Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 13, 2011

இறுதியில் பதவி விலகினார் முபாரக்

சுழன்று வீசிய மக்கள் எழுச்சி சூறாவளிக் காற்றில் மீண்டும் ஒரு அரபுலக சர்வாதிகாரியின் பதவி வேரோடு சாய்ந்தது.எகிப்து மக்களின் உறுதியான மனோதிடத்தின் முன்னால் முப்பது ஆண்டுகள் நீண்ட முபாரக்கின் துயரங்கள் நிறைந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதிபர் பதவியை ராஜினாமாச் செய்யப்போவதாக முபாரக் தொலைக்காட்சி வாயிலாக பிரகடனப்படுத்திய பொழுது தலைநகரான கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

போராட்ட வீதிகளில் உயிர் தியாக செய்த தியாகிகளின் பெயர்களை மக்கள் முழங்கியது கெய்ரோவை அதிர்வடையச் செய்தது.துனீசியாவில் துவங்கிய மக்கள் புரட்சியின் தீக்கனலை நெஞ்சில் ஏற்றிக்கொண்ட எகிப்து நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்த 17-வது தினம் முபாரக் பதவி விலகியுள்ளார்.

மக்களின் கொந்தளிப்பை தணிப்பதற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற முபாரக்கின் வாக்குறுதியும், அரசியல் சட்டத்தை திருத்தலாம் என்ற உமர் சுலைமானின் கூற்றும் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் எடுபடவில்லை.

முபாரக்கின் ராஜினாமாவைத் தவிர வேறொன்றும் எங்களுக்கு தேவையில்லை என்பதில் மக்கள் உறுதியாக இருந்ததால் முபாரக்கிற்கு வேறு வழிகள் ஒன்றும் இல்லாமல் போனது.

இஃவானுல் முஸ்லிமீன் உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்றுபட்டதும், உற்றத்தோழன் அமெரிக்கா கைகழுவியதும், முபாரக் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

ராணுவமும் மக்கள் நியாயமான உணர்வுகளுக்கு ஆதரவாக மாறியதால் எழுச்சியின் வெற்றி வேகம் அதிகரித்தது.

எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து ஹுஸ்னி முபாரக் தலைமறைவாகிவிட்டார் என கூறப்பட்டது. கெய்ரோவில் அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறி எகிப்தில் ஏதோ ஒரு ரகசிய இடத்தில் முபாரக் தங்கியிருப்பதாகவும், நாட்டை விட்டு வெளியேறியதாகவும் மாறுபட்ட செய்திகள் எகிப்திலிருந்து வெளியாகியிருந்தன.

முபாரக் வாசஸ்தலமான ஷரமுல் ஷேக்கில் தங்கியிருப்பதாக ஆளுங்கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் பார்டியின் செய்தித் தொடர்பாளர் முஹம்மது அப்துல்லாஹ் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

செங்கடல் கரையோரத்தில் இஸ்ரேலினோடு இணைந்த பகுதிதான் ஷரமுல் ஷேக். மக்களின் கொந்தளிப்பு அதிகமானதால் முபாரக் இஸ்ரேலுக்கு தப்பிச் செல்வார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

முபாரக் ஷரமுல் ஷேக்கிற்கு சென்றுள்ளதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது. முபாரக் யு.ஏ.இ யில் ரகசிய இடத்திற்கு சென்றுள்ளதாகவும் அதிபருடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்ஹுர்ரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

முபாரக் எகிப்தை விட்டு ஏற்கனவே வெளியேறியதாகவும், நேற்று அவர் பேசிய தொலைக்காட்சி உரை ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்டது எனவும் ஈரானின் தேசிய தொலைக்காட்சியான பிரஸ் டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரத்திலிருந்து விலக தயாரில்லை எனவும், வருகிற செப்டம்பரில் தேர்தல் நடக்குவரை அதிபர் பதவியில் தொடரப் போவதாகவும் முபாரக் அறிவித்து 24 மணிநேரத்திற்குள் மக்கள் எழுச்சிக்கு சரண்டர் ஆகி விட்டார் அவர்.
- பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...