Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 19, 2012

ஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.

போட்டித்தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வுமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. TNPSC சமீப காலமாக போட்டித்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. முக்கியமாக, தேர்வுக்கான ஆண்டுத்திட்டம், இணையவழி விண்ணப்பம், இணையவழி நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தேர்வுக்கூடங்களில் வீடியோ பதிவு, வினாவுக்கான விடைகள் வெளியிடுதல், இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு, விரைவான தேர்வு முடிவுகள், பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, வெளிப்படையான தெரிவுமுறை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வுக்கு வருகை புரிந்தோரின் விவரங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய சீர்திருத்தங்களை தொடர்ந்து, அடுத்த கட்டமாக கணினிவழித் தேர்வுகளை (ஆன்லைன் தேர்வுமுறை) கொண்டுவர முடிவு செய்துள்ளது.

கணினிவழித் தேர்வு என்பது தற்போது நடைமுறையில் உள்ள OMR விடைத்தாளில் விடையளிக்கும் கொள் குறிவகை தேர்வு போன்றதாகும். கணினி வழித் தேர்வில் கேள்விகளும் விடைகளும் கணினித்திரையில் தோன்றும். விண்ணப்பதாரர்கள் கேள்விக்கான நான்கு விடைகளில் மிகச்சரியான ஒரு விடையினை தேர்வு செய்து கணினியின் Mouse மூலம் கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வகைத் தேர்வில் தேர்வு நேரத்திற்குள் விடைகளை மறு ஆய்வு செய்யவும், மாற்றவும், ஒரு கேள்வியை விடுத்து அடுத்த கேள் விக்குச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வினாவும் விடையும் ஒரு சேர தோன்றுவதால் வினாவுக்கான வரிசை எண் மாற வாய்ப்பில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை (Multiple Answer) தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பில்லை. தேர்வில் இடம்பெறும் கேள்வி மிகப் பாதுகாப்பான முறையில் இணைய வழியாக தேர்வுக்கூடங்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னர் அனுப்பப்படுவதாலும், தேர்வர்கள் குறிப்பிடும் விடைகள் உடனுக்குடன் தேர்வாணையத்திலுள்ள கணினியில் பெறப்படுவதாலும் இவ்வகைத் தேர்வு மிகவும் பாதுகாப்பானது.

கேள்விகளும் விடைகளும் வரிசை முறையின்றி கலந்து (ரேண்டம் முறை) விண்ணப்பதாரர்களுக்கு திரையில் தோன்றச் செய்வதால், விண்ணப்பதாரர்கள் அருகிலிருக்கும் சக விண்ணப்பதாரர்களைப் பார்த்து விடையளிக்கவும் முடியாது. விண்ணப்பதாரர்களின் நடவடிக்கைகள் Camera மூலமாகவும், கணினிப் பதிவுகள் மூலமாகவும்
கண்காணிக்கப்படுவதால் இவ்வகைத் தேர்வுகள் மிகவும் நம்பிக்கையான முறையிலும் நேர்மையான முறையிலும் நடைபெறும். இந்த வகைத்தேர்வுகளில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய வேண்டிய வேலை இல்லை என்பதால், தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிப்படும். இந்த தேர்வினை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்படியான கணினி அறிவு தேவையில்லை. Computer Mouse பயன்படுத்துவதற்கு தெரிந்து இருந்தால் போதுமானது. தேர்வு முடிந்தவுடன் விண்ணப்பதாரர்கள் தாங்கள் சமர்ப்பித்த விடைகளின் விவரங்களை பிரின்ட் செய்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கணினிவழித் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளுவதற்கு வசதியாக மாதிரி தேர்வு (மாக் டெஸ்ட்) பக்கங்கள் தேர்வாணைய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களை கணினிவழித் தேர்வுக்கு தயார் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பக்கங்களில் விண்ணப்பதாரர்கள் கணினிவழித் தேர்வு குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தில் உள்ள மேற்படி பதவிகளுக்கான அறிவிக்கை அல்லது கணினிவழித் தேர்வுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு குறித்த சந்தேகங்களை 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலை பேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம். கணினிவழி தேர்வுமுறை, முதல் கட்டமாக தோட்டக்கலை அலுவலர், உதவிப் பொறியாளர், முதுநிலை ஆசிரி யர், பள்ளி உதவி ஆசிரியர் ஆகிய தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளில் கொண்டுவரப்படுகிறது. இதற்கான தேர்வுகள் 9.12.2012 அன்று நடத்தப்படும். படிப்படியாக அனைத்து வகை தொகுதித்தேர்வுகளிலும் ஆன்லைன் தேர்வு அறிமுகப்படுத்தப்படும். தேர்வாணையம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டி தேர்வுகளை நடத்துவதிலும், அதன் முடிவுகளை வெளியிடுவதிலும் அதிக அக்கறை காட்டும் TNPSC , பணி நியமனங்களில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மையை வெளிபடுத்த வேண்டும் என்பதே ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில் இருந்து, இன்று வரை முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இட ஒதுக்கீடு TNPSC பணி நியமனங்களில் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் நியமிக்கபட்டு உள்ளனரா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தேர்வுகளை நடத்துவதில் மட்டும் வெளிப்படை தன்மையை காட்டாமல், தேர்வை நடத்துவதில் இருந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது வரை வெளிப்படை தன்மையை வெளிபடுத்தாத வரை TNPSC-யின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே..

-tntj மாணவர் அணி - அஜ்மல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...