Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 19, 2012

அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன். இது எல்லோருக்குமான வெற்றி – கலாநிதி முர்ஸி

source:http://www.meelparvai.net
ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் அநேகமான இடங்களில் முடிவுக்கு வந்துள்ளன. இதன் பிரகாரம் கலாநிதி முர்ஸி வெற்றி பெற்றுள்ளதாக அவரது பிரச்சார அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும், இறுதித் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக நாளை மறுநாளே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி முர்ஸி 52.50 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், போட்டியாளரான அஹ்மத் ஷபீக் 47 வீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் முர்ஸியின் பிரச்சாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சுயாதீன ஊடகங்கள் கலாநிதி முர்ஸி தொடர்ந்தும் முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அஹமத் ஷபீக்கின் பிரச்சார அலுவலகத்தில் கடந்த இரு மணித்தியாலங்களாக அமைதி நிலவுவதாக அல்-அஹ்ராம் செய்தியாளர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ முடிவுகளை மட்டுமே தாம் ஏற்றுக் கொள்வோம் என ஷபீக்கின் அலுவலகம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை தனது பிரச்சார அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கலாநிதி முஹம்மத் முர்ஸி, “இந்த வெற்றிக்காக நான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன். சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஆதரவாக வாக்களித்த எல்லா எகிப்தியர்களுக்கும் நன்றிகள். இது எல்லா எகிப்தியர்களுக்குமான வெற்றியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி நிறைந்த
ஆதரவாளர் கூட்டத்தின் மத்தியிலேயே அவர் இந்த மாநாட்டை நடத்தினார். “நாம் சமாதானத்தின் செய்தியையே கொண்டுவந்தோம். புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும், எகிப்தின் உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்கும், முஸ்லிம்களது எகிப்துக்கும் கிறிஸ்தவர்களது எகிப்துக்கும் – என எல்லோருக்கும்தான் நாம் இந்த செய்தியைக் கொண்டுவந்தோம்” இதன்பின்னர், “சுதந்திரமான புரட்சியாளர்களது வெற்றி தொடரும். இராணுவ ஆட்சி வீழட்டும்” என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். “புரட்சியில் ஷஹீதானவர்களது குடும்பத்திற்கு, அவர்களது சட்ட ரீதியான உரிமை கிடைக்கும் என நான் உறுதிப்படுத்துகிறேன்” கலாநிதி முர்ஸியின் உரை எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்தது.

 நவீன சிவில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தமது முதன்மையான பணி எனவும், கிறிஸ்தவர்களது அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும். அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் தமக்கில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எகிப்தின் கணிசமான கிறிஸ்தவர்கள் அஹ்மத் ஷபீக்கிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியாளர் மாநாட்டின் பின்னர், கலாநிதி முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்திற்கு சென்றதாக இஹ்வான் ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...