Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 13, 2013

வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு

வீராணம் ஏரியை தூர்வார முதல் கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றுப் பார்வையிட்டு நீர்ஆதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

 வீராணம் ஏரியின் பிரதான கரையின் நீளம் 16 கி.மீ. (லால்பேட்டை- சேத்தியாத்தோப்பு வரை). எதிர்கரையின் நீளம் 30.65 கி.மீ. பிரதான கரையில் 28 பாசன மதகுகளும், எதிர்வாய் கரையில் 6 பாசன மதகுகளும் உள்ளன. ஏரி மூலம் பாசனம் பெறும் மொத்த பரப்பளவு 44,856 ஏக்கராகும். ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக நீர் வருகிறது. மழைக்காலங்களில் பொன்னேரியிலிருந்து கருவாட்டுஓடை மற்றும் செங்கால்ஓடை வழியாக கூடுதலாக மழை நீர் வந்தடைகிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும் (1465 மில்லியன் கனஅடி). காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் பூதங்குடி எனுமிடத்தில் சென்னை குடிநீர் அனுப்பப்படும் நீரேற்று நெடுமாடத்தை அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், எம்.சி.சம்பத் ஆகியோர் நேரில் சென்றுப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், “ஏரியை தூர்வாருவதற்கு முதல் கட்டமாக தமிழக முதல்வர் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மொத்தமாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. எனவே ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து ஏரி தூர்வாரப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.

 பின்னர் அமைச்சரிடம், விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் “வெள்ளாற்றின் பாசனத்தின் மூலம் பயன்பெறும் வகையில் பிலாந்துறை அணைக்கட்டிலிருந்து வடிவமைப்பில் விருத்தாசலம் டி.வி.புத்தூர் முதல் சிதம்பரம் வட்டம், வட்டத்தூர் வரை 18 ஏரிகள் உள்ளன. இவை ஆண்டுதோறும் மழை காலங்களில் முழுமையாக நீர் சேமிக்க முடியாமல் வீராணத்துக்கு வருவதால், வீராணத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த 18 ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தினால் வெள்ளப் பாதிப்பை தவிர்க்கலாம். மேலும் 13,650 ஏக்கர் விளை நிலங்களுக்கு
பாசன வசதி ஏற்படுத்த முடியும்’ என தெரிவித்தார். இதை கேட்ட அமைச்சர் கே.வி.ராமலிங்கம், “வரும் ஆண்டில் முதல்வரிடம் அனுமதிப் பெற்று நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஏரிகள் தூர்வாரும் பணி தொடங்கப்படும் என உறுதியளித்தார். ஓடாக்கநல்லூர் உழவர் மன்றத் தலைவர் டி.கீர்த்திவாசன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

 கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், சென்னைக் குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் அன்பரசன், பொதுப்பணித் துறை கடலூர் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் வி.சண்முகம், பொதுப்பணித்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வக்குமார், உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), செல்விராமஜெயம் (புவனகிரி), கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
-நன்றி தினமணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...