Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 07, 2014

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டம்
கடலூர் மாவட்டத்தின் வளர்ந்து வரும் நகராட்சியாக சிதம்பரம் உள்ளது. இங்கு 1962-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்படுகிறது.

பாதாள சாக்கடையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நகரின் பல பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள், கிருமிகளால் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படாததற்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் பைகள் கூறப்படுகிறது.

மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் கழிவுநீர் சீராக வழிந்து செல்லமுடியாமல் தெரு, சாலையின் மத்தியில் உள்ள பாதாள சாக்கடை திறப்பு வழியாக வெளியே வருகிறது. சில நேரங்களில் பாதாள சாக்கடை அமைத்துள்ள வீட்டுக்குள்ளே கழிவுநீர் புகுந்து விடுகிறது.

காற்றில் பறந்த அபராதம் தீர்மானம்
இதேபோல் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் ஓரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், அந்த கால்வாயை அடைத்து விடுகிறது. இதனால் மழை காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தெருவில் வழிந்து ஓடி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 12.12.2012- அன்று சிதம்பரம் நகராட்சியில் அவரச கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் மொத்த விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரமும், சில்லறை வியாபாரிக்கு ரூபாய் ஆயிரமும், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.200-ம், உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும் என்று
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நீர்நிலைகள், கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு முதல்முறை ரூபாய் ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இது எதுவுமே நகராட்சி நிர்வாகத்தால் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. இதன் காரணமாக சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் குப்பைகளால் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?
இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினாலும், பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்காத வரை சிதம்பரம் நகரில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் சுகாதார சீர்கேடு ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டும். மேலும் பெயரளவுக்கு உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...