Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 16, 2011

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்: 33 மந்திரிகளும் பதவி ஏற்பு


தமிழக  சட்டசபை தேர்தலில்  அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  நேற்று தலைமை அலுவலகத்தில் கூடி ஜெயலலிதாவை, சட்ட சபை தலைவராக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னர் பர்னாலாவை நேற்று மாலை ஜெயலலிதா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக் கொண்ட கவர்னர்   பர்னாலா, ஆட்சி  அமைக்குமாறு ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார். புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வர வேற்றார்.
 
 அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று  அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் மேடைக்கு சென்று தங்களுக்கு உரிய இருக்கைகளில் அமர்ந் தனர். 12.40 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்தார். அவரை ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கவர்னர் பர்னாலாவுக்கு புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்க இருந்த 33 பேரையும் ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இதையடுத்து பதவி ஏற்பு விழா தொடங்குவதாக  அறிவிக்கப்பட்டது. உடனடியாக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள வருமாறு ஜெயலலிதாவை தலைமை செயலாளர் மாலதி அழைத்தார். 
 
இதை  தொடர்ந்து ஜெயலலிதா, முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார். ஜெயலலிதா பதவி ஏற்ற போது கூறிய உறுதிமொழி வருமாறு:-
 
ஜெ.ஜெயலலிதா எனும் நான், சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால்  உண்மையான நம்பிக்கையும்,  மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக  உண்மையாகவும், உளச்சான்று  படியும் எனது கடமைகளை செய்வேன் என்றும் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க, அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பை விலக்கி, பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
 
ஜெ.ஜெயலலிதா எனும் நான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்ற முறையில் என் கவனத்துக்கு உள்ளாவதும் தெரியவருவதுமான எந்த பொருளையும், அமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ, நேராகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
 
இவ்வாறு ஜெயலலிதா பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழியை படித்த   முதல்-அமைச்சர் ஜெயலலிதா  பிறகு அதற்குரிய  புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் பர்னாலாவுக்கும் விழா அரங்கில் இருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு 12.52 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து பதவி ஏற்றுச் சென்றனர்.
 
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.சண்முகவேலு, ஆர். வைத்திலிங்கம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.  சொ.கருப்பசாமி, பி.பழனியப்பன், சி.வி.சண்முகம், செல்லூர் கே.ராஜு, கே.டி.பச்சமால், எடிப்பாடி  கே.பழனிச்சாமி, எஸ்.பி.சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.பி. வேலுமணி. கே.டி.எம்.சின்னைய்யா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, ஜி.செந்தமிழன், எஸ்.கோகுலஇந்தி, செல்வி ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.பி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், வி.செந்தில் பாலாஜி, என்.மரியம் பிச்சை.  கே.ஏ.ஜெயபால், இ.சுப்பையா, புத்திசந்திரன், எஸ்.டி.செல்லபாண்டியன், வி.எஸ்.விஜய், என்.ஆர்.சிவபதி ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
 
பதவி ஏற்று முடித்ததும் அவர்கள் கவர்னர் பர்னாலாவுக்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்தனர். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் பர்னாலாவுடன்,  புதிய அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
 
விழாவில்  குஜராத் முதல்-மந்திரி  நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, லோக்தளம் கட்சித் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார்கள்.
 
சசிகலா, அ.தி. மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர்  விஜயகாந்த், இந்திய  கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன்,  தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ, சுலோசனா சம்பத் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
 
தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா,  முன்னாள் டி.ஜி.பி.க்கள் தேவாரம், நட்ராஜ், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன். நடிகைகள் அஞ்சலி தேவி, சவுகார்ஜானகி, பின்னணி பாடகி பி.சுசீலா, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...