Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 19, 2014

பிளஸ் டூ - அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூ.10000 உதவித் தொகை!

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.

இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்லூரிக் கல்வி இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வருவாய் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, படிப்பில் சிறந்த மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போது அன்றாட செலவுகளுக்குப் பயன்படும் வகையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. என்ஜினீயரிங், மருத்துவம், கலை, அறிவியல், வணிகவியல் உள்பட பல்வேறு இளநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது. இந்த உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படும் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

அதே பாடப்பிரிவில் முதுநிலைப் படிப்பில் தொடர்ந்து படித்தால், அந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம்
வழங்கப்படும். தொழில் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நான்கு, ஐந்தாம் ஆண்டுகளில் மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்கப்படும். அதிகப்பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டைச் சேர்ந்த 4,883 மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் 50 சதவீதம் பேர் மாணவிகள். இந்த உதவித் தொகை வழங்குவதில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும். அதாவது, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும், பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடங்களும், ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இடங்களும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 50.5 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக 3 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1,200க்கு 80 பெர்சன்டைல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது. பிளஸ் டூ தேர்வில் 1,200க்கு 1,088 மதிப்பெண்களும் அதற்கு மேலும் பெற்றுள்ள பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) 968 மதிப்பெண்களும் அதற்கு மேலும் எடுத்து இருக்க வேண்டும். 847 மதிப்பெண்களும் அதற்கு மேலும் எடுத்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் 818 மதிப்பெண்களும் அதற்கு மேலும் பெற்றுள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

இந்தக் கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் வேறு எந்தக் கல்வி உதவித் தொகையையும் பெறக் கூடாது என்பது விதிமுறை. கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தைத் டவுன்லோடு செய்துகொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் சேமிப்புக் கணக்கிற்கு வங்கியின் மின்னணுப் பரிவர்த்தனை மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதனால், இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அது குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். அத்துடன் இ-மெயில் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களும் தேவை. மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதற்கான சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் சான்றொப்பம் பெறப்பட்ட நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் ‘இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம், ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, 9-ஆவது தளம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006’ என்ற முகவரிக்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பத்தின் நகலை மாணவர்கள் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. விவரங்களுக்கு: www.tndce , http://www.tndcescholarship.org/

நன்றி :puthiyathalaimuraikkalvi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...