Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 11, 2015

முட்டம் பாலம் திறந்தாச்சு: பஸ் போக்குவரத்து துவங்குவது எப்போது?

காட்டுமன்னார்குடி:தென் மாவட்டங்களை இணைக்கும் பிரதான பாலம் திறப்பு விழா நடந்த முட்டம் புதிய பாலத்தில் பஸ் போக்குவரத்து துவங்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி தாலுகா காட்டுமன்னார்கோவில் தென் மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களை இணைக்கும் பிரதான பகுதியாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆறு உள்ளதால் பக்கத்து மாவட்டமான தஞ்சை, நாகை மாவட்டத்திற்கு 50 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு வியாபாரம், தொழில் பாதிக்கப்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப் பின் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்த போது முட்டம் பாலம் கட்ட நபார்டு வங்கி உதவியுடன் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து
முட்டம் - முடிகண்டநல்லூர் இடையேயான பாலத்திற்கு கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி பூமி பூஜை போடப்பட்டு மார்ச் 6ம் தேதி பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.

இரண்டரை ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்து 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக 6 மாதங்களுக்கும் மேலாக திறப்பு விழா காணப்படாமல் கிடப்பில் கிடந்தது. இருப்பினும் திறப்பு விழா காணாமலேயே தென்மாவட்டங்களில் இருந்து லாரி, வேன், கார் போன்ற வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக இயக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென முட்டம் பாலத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார். ஆனால் இந்த பாலத்தில் பஸ் போக்குவரத்து இன்னும் துவங்கப்பட வில்லை. எப்போது பஸ்கள் இயக்கப்படும் என பொதுமக்கள் அதிருப்தியுடன் காத்திருப்பில் உள்ளனர்.

பாலம் திறக்கப்பட்டும் பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வடலூர், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், மணல்மேடு மயிலாடுதுறை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்ல சுலபமான வழியாகும். அதனால் திறப்பு விழா நடந்த முட்டம் பாலத்தில் பஸ் போக்குவரத்தை விரைவில் துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...