Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 16, 2012

ஜனாதிபதி ஆகிறார் பிரணாப் முகர்ஜி!

இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் அறிவித்தார். போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் குடியரசுத் தலைவர் ஆவது உறுதி என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

 குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகள் எண்ணிக்கை 10.98 லட்சம். அதில் முகர்ஜிக்கு ஆதரவாக 5.49 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று இப்போதைய நிலவரப்படி தெரிகிறது. மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடம் 48,000 வாக்குகள் உள்ளன. தேர்வு பெறுவதற்கு இன்னும் 26,000 வாக்குகள் முகர்ஜிக்குத் தேவை. காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றில் சேராத கட்சிகள், சுயேச்சைகள் போன்றவர்களின் ஆதரவு மூலம் இந்த வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

 பிரணாப் முகர்ஜி ஒரு பார்வை
 பிரணாப் முகர்ஜி, 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி, மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்., கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர். 1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். பிரணாப், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., அரசியல் அறிவியல், எல்.எல்.பி., டி.லிட்., ஆகிய பட்டங்களைப் பெற்றார். பிரணாப் கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும்
உள்ளனர். அபிஜித், மேற்குவங்க காங்., கட்சி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராகப் பணியாற்றினார்.

அக்காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக மன்மோகன் இருந்தார். இந்திராவின் மறைவுக்குப்பின், 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2009ம் ஆண்டிலிருந்து நிதியமைச்சராகச் செயல்பட்ட பிரணாப், தற்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...