Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 10, 2013

வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் வெற்றிலை பயிர்கள் கருகும் அபாயம்

வெற்றிலை பயிர் 
காட்டுமன்னார்கோவில். : வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாததால் வெற்றிலை பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடவாறு மூலம் தண்ணீர் வரும். மழை காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக தண்ணீர் வரும். ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து சரிவர தண்ணீர் திறக்கப்படாததால் வீராணம் ஏரி ஒரு முறை கூட முழு கொள்ளளவு ஆன 47.50 அடி நிரம்பவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

 ஏரியை நம்பி நெற்பயிர் மட்டுமல்லாது வெற்றிலை சாகுபடியும் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்யப்பட்ட வெற்றிலை கொடிகால்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெற்றிலை சாகுபடி என்பது பல்லாண்டு பயிர் ஆகும். வீராணம் ஏரி கரை ஓரத்தில் உள்ள லால்பேட்டை, கொல்லமலை கீழ்பாதி, மேல்பாதி, திருச்சின்னபுரம், மானியம் ஆடூர், கந்த குமாரன், நெடுஞ்சேரி புத்தூர், கொள்ளுமேடு, நத்தமலை ஆகிய கிராமங்களில் சுமார் 140 ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளது. ஏரி தண்ணீரை மட்டுமே நம்பி இந்த பயிர் செய்யப் படுகிறது. இந்த பகுதியில் சுமார் 10 லிருந்து 15 ஆழ்குழாய் கிணறுகள் மட்டுமே உள்ளது. ஏரியில் தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு வருவதால் பல லட்சம் செலவு செய்து வெற்றிலை சாகுபடி செய்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதுபற்றி கந்த குமாரனை சேர்ந்த வெற்றிலை சாகுபடி செய்த விவசாயி செல்லப்பன் கூறியதாவது:

வீராணம் ஏரியின் தண்ணீரை நம்பி சாகுபடி செய்தோம், தற்போது ஏரி வறண்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு எங்களை போன்ற விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. வெற்றிலை சாகுபடி என்பது 3 ஆண்டு பயிராகும். ஒரு ஏக்கர் பயிர் செய்ய 4 லிருந்து 5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். முதல் ஆண்டு மேட்டு பாத்திகள் அமைத்து கிடங்கு ஏற்படுத்த வேண்டும். கிடங்கில் தண்ணீர் தேங்கியே இருக்க வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தியே வெற்றிலை கொடிகளுக்கு இறைப் போம். முதலில் மேட்டு பாத்திகளில் செம்பை, அகத்தி செடிகளை உற்பத்தி செய்வோம். இவை வளர்ந்த உடன் வெற்றிலை விதை கொடிகளை வாங்கி வந்து பதியம் போடுவோம். அதன் பிறகு வெற்றிலை கொடிகள் படர்வதற்கு ஏதுவாக அகத்தி, செம்பை மீது ஏற்றிவிடுவோம். 1 வருடம் கழித்து வெற்றிலையை பறிப்போம். 2 ஆண்டுகள் வரை வெற்றிலை பறித்து வருவோம். தற்போது தண்ணீர்
இல்லாததால் வெற்றிலை கொடி கால்கள் காய்ந்து சருகாயி வருகின்றன. கடந்த ஆண்டு 200 கட்டுகள் பறித்து வந்தோம். தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் 100 கட்டுகள் வரையே பறித்து வருகிறோம். இவையும் விரைவில் வர உள்ள கோடை காலங்களில் இவை 50 கட்டாகவோ 25 கட்டாகவோ குறையும். இல்லையேல் முழுவதும் கருகி பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் பெருத்த நஷ்டம் ஏற்படுவது இவையே முதல் முறை என்று தெரிவித்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு வெற்றிலை விலை கடுமையாக உயரும் என கூறினார்.

-தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...