Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2013

10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார் கோடுடன் கூடிய தேர்வுத்தாள் அறிமுகம்!

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில் வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுவரை இந்த தேர்வுகளுக்கான விடைகளை மாணவர்கள் எழுத முதலில் வழங்கப்படும் 4 பக்கங்கள் கொண்ட பேப்பரில் முதல் பக்கத்தில் மாணவன் பெயர், தேர்வு எண், பாடம் போன்ற விவரங்கள் எழுதுவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். மாணவன் அந்த 4 பக்கங்களை எழுதிய பின்னர் கூடுதலாக தேவைப்படும் பேப்பர்களை தனியாக வாங்கி பதில் எழுதி அதை பிரதான 4 பக்கங்களுடன் இணைத்து தேர்வுக்கூட பொறுப்பாளரிடம் வழங்குவார். இந்த நடைமுறையில் உள்ள பல்வேறு குறைகளை களையவும், திருத்துவதற்கும், மாணவனின் எண்ணை யாரும் அறியா வண்ணம் கம்ப்யூட்டர் பார்கோட் மூலம் பிரின்ட் செய்து அனைத்து விவரங்களையும் விடைத்தாளிலேயே அச்சடித்து வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல் கூடுதல் தாள்களையும் பிரதான பேப்பருடன் இணைத்து எல்லா பாடத்தேர்வுகளுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வுக்கு தலா ஒரு பாடத்துக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களை நோட்டுப்புத்தக வடிவில் வழங்கப்படும். அதுவே 10ம் வகுப்புக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். அதோடு ஆள்மாறாட்டத்தை தடுக்க ஒவ்வொரு மாணவனின் புகைப்படமும் அதில் இருக்கும். தேர்வு கூட அறையில் விடைத்தாளை வாங்கும் மாணவன் அதில் கையொப்பம் மட்டுமே இட வேண்டியிருக்கும். மாணவனின் புகைப்படத்துடன்
பிற அனைத்து விவரங்களும் விடைத்தாளின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வு எண் மட்டும் கம்ப்யூட்டர் பார் கோட் வடிவில் இருக்கும்.

ஏற்கனவே இம்முறையிலான விடைத்தாள் கடந்த செப்டம்பரில் நடந்த பொதுத்தேர்வில் சோதனை அடிப்படையில் அறிவியல் பாடங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எல்லா பாடங்களுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் ராமராசன் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...