Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 06, 2011

வருவாய் இழப்பை சரிகட்ட ரயில்களில் "ஏசி' வகுப்புக் கட்டணம் உயர்கிறது?

புதுடில்லி: ரயில்வே துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்டும் வகையில், பயணக் கட்டணங்களை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. "ஏசி' வகுப்புக்கான கட்டணங்களை, கணிசமாக அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தாக்கல் செய்த அறிக்கையில், ரயில்வே துறையின் நிதி மேலாண்மை, முறையாக கையாளப்படவில்லை என்று குறை கூறப்பட்டு இருந்தது. குறிப்பாக, ரயில்வே துறையின் நிகர உபரி வருவாய் குறைந்துள்ளது. 2007 - 08ல், 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, நிகர உபரி வருவாய், 2009 - 10ல், 75 லட்ச ரூபாயாக குறைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்காரணமாக, எதிர்காலத்தில் ரயில்வே விரிவாக்கப் பணிகளில் பாதிப்பு ஏற்படும், போக்குவரத்து துறையில் ரயில்வேயின் சந்தைப் பங்களிப்பு கணிசமாக குறையும் வாய்ப்புள்ளதாகவும், தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரயில் கட்டணத்தை, கணிசமாக அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அளித்த பேட்டியில்,"ரயில் கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்' என்றார். இதுகுறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: பொதுப் பிரிவு மற்றும் தூங்கும் வசதிக்கான கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. ஆனாலும், "ஏசி' வகுப்புக்கான கட்டணம், கணிசமாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 1998ல் இருந்து, ரயில் பயணக் கட்டணம், அதிகரிக்கப்படவில்லை. இருந்தாலும், மறைமுகமாக கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. 2001ல் ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் குமார், பாதுகாப்பு கூடுதல் கட்டணம் என்ற பெயரில், பயணிகளுக்கானக் கட்டணத்தை மறைமுகமாக அதிகரித்தார். அடுத்தபடியாக, லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, "தட்கல்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும், மறைமுகமாக, பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. தற்போது, "ஏசி' வகுப்புகளுக்கானக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம், நிகர உபரி வருவாய் இழப்பை, ஓரளவுக்கு சரிக்கட்ட முடியும் என, ரயில்வே துறை கருதுகிறது. எனினும், இதுகுறித்து பரிசீலித்து தான், முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...