Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 20, 2013

தடயறிவியல் படிப்புகள்‏

ஆங்கிலத்தில் போரன்சிக்(forensic) எனப்படும் தடயறிவியல் படிப்பு பெரும்பாலும் மாணவர்களிடையே அதிகம் பிரபலமடையாக படிப்பாகும். அதிகம் பிரபலமடையாவிட்டாலும், ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கும் படிப்பாக தற்போது இது விளங்குகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு தற்போது குற்றங்களும் வளர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு குற்றத்தையும், அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே, தற்போது தடயவியல் துறை நிபுணர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், எம்பிபிஎஸ் தடயறிவியல் படித்து பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அத்துறையில் முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்க ஆளே இல்லாத நிலை நிலவுகிறது. பல முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படிப்பு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாத ஒரேக் காரணத்தால் தற்போது பின்தங்கியுள்ள படிப்பாக இருக்கிறது.

ஒரு குற்றம் நடந்த விதத்தை ஆய்வு செய்யும் முறையான பயிற்சி அளிப்பதே தடயறிவியல் படிப்பாகும். நாட்டில் சட்டத்தை நிலைநாட்டவும், குற்றவாளியை குற்றவாளி என நிரூபிக்கவும், குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் தடயவியல் நிபுணர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது. மேலும், இப்பணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அனுபவத்தைத் தரும் என்பதால் எப்போதுமே இத்துறையில் ஆர்வத்தோடு பணியாற்ற இயலும். தடய ஆய்வுத் துறையில் உள்ள உட்பிரிவுகள்

தடய ஆய்வு தொல்லியல்
தடயறிவியல் உயிரியியல்
தடயறிவியல் பொருளாதாரவியல்
தடயறிவியல் பொறியியல்
தடயறிவியல் அறிவுத்திறனியல்
தடயறிவியல் மொழியியல்
தடயறிவியல் உளவியல்
தடயறிவியல் திசுவியல்
தடயறிவியல் மானுடவியல்
தடயறிவியல் தொழில்நுட்பவியல் எம்.டி.
தடயறிவியல் மருத்துவம் எம்.பி.பி.எஸ்.

மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் தடயறிவியல் பாடம் வருகிறது. அதில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் முதுகலை மருத்துவப் படிப்பாக எம்.டி. தடயறிவியல் மருத்துவம் பிரிவை எடுத்துப் படிக்கலாம். இதனை முடிப்பவர்கள் பிரேத பரிசோதனை செய்யலாம். மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். தமிழகத்தில் இப்படிப்பினை முடித்தவர்களுக்கு தற்போது கடும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இப்படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலை உறுதி.

பி.எஸ்சி. தடயறிவியல் : பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இதனை தமிழகத்தில் ஒரு சில கல்வி நிறுவனங்களே அளிக்கின்றன. தடய அறிவியல் படிப்பினை வழங்க சிறப்பு கல்வி நிறுவனங்களும் உள்ளன. அவற்றிலும் இப்படிப்பை மேற்கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும். அத்துறையில் அடிப்படை விஷயங்களை இப்படிப்பு கற்றுத்தரும்.

எம்.எஸ்சி., தடயறிவியல் : ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்தை அறிவியல் பாடப்பிரிவில் முடித்தவர்கள் எம்.எஸ்சி., தடயறிவியல் படிப்பில் சேரலாம். குறிப்பிட்ட சில பிரிவுகள் இப்படிப்பில் வழங்கப்படும். அதனை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். தற்போது சைபர் பாரன்சிக் எனப்படும் தொழில்நுட்ப தடயறிவியல் படிப்பிற்கு மாணவர்களிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதில் எம்.பில். ஆராய்ச்சி என மேற்கொண்டு படித்துக் கொண்டே செல்லலாம். இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஆசியன் போரன்சிக் சயின்ஸ் அகாடமி, சென்னை சென்னை பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம், புது தில்லி லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ மத்திய தடயவியல் துறை ஆய்வகம், ஹைதராபாத் மத்திய தடயவியல் துறை ஆய்வகம், சண்டிகர் மத்திய தடயவியல் துறை ஆய்வகம், கொல்கட்டா ஆகியவை இத்துறையில் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன.

பல தொலைநிலைக் கல்வி மையங்கள் தொலைதூரக் கல்வி முறையிலும் இப்படிப்பை வழங்கி வருகின்றன. தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., சைபர் போரன்சிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு அங்கு குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தகவல் தொழில்நுட்ப முறையில்
செய்யப்படும் குற்றங்களை கண்டுபிடிக்க நிபுணர்களின் தேவை அதிகரிப்பதற்கேற்ப, அத்துறையில் புதிய மேற்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. குற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள கோப்புகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் இப்பாடப்பிரிவில் கற்றுத்தரப்படுகிறது.

தனித்திறன் உள்ள மாணவர்கள் : ஒரு பிரச்சினையை அணுகும் முறையில் நீங்கள் மற்றவர்களை விட வேறுபடுவது.. சின்ன சின்ன விஷயங்களைக் கூட தீவிரமாக யோசித்து அதில் உள்ள நுணுக்கங்களை கண்டறியும் ஆற்றல், மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எளிதாக தீர்வு காணும் திறன் ஆகியவை இப்படிப்பிற்கான் ஒவ்வொரு வேலையையும் சவாலாக எடுத்துக் கொண்டு பணியாற்றும் திறன் நிச்சயம் இத்துறையில் படித்தவர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்றாகும்.

வேலை வாய்ப்பு : இத்துறையில் படித்து முடித்து நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவை தற்போது அரசுத் துறைகளில் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் எம்.டி. தடயறிவியல் முடித்து பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் தடயறிவியல் மருத்துவர்களோ, பேராசிரியர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தடயறிவியல் துறை நிபுணர்களுக்கு பற்றாக்குறை இருப்பதால் இப்படிப்பை முடித்த உடன் அரசு வேலை வாய்ப்பு பெறலாம் என்பது உறுதியாகிறது. இதில்லாமல், காவல்துறையிலும், சட்டத்துறையிலும், புலனாய்வு அமைப்புகளிலும் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

source:tntjstudent wing

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...