Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 20, 2011

லிபியா மீது அமெரிக்க விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்!

திரிபோலி: ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒப்புதல் கிடைத்ததன் பின்னணியில் லிபியா மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படையினர் அத்துமீறி லிபியாவுக்குள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது உலக அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளின் விமானப்படையும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. லிபியா, வெனிசூலா உள்ளிட்ட பல நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

கடாபியை ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை. தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒப்புதல் பெற்றது. இதுதொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.

இந்த ஒப்புதல் கிடைத்ததும் அதிரடியாக அமெரிக்காவும், அதன் ஜால்ரா நாடுகளும் சேர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன.

போர் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை வீசியும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா.

ஈராக் போருக்குப் பின்னர் அரபு நாடு ஒன்றுக்குள் அமெரிக்கா அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.

திரிபோலியைச் சுற்றிலும் லிபிய அதிபர் கடாபியின் ஆதரவுப் படையினர் வைத்துள்ள ரேடார்கள், ஏவுகணைகள், தகவல் தொடர்பு மையங்களை குறி வைத்து டோமஹாக் ஏவுகணைகளை சரமாரியாக செலுத்தி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. லிபியாவைச் சுற்றிலும் நிறுத்தி வைத்துள்ள தனது கடற்படைக் கப்பல்களிலிருந்தபடி இந்த தாக்குதலை நடத்தின அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவுப் படையினர்..

திரிபோலி தவிர மேற்கில் உள்ள மிசுரடா, சுர்த் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு லிபிய நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது சுவேத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவின் செயல் காட்டுமிராண்டித்தனமானது. அத்துமீறிய தாக்குதல் இது. அப்பாவி மக்களையும், கட்டடங்களையும் இது கடுமையாக பாதித்துள்ளது என்றார்.

எத்தனை பேர் பலி?

இந்த வி்மானத் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிகிறது.

கடாபி வீட்டைச் சுற்றிலும் மனித பாதுகாப்பு

இதற்கிடையே அதிபர் கடாபி தங்கியுள்ள மாளிகை மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தால் அதைத் தடுக்க அவரது ஆதரவாளர்கள் கடாபி வசிக்கும் வீட்டைச் சுற்றிலும் குவிந்து அரண் போல குழுமியுள்ளனர்.

புரட்சிப் படையினர் வசம் உள்ள பங்காசி நகரில் கடாபி படையினர் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய தகவல் வெளியானதுமே அமெரிக்க ஆதரவுப் படையினர் தாக்குதலில் குதித்தனர். இந்த தாக்குதலில் பிரெஞ்சுப் படையினர் தலைமை தாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா, உலக நாடுகள் கண்டனம்

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர. இது அத்துமீறிய தாக்குதல் என்று அவை வர்ணித்துள்ளன.

வெனிசூலாவும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளது. இன்னொரு நாட்டின் மீது எப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம். இது அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வெனிசூலா அதிபர் சாவேஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலால் அரபு நாடுகளிலும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Source: thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...