Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 06, 2012

காஸ் தட்டுப்பாட்டால் அரசுக்கு புது தலைவலி : மின்சார அடுப்பிற்கு மாறும் மக்கள்

கடலூர் :கடலூர் மாவட்டத்தில் காஸ் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் நுகர்வோர்கள் வேறு வழியின்றி மின்சார அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே மின்வெட்டில் தவிக்கும் தமிழகத்திற்கு மேலும் ஒரு "தலைவலி' ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 3 லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. இதற்காக இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பில் கடலூர் மற்றும் நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலம், சிதம்பரத்தில் தலா ஒரு ஏஜன்சியும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா ஒரு ஏஜன்சியும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பண்ருட்டியில் இரண்டும், நெய்வேலி மற்றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜன்சி என 15 காஸ் ஏஜன்சிகள் இயங்கி வருகின்றன.
இந்த காஸ் ஏஜன்சிகள் பதிவு செய்த நுகர்வோர்களுக்கு சரியான நேரத்தில் சிலிண்டர் சப்ளை செய்யப்படுவதில்லை. போலி இணைப்புகளை கட்டுப்படுத்துவதாகக் கூறி நாளுக்கு ஒரு சட்டத்தை வகுத்துக் கொள்கின்றன.
சிலிண்டர் சப்ளை செய்த ஒருவருக்கு 21 நாட்கள் கழித்துதான் மீண்டும் சிலிண்டருக்காக பதிவு செய்ய முடியும். அதேப்போன்று பதிவு செய்து 15 நாட்களில் சப்ளை செய்து வந்த ஏஜன்சிகள் தற்போது மாதக்கணக்கில் சிலிண்டர் சப்ளை செய்யாமல் இருந்து வருகின்றன.

இந்த தட்டுப்பாடு ஓரிரு மாதங்களாக அல்ல. கடந்த ஒரு ஆண்டாகவே இதே நிலைதான் நீடித்து வருகிறது. விறகு அடுப்பை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க காஸ் சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என அரசு ஒரு புறம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அதற்கேற்ப காஸ் சிலிண்டரை சப்ளை செய்வதில்லை. ஏஜென்சிகள் ஏதாவது ஒன்றை "நொண்டி சாக்காக' வைத்து சிலிண்டர் வழங்குவதை தாமதப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் காஸ் மூலம் ஓடும் ஆட்டோக்களுக்கு சிலிண்டர்கள் தாராளமாக கிடைத்து வருகிறது எப்படி என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


சாதாரணமாக ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் மாதம் ஒரு சிலிண்டராவது தேவைப்படும். ஆனால் 50 முதல் 70 நாட்கள் கழித்து சப்ளை செய்யப்படுவதால் நுகர்வோர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த தட்டுப்பாடு கடலூர், பண்ருட்டி, வடலூர் பகுதிகளில் அதிகமாக நிலவி வருகிறது.
இப்பிரச்னை தொடர்பாக கலெக்டர் ராஜேந்திர ரத்னுவிடம் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஏஜன்சிகள், ஏரியா மேலாளர்கள், நுகர்வோர் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை வரும் வாரத்தில் ஏற்பாடு செய்யுமாறு டி.ஆர்.ஓ., ராஜேந்திரனிடம் அறிவுறுத்தியுள்ளார்.


மின்சார அடுப்புக்கு...
கோடை துவங்கியதில் இருந்து தமிழகம் கடும் மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து வருகிறது. நாளொன்றுக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் மின்சிக்கன நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. 40 வாட்ஸ் எரியும் குண்டு பல்புகளை அகற்றிவிட்டு 18 வாட்சில் உள்ள சி.எப்.எல்., பல்பை மாற்றி வரும் இவ்வேளையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் வேறு வழியின்றி மின்சார அடுப்பை பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அடுப்புகளில் 2000 வாட்ஸ் மின்சாரம் செலவழிப்பதால் மேலும் மின் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...