Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 21, 2012

சிரியா: புரட்சியாளர்கள் கை ஓங்குகிறது முக்கிய நகரங்களை கைப்பற்றினர்!

டமாஸ்கஸ்:சர்வாதிகார அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் இரத்தக்களரியாக மாறியுள்ள சூழலில், சிரியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். ஈராக்-துருக்கி எல்லைப் பகுதிகளில் உள்ள நகரங்களை புரட்சியாளர்கள் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர். மேற்காசியாவின் வர்த்தக பாதையில் முக்கிய இடம் வகிக்கும் டமாஸ்கஸ்-பாக்தாத் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை நகரங்களான அபூகமால், ஜோர்டான் எல்லையில் உள்ள அல் வலீத், துருக்கி எல்லையில் உள்ள ஜர்பலூஸ், பாபுல் ஹவா ஆகிய நகரங்களின் கட்டுப்பாட்டை ஆஸாத் அரசு இழந்துள்ளது.

 சிரியாவின் முக்கிய துறைமுக நகரம்தான் அல்வலீத். 605 கி.மீ வரை ஜோர்டானும், சிரியாவும் இந்த எல்லையை பங்கிடுகின்றன. இந்நிலையில் தலைநகருக்கு அருகில் உள்ள புரட்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த மிதான் நகரத்தில் போராளிகளை துடைத்து எறிந்ததாக சிரியா தொலைக்காட்சி கூறுகிறது. டாங்குகள் மற்றும் கவச வாகனங்களுடன் சர்வாதிகாரி ஆஸாதின் ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது. இதனிடையே, கடந்த புதன்கிழமை நேசனல் செக்யூரிட்டி கட்டிடத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் காயமடைந்த பாதுகாப்புத்துறை தலைவர் ஹிஷாம் பக்தியார் மரணமடைந்தார். உயர் பாதுகாப்பு அதிகாரிகளும், அமைச்சர்களும் நடத்திய கூட்டத்தின் போது நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பாதுகாப்பு அமைச்சர், துணை பாதுகாப்பு அமைச்சர், உயர் ராணுவ அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். அதேவேளையில், பதவியில் இருந்து விலக ஆஸாத் அறிவித்ததாக வெளியான செய்திகளை சிரியா அரசு மறுத்துள்ளது.

பிரான்சில் உள்ள ரஷ்ய தூதர் ஆஸாத் பதவி விலக விருப்பம் தெரிவித்ததாக தெரிவித்தார். இச்செய்தி முற்றிலும் அடிப்படையற்றது என சிரியா செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவிற்கு எதிராக நேற்று முன்தினம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 3-வது தடவையாக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோவை பயன்படுத்தி தோற்கடித்தன. இரு நாடுகளின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன. அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன் ஆகிய நாடுகள் இரு நாடுகளின் நடவடிக்கைக்கு கண்டனம்
தெரிவித்துள்ளன. துயரப்பட வேண்டிய நிலைப்பாட்டை இருநாடுகளும் மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்தார்.
நன்றி:தூதுஆன்லைன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...