளைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு விடுகிறது. விடுமுறை முடிந்து கணவன் வெளிநாட்டுக்கு திரும்புகையில் தம்பதியினர் இடையே உண்மையான அன்பும், நேசமும், காதலும் முறையாக பரிமாறப்படாத சூழல் உருவாகிவிடுகிறது. இத்தகையதொரு சூன்யமான சூழலில் வரும் மிஸ்டுகால்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.
10.ஒரு குழந்தை பிறந்த உடன் தாம்பத்தியத்தின் வசந்தம் அணைந்து போவதைத் தான் பொதுவாக காண்கிறோம். முற்றிலும் இயந்திர மயமாகிப்போன வாழ்க்கையில் புதிய வசந்தங்களை மனம் தேட துவங்குகிறது.
தொடர்கதையாகும் துயரங்கள்!
மிஸ்டு கால் மூலமாக இளம்பெண்களின் அந்தரங்க வாழ்வில் ஊடுருவும் ஆசாமி உடனான உறவில் ஒரேயொரு அடிப்படையாக அமைவது செல்ஃபோன் நம்பர் மட்டுமே. இந்த ஆசாமி, குடிகாரனாகவோ, போதைப் பொருளுக்கு அடிமையானவனாகவோ, பெண்களை ஆபாச வலையில் சிக்கவைத்து அதன் மூலம் சம்பாதிப்பவனாகவோ, மனநோயாளியாகவோ, ரெளடியாகவோ இருக்கலாம்.
மேலே கூறப்பட்ட நபர்களுக்கு காதலும், பாலியலும் எல்லாம் ஆதாயமும், பொழுது போக்குமாகும். முறையான வழிகாட்டுதல்கள் இன்றி பாலியல் வக்கிரத்திற்கு அடிமையாகிப் போன விடலைப் பையன்களும் இதில் அடங்குவர். இத்தகைய நபர்கள் மிஸ்டுகால்களை விடுத்து காதில் ஓதும் மந்திரங்களை நம்பும் இளம் பெண்கள் வரப்போகும் துயரங்களை விலைக் கொடுத்து வாங்குகின்றனர்.
சிம் கார்டை மாற்றுவதன் மூலம் மிஸ்டுகால்களை தொடுத்து இளம் பெண்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தப்பித்து விடுகின்றார்கள்.
தற்பொழுது குறைந்த கட்டணத்தில் இணையதளம் வாயிலாக இயங்கும் சட்டமுறையற்ற தொலைபேசி கார்டுகள் மூலமாகவும் அழைத்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதில் அழைத்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அனாமதேயர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிடுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு சிலரே சைபர் செல்லில் புகார் அளிக்கின்றனர். திருமணமான பெண்களுக்கோ மிஸ்டுகால்கள் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இங்கே சில பெண்கள் துயரங்களுக்கு அப்ரூவர்களாக மாறிவிடுகின்றார்கள். இரண்டு குடும்பங்களிலும் சண்டைகளும், சச்சரவுகளும் உருவாகின்றன. குழந்தைகள் கவனிப்பாரற்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள். இறுதியாக தற்கொலையில் அபயம் தேடும் அவலநிலைக்கு மிஸ்டுகால்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் செல்கிறார்கள்.
இதுவெல்லாம் ஏதோ ஒரு சில சம்பவங்கள் என்று கூறி நாம் தப்புவிக்க முயலக்கூடாது.
செல்ஃபோன்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடும்ப உறவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ திருமண உறவுகள் விவகாரத்தை நோக்கிச் சென்றுள்ளன. எத்தனையோ இளம்பெண்கள் ஓடிப்போய் கடைசியில் ஆபத்துகளில் சிக்கியுள்ளனர். மன நல மருத்துவமனைகளும், குடும்ப நீதிமன்றங்களும் இதற்கு சாட்சியம் வகிக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு அது மாறாத வடுவாக மாறிவிடுகிறது.
உண்மையில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற சமூகரீதியான உணர்வுதான் இன்று ஒழுக்க விழுமியங்கள் ஓரளவு பேணப்படுவதற்கு காரணமாகும்.
புதிய தலைமுறையினர் இதுக்குறித்து எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. விளைவு – துயரங்கள் தொடர்கதையாகிறது.
தீர்வு என்ன?
காலம் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிமனையாகும். மாற்றங்கள் காலத்தின் புத்தாடைகள். இந்த ஆடைகளில் சில பொருத்தமாக அமையலாம். சில பொருந்தாது போகலாம். மனித சமூகம் தீமைகளில் குப்புற விழுந்த போதெல்லாம் விழுமியங்களின் வேத பாடங்கள் அவர்களை சீர்திருத்தியன. இனி வேத பாடங்களும் வரப்போவதில்லை. இறைத்தூதர்களும் வரமாட்டார்கள். ஆகவே, இந்த புதிய உலகம் விழுமியங்களில் உருவாக்கும் சீர்கேட்டிற்கு புதிய பரிகாரங்கள் தேவைப்படுகின்றன.
நீண்ட சொற்பொழிவுகளும், புத்தகங்களும் எழுதி நவீன தலைமுறையை நாம் சீர்திருத்தலாம் என கனவு காணத் தேவையில்லை. கொள்கைகளையும், கோட்பாடுகளையும் புதிய யுக்திகளை பயன்படுத்தி இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டியது சான்றோர்களின் பொறுப்பாகும்.
இன்றைய காலக்கட்டத்தில் தாம்பத்திய-குடும்ப வாழ்க்கையின் பரிசுத்தத்தை பேண திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங்கும், திருமணத்திற்கு பிந்தைய கவுன்சிலிங்கும்(மனவளத் துணை ஆலோசனை) மிகவும் உசிதமான ஒரு தீர்வாக கருதப்படுகிறது.
கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் அண்மைக் காலமாக திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங்கை கட்டாயமாக்கியுள்ளனர். அதிகரித்து வரும் விவாகரத்தை குறைக்கவே இத்திட்டம். இதனால் அதிகமான பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய கவுன்சிலிங்குகளில் முக்கியமாக கீழ்க்கண்டவை கவனிக்கப்பட வேண்டும்:
1.பரஸ்பர நம்பிக்கை- இது தகர்ந்துவிட்டால் குடும்பத்தின் நெடுந்தூண் சரிந்துவிடும்.
2.வாழ்க்கை பரிசுத்தம், உயர் பண்புகள், உணர்ச்சிப்பூர்வமான உறவு ஆகிய விழுமியங்களின் மகத்துவம்
3.ஆறுதல் இல்லாத இல்லற வாழ்வில் நிம்மதி இருக்காது
4.இத்தகைய உறவுகளில் தற்காலிகமாக மட்டுமே நிம்மதி கிடைக்கும்
5.இல்லற வாழ்வு என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. உடல் சார்ந்த ஈர்ப்புடன் அங்கு இரக்கமும், இயல்பான நேசமும், பரஸ்பர அன்பும் இழையோட வேண்டும்.
6.இல்லற வாழ்க்கையை நேர்த்தியாக கொண்டு செல்வதில் இல்லற பங்காளிகளில் ஒருவருக்கு மட்டும் கடமை அல்ல. இருவருக்கும் சமமான பங்குண்டு.
7.இவ்வுலகின் உத்தரவாதமில்லாத குறுகிய கால வாழ்க்கையில் கிடைக்கும் அற்ப இன்பத்தை அனுபவிக்க மரணத்திற்கு பிந்தைய நிரந்தர வாழ்வின் இனிமையை இழந்துவிடக் கூடாது.
இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய இறைநம்பிக்கைக்கான பயிற்சியை(அத்தர்பியத்துல் ஈமானிய்யா) குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஊட்டி வளர்த்து பெற்றோரும் முன்மாதிரிகளாக மாறும்பொழுது இத்தகைய சஞ்சலங்களும், சபலங்களும் நெருங்க முயலும்பொழுது சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உணர்வு ஏற்படும்.
ஆகவே தவறிய அழைப்புகளில் தடுமாறாமல், தடம் புரளாமல் தனித்தன்மையை பாதுகாப்போம்.
அ.செய்யது அலீ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...