Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 15, 2012

பாஸ்போர்ட் சேவை: மேலும் 3 பிரிவினருக்கு விதிமுறையில் தளர்வு

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையில், மேலும் மூன்று பிரிவினருக்கு விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது; இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட மக்களுக்கு, பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதற்காக, கோவை-அவிநாசி ரோட்டில், கடந்த ஆண்டு ஆக.,4லிருந்து பாஸ்போர்ட் சேவை மையம் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) செயல்பட்டு வருகிறது. இந்த மையம் துவக்கப்பட்ட பின், புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, "ஆன்லைன்' முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, விண்ணப்பப் பதிவு எண், நேர்காணலுக்கான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு நேரில் வரலாம் என்ற, நடைமுறை உள்ளது. ஆனால், "ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்கும் பெரும்பாலானவர்களுக்கு, "அப்பாயின்மென்ட்' கிடைப்பதில்லை என்று, பரவலாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, பல தரப்பில் இருந்தும் சென்ற தகவல்களின் அடிப்படையில், பாஸ்போர்ட் சேவை மையத்தில் நேரடியாக அனுமதிக்கும் புதிய நடைமுறையை கொண்டு வருமாறு, அனைத்து பாஸ்போர்ட் அலுவலர்களுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது; கோவை பாஸ்போர்ட் சேவை மையத்தில், பிப்.,3லிருந்து புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது.முதற்கட்டமாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் (பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் மட்டும்), மாற்றுத்திறனாளிகள், குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கு, "போலீஸ் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்' (பி.சி.சி.,) விண்ணப்பிப்போர் ஆகிய மூன்று பிரிவினர் மட்டும், "ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்து விட்டு, நேரடியாக சேவை மையத்துக்கு வர வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், தினமும் வரும் 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில், இந்த மூன்று பிரிவுகளில் 20க்கும் குறைவான விண்ணப்பதாரர்களே வருவதாகத் தெரியவந்துள்ளது; அதனால், அடுத்த கட்டமாக, மேலும் மூன்று பிரிவினருக்கு இந்த நடைமுறையை, விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது; இது இன்று முதல் (பிப்.,15) நடைமுறைக்கு வரவுள்ளது.
அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதால், பாஸ்போர்ட் புத்தகத்தின் பக்கங்கள் தீர்ந்து, புதிய பாஸ்போர்ட் புத்தகத்துக்காக விண்ணப்பிப்போர்க்கு தாமதமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வகையில், அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறு விபரங்களை மாற்றாமல், வயது மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றதன் காரணமாக, "இமிக்ரேஷன்' சோதனைகள் தேவைப்படாததால், பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்வோரும் இம்முறையில் பயன்பெறலாம்.
திருமணத்துக்கு முன், பாஸ்போர்ட் வாங்கி, அதில் கணவர் அல்லது மனைவி பெயரை இணைப்பதற்காக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்போரும், இனிமேல் "ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து விட்டு, நேரடியாக பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வரலாம்.
"ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்து விட்டு, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு, காலை 9.30 மணியிலிருந்து, மதியம் 12.00 மணிக்குள் வந்தால், முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அடிப்படையில், இவர்களுக்கு "டோக்கன்' வழங்கப்படும்.கோவை பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் கூறுகையில், ""இப்போதும், "ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கும்போது, "அப்பாயின்மென்ட்' கிடைப்பதில்லை என்று நிறைய புகார் வருகிறது; அதனால், தற்போது சில பிரிவினருக்கும் மட்டும் கொண்டு வந்துள்ள இந்த நடைமுறை, படிப்படியாக அனைத்துப் பிரிவினருக்கும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.
போட்டோ வேண்டும்!பச்சிளம் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வரும்போது, அந்த குழந்தையின் போட்டோவையும் கொண்டு வர வேண்டுமென்று பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் அறிவுறுத்தியுள்ளார்; மற்ற விண்ணப்பதாரர்களுக்கு, பாஸ்போர்ட் சேவை மையத்திலேயே போட்டோ எடுக்கப்பட்டு, விரல் ரேகைகளும் பதிவு செய்யப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...