தினமணியில் இடம்பெற்ற இந்த கட்டுரையை சகோதரர் பழ. கருப்பையா அவர்கள் அழகான முறையில் இந்த தூய மார்க்கத்தை விளக்கியிருந்தார். உங்களின் பார்வைக்காக அந்த கட்டுரையை வைக்கின்றோம்.
நன்றி பழ. கருப்பையா அவர்களே!
அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.
உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி!
முகம்மது நபி "ஸ ல்லல்லாஹு அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; ஸல் என்றால் நபி!
நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது.
அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.
வழிபடு தெய்வத்தை, அதற்குரிய வடிவத்தை வழிபடு மொழியை, வழிபடுவதற்குரிய முறையை, இன்னும் சொன்னால் வழிபடு நேரத்தையும் வழிபடுவோன் முடிவு செய்து கொள்வதில்லை. இவை அத்தனையையும் இசுலாத்தில் நபிகள் பெருமானார்தான் முடிவு செய்திருக்கிறார். இதிலேதான் நபிகளின் அமைப்புக் கட்டும் திறன் ஒளிர்கிறது.நபிகள் பெருமானார் கட்டியமைத்த "உம்மா'தான் இசுலாத்தின் வலிமைக்கு அடிப்படை. உம்மா என்பது சமூகம்தான்.
இசுலாம் முதலில் இறைமீது நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இரண்டாவதாக ஐந்து நேரத் தொழுகையை வலியுறுத்துகிறது.ஐந்து வேளையும் தொழுவதற்கு "பாங்கு' சொல்லி மக்களை அழைக்கும் பாங்கு இசுலாத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இன்னின்ன நேரங்களில்தான் தொழுவது என்பது வரையறுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், அவர்களைத் தொழுகைக்கு அழைப்பது இயலக் கூடியதாக இருக்கிறது.
இமாம் தொழுகையை வழிநடத்தும்போது, எப்போது குனிவது, எப்போது நிமிர்வது, எப்போது காது மடல்களைத் தொடுவது, எப்போது மண்டியிட்டு மண்ணில் நெற்றி படுமாறு வணங்குவது இவற்றை எல்லாம் எந்த வரிசையில் செய்வது என்று அனைத்துமே நபிகளால் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.
இசுலாமியர்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடி நின்று இரமலான் நோன்பில் தொழும்போது, பட்டாள வீரர்களின் அணிவகுப்பைப் பார்ப்பது போன்ற திகைப்பும் கவர்ச்சியும் ஏற்படுவதற்குக் காரணம் நபிகள் நாயகம் தொழும் முறையைக்கூடத் துல்லியமாக வரிசைப்படுத்தி வைத்திருப்பதுதான்! ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபி (ஸல்) எவ்வாறு தொழுதாரோ, அவ்வாறே அதே பாணியில்தான் இன்று நம்முடைய இளையான்குடிபுதூர் அப்துல்லாவும் தொழுகிறார். இசுலாத்தின் அடிப்படை இறைவனுக்கு வடிவமில்லை என்பது. இறைவனுக்கு வடிவம் தேவைப்படுவோர்க்குத்தான் கோயில் தேவைப்படும். வடிவமில்லாத இறைவனை வணங்கப் பள்ளிவாசல் எதற்கு? பள்ளிவாசலில் எங்கும் சுவர்கள்தாமே இருக்கின்றன! மேற்கு நோக்கித் தன்னுடைய வீட்டிலிருந்தும் தொழ முடியுமே! பாங்கு சொல்லி இவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைப்பானேன்?
ஓடுகின்ற தொடர்வண்டியிலும், போர்க்களத்தில் ஒட்டகத்தின் மீதிருந்தும் தொழுவதை இசுலாம் அனுமதிக்கிறது. எனினும், பள்ளிவாசல் தொழுகை இன்றியமையாததாக இருப்பது ஏன்? ஒருவருக்கொருவர் அருகிருந்து தொழும்போதுதான் "உம்மா' என்னும் சமூக அமைப்பைக் கட்டி எழுப்ப முடியும்! பள்ளிவாசல் தொழுகைபோல், "ஹஜ் யாத்திரையும்' ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது. வசதியும், உடலும் இடங்கொடுக்கும் ஒவ்வொரு இசுலாமியனும் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்று தொழுது வரவேண்டும்.
பக்கத்து வீட்டுக்காரனோடும், தூரத்து வீட்டுக்காரனோடும் ஒரு பள்ளிவாசலில் கூடித் தொழும்போது ஓர் "உம்மா' உருவாவதுபோல, பக்கத்து நாட்டுக்காரனோடும், தூரத்து நாட்டுக்காரனோடும், மெக்காவில் கபாஆவுக்கு முன்னால் கூடித் தொழும்போது ஓர் அகன்று பரந்த உலகளாவிய "உம்மா' உருவாகாதா?
ஒரே இறை அல்லா; இறுதி நபி முகம்மது நபி: அல்லாவால் அருளப்பட்ட திருக்குரான்! இவையே இசுலாத்தின் இரண்டாங் கடமையான ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றும் உள்ளூர்ப் பள்ளிவாசலிலும், இசுலாத்தின் ஐந்தாங் கடமையான ஹஜ் யாத்திரையின் முடிவில் நிகழ்த்தும் மெக்கா தொழுகையிலும் அனைவரையும் ஒன்று குவிக்கும் சிந்தனை மையங்கள்.
கீழக்கரையில் கட்டப்படும் சிறிய அளவினதான "உம்மா' மேலக்கரையில் மெக்காவில் பேருருக் கொள்கிறது!
நாட்டின் எல்லைக்கோடுகள் தேய்ந்து போகின்றன; மொழிகள் அற்றுப் போகின்றன; இனங்கள் காணாமல் போகின்றன!இராக்கிலுள்ள இசுமாயிலும், சௌதிஅரேபியாவிலுள்ள சௌக்கத் அலியும், ஆப்பிரிக்காவிலுள்ள அகமதுவும் நம்முடைய காயல்பட்டினத்திலுள்ள காதர்பாட்சா ராவுத்தரும் "அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர்'விண்ணதிர முழங்குகின்றபோது, உருகிக் கரைந்து ஒருமை நிலை எய்தி விடுகின்றனர்! ஓர் அமைப்பை அதுவும் உலகளாவிய அளவில் கட்டியமைக்கும் திறனில் நபிகள் நாயகத்துக்கு இணையாக யாருமில்லை!
அமைப்புக் கட்டுமானத்தில் எள்ளளவும் சிதைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் பெருநோக்கில், தனக்கு நியாயமாக வந்திருக்க வேண்டிய பெரும்புகழைப் புறந்தள்ளினார் பெருமானார்!திருக்குரானின் வாசகங்கள் அல்லாவின் வாசகங்கள்! அவை தன் வழியாக வந்து இறங்கின; அல்லாவின் கைகளில் தான் ஒரு கருவி மட்டுமே என்று நபிகள் நாயகம் திண்ணமாகச் சொன்னார். தன்னை வணங்குவதையோ, தன்னுடைய சமாதியை வணங்குவதையோ நபிகள் கடுமையாக மறுத்தார் என்பது மட்டுமன்று; அது ஒரு "ஹராம்'; குற்றம் என்று மிகக் கண்டிப்போடு விலக்கி வைத்தார். "எல்லாப் புகழும் அல்லாவுக்கே' என்பதுதான் நபிகள் நாயகம் கற்பித்த வாழ்க்கை முறை!
"தெருவுக்குத் தெரு டிஜிட்டல் பேனர்கள்; சுவர் கொள்ளாத பதினாறு துண்டுச் சுவரொட்டிகள்; நாளிதழ்களில், வார இதழ்களில் திறந்த