Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 10, 2012

சுவிஸ் வங்கி பதுக்கல் பட்டியலை வெளியிட்டார் கெஜ்ரிவால்

புதுடில்லி:இந்தியாவைச் சேர்ந்த, பிரபல தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட, 700 பேர், சுவிஸ் வங்கியில், 6,000 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக, ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த "குண்டை' வீசியுள்ளார். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை மத்திய அரசு ஊக்கப் படுத்துவதாகவும், அவர் புகார் கூறினார்."ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பைச் சேர்ந்தவரும், புதிதாக அரசியல் கட்சியை துவக்கியுள்ளவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களின், ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார்.

 அதிரடி:காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேரா, மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி ஆகியோருக்கு எதிராக, ஏற்கனவே குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். கெஜ்ரிவாலின் அதிரடி நேற்றும் தொடர்ந்தது.டில்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், அவர் கூறியதாவது:வாரம் தோறும், ஒரு குற்றச்சாட்டு களை கூறி, வெற்று விளம்பரம் தேடுவதாக, காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜ., வினரும், என்னை கிண்டலடிக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு கட்சியில் உள்ள சிலர், இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வெளியிடும்படி, என்னை வற்புறுத்துகின்றனர். மூத்த காங்., தலைவர் ஒருவர், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப் படுத்தும்படி, எங்களிடம் கூறினார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கியில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களின் பட்டியல், மத்திய அரசிடம் உள்ளது. இதில், 700 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்; 2006ம் ஆண்டு நிலவரப்படி, இவர்கள், 6,000 கோடி ரூபாயை, அங்கு பதுக்கி வைத்துள்ளனர். இந்த பட்டியல் குறித்த, "சிடி' எங்களுக்கும் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள, சில பிரபலங்களின் பெயர்களை, இங்கு தெரிவிக்க விரும்புகிறோம். ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி., தலைவர், அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோரின் சுவிஸ் வங்கி கணக்குகளில், தலா, 100 கோடி ரூபாய் உள்ளது. அமலாக்க துறையின் முன்னாள் அதிகாரி, சந்தீப் டாண்டன் கணக்கில், 125 கோடி ரூபாயும், அவரது மனைவியும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.,யுமான, அனுவின் வங்கி கணக்கில், 125 கோடி ரூபாயும் உள்ளது. ரிலையன்ஸ் குரூப்பின், மொடெக் சாப்ட்வேர் பி.லிட்., நிறுவனத்தின் வங்கி கணக்கில், 2,100 கோடி ரூபாய் உள்ளது. தொழில் அதிபர் நரேஷ் கோயலின் கணக்கில், 80 கோடி ரூபாய் உள்ளது. டாபூர் நிறுவனத்தை சேர்ந்த, மூன்று பேரின் கணக்குகளில், 25 கோடி ரூபாய் உள்ளது. சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் சார்பில், 25 லட்சம் கோடி, கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த பட்டியலில் உள்ள விவரப்படி, 6,000 கோடிக்கு மட்டுமே கணக்கு உள்ளது. மீதமுள்ள பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது பற்றி அரசுக்கு தெரியும்; ஆனாலும், இதுகுறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை. சோதனை
நடக்கவில்லை:இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த, சிலரது வீடுகளில் மட்டும் சோதனையிடப்பட்டது; மற்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை. குறிப்பாக, அம்பானி சகோதரர்களின் வீடுகளில், ஏன் சோதனை நடத்தவில்லை என, தெரியவில்லை. இது தொடர்பாக, முகேஷ் அம்பானி, அப்போதைய நிதி அமைச்சரான, பிரணாப் முகர்ஜியை சந்தித்தாகவும் தகவல் வெளியானது. தங்களுடைய சுவிஸ் வங்கி கணக்குகளுக்கு, இவ்வளவு பணம் சென்றடைந்தது எப்படி என்பதை, அம்பானி சகோதரர்களும், மற்ற தொழில் அதிபர்களும் விளக்க வேண்டும்.முறைகேட்டில் ஈடுபட்டது, கண்டறியப்பட்டால், அவர்களை கைது செய்ய வேண்டும்.

கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது; ஊக்குவிக்கிறது. இந்த விவகாரத்தில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த, எச்.எஸ்.பி.சி., வங்கியும், பண பதுக்கலுக்கு துணை போயுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலர், தங்களின் நிதி, இந்தியாவுக்கு சென்றடைய வேண்டுமெனில், எச்.எஸ்.பி.சி., மூலமாக, பணப் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றனர். இந்த வங்கியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...