Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 30, 2011

வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி!

சிதம்பரம்:கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களான பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.

கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையிலும், வெள்ளாற்றிலும், பழைய கொள்ளிடத்திலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 15 முதல் 30 நாள்களுக்குள்ளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. மேற்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நீர் வடியத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் வோளாண் துறை அதிகாரிகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர் மற்றும் வெள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குமராட்சி ஒன்றியம் வக்காரமாரி, தெம்மூர், நந்திமங்கலம், வீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து விபரம் கேட்டறிந்தார். நந்திமங்கலத்தில் விவசாயி ஒருவர் உரம் தட்டுப்பாடாக உள்ளது. உரம் கிடைக்கவில்லை என ஆட்சிரிடம் புகார் தெரிவித்தார்.

மேலும் இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. தீடீரென ஊருக்கு தண்ணீர் புகுந்து விடுவதால் வெளியேறுவது கஷ்டமாகிவிடுகிறது. எனவே நந்திமங்கலம்-பூலாமேடு இடையே பழைய கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நந்திமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நந்திமங்கலத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றை ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பின் பாலம் அமைக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோயில் பொதுப்பணித்துறை விடுதியில் ஆட்சியர் அளித்த பேட்டி:
வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களிலிருந்து 30 நாள்களான பயிர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும். 30 நாள்களுக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்குவதால்

பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதுபோல வெள்ளத்தில் வீடுகளை இழந்த குடும்பத்திற்கும், வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால் பொது இடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் நந்திமங்கலம், வீரநத்தம் கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமுற்ற சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும் என்றார். நாக.முருகுமாறன் எம்எல்ஏ, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...