Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 16, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் உரை!

டெல்லியில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையின் முழு வடிவம்

டிசம்பர் 28 இல் நாங்கள் பதவி பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் பெரியது. இந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம் என்று எழுத்துபூர்வமாகவே கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன.

இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால் இன்று அவர்கள் கைகோர்த்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவிலிருந்து கொண்டு அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இருநாட்களில் அவர்களது உண்மையான முகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக்கூடாது என்பதற்காக அதை உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான் முகேஷ் அம்பானி

என்பவர். காங்கிரஸ் கட்சி என்னுடைய கடை என்று முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கடையிலிருந்து அவர் வேண்டியதை வாங்கிக்கொள்வாராம். 10 ஆண்டுகளாக ஐமுகூ அரசை முகேஷ் அம்பானிதான் இயக்கிக்கொண்டிருந்தார். கடந்த ஓராண்டு காலமாக முகேஷ் அம்பானி மோடியையும் ஆதரித்துவருகிறார்.

எங்கேயிருந்து மோடிக்கு இவ்வளவு பணம் வருகிறது? ஹெலிகாப்டர்களில் அவர் ஊர் சுற்றுகிறார், பெரிய பெரிய பேரணிகளை நடத்துகிறார். எங்கேயிருந்து இதெற்கெல்லாம் பணம் வருகிறது? இவற்றுக்குப் பின்னால் முகேஷ் அம்பானி இருக்கிறார்.

நண்பர்களே, நாங்கள் முகேஷ் அம்பானிக்கு எதிராக குரலை உயர்த்திய அடுத்த நொடியிலேயே காங்கிரசும் பாஜகவும் ஒன்றுசேர்ந்து கொண்டன. ஜன் லோக்பால் மசோதாவை முன்வைக்க அவர்கள் விடவில்லை.

கெஜ்ரிவால் ஏதோ ஒரு குட்டி ஒரு லஞ்ச ஒழிப்பு அலுவலர்தானே என அவர்கள் நினைத்துவிட்டார்கள். இந்த அளவுக்கு குடைச்சல் கொடுக்கிறானே என்று கடுப்பாகிவிட்டார்கள். ஜன் லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் இந்த ஆட்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜெயிலுக்கு போகவேண்டியிருக்கும். அதனால்தான் இந்த இரு கட்சிகளுமே சேர்ந்து இந்த மசோதாவை வைக்கமுடியாமல் ஒழித்தன.

இப்போது நாங்கள் முகேஷ் அம்பானியையும் வீரப்ப மொய்லியையும் அம்பலப்படுத்தியிருக்கிறோம். அநேகமாக நாளை ஷரத் பவாரை அம்பலமேற்றியிருப்போம். அடுத்து அநேகமாக கமல்நாத் முறையாக இருந்திருக்கும். எப்படியோ, அவர்கள் ஒவ்வொருவராக மாட்டியிருப்பார்கள்.



நான் ஒரு சாதாரண மனிதன். நான் ஒன்றும் அவதாரப் புருஷன் இல்லை. நான் உங்களில் ஒருவன். அதிகாரத்துக்காகவோ இந்த நாற்காலிக்காகவோ நான் இங்கே வரவில்லை. அதனால்தான் எங்கள் அரசாங்கம் இப்போது பதவி விலகுகிறது.

ஜன் லோக்பால் மசோதாவுக்காக நூறு முதல்வர் பதவிகள்கூட பறிபோகலாம். தவறில்லை. நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்த நாட்டுக்காக நாங்கள் உயிர்கொடுக்கவேண்டும் என்றால், நான் அதிர்ஷ்டக்காரன் என்றே கருதிக்கொள்வேன்.

இப்போதுதான் எங்கள் அமைச்சரவை கூட்டம் முடிந்த்து. எங்கள் அரசாங்கம் பதவி விலகுவது என முடிவுசெய்யப்பட்டது. இதோ என் பதவி விலகல் கடிதம். நான் இப்போது லெப்டின்ன்ட் கவர்னரைப் பார்க்கப்போகிறேன். சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தவேண்டும் என எங்கள் அமைச்சரவை பரிந்துரைத்திருக்கிறது.

டிசம்பர் 28 இல் நாங்கள் அரசு அமைத்தது முதல் இன்றுவரை, எங்கள் அமைச்சர்கள் ஓர் இரவுகூட சரியாக தூங்கியதில்லை. இரவு பகலாக அவர்கள் வேலை பார்த்தார்கள். எங்கள் முயற்சியை தொடர நாங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. மின்கட்டணம், நீர் கட்டணம் குறைத்தோம். மின் நிறுவனங்களை தணிக்கை செய்ய உத்தரவிட்டோம். ஊழலை குறைத்திருக்கிறோம்.

முழு நேர்மையுடனும் நல்ல நோக்கங்களுடனும் நாங்கள் வேலை செய்தோம். நாங்கள் தவறுகளை செய்திருக்கலாம். நாங்களும் மனிதர்கள்தானே. எங்களால் முடிந்ததைச் செய்தோம்.

உங்களால் ஆட்சி செய்ய முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாக அவர்கள் மின் நிறுவனங்களைத் தணிக்கை செய்யமுடியவில்லை. நாங்கள் ஐந்தே நாட்களில் செய்தோம். 65 ஆண்டுகளாக அவர்களால் ஊழலை குறைக்க முடியவில்லை. நாங்கள் 49 நாட்களில் செய்தோம். ஷீலா தீட்சித்தும் முகேஷ் அம்பானியும் செய்த ஊழலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவுசெய்தோம். உடனே அவர்கள் ஆட்சி செய்யுங்கள்; இதையெல்லாம் செய்துகொண்டிருக்காதீர்கள் என்று சொல்கிறார்கள். 

அய்யோ, ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுதான் உண்மையில் ஆட்சி செய்வதென்பது.

எனக்கு சில சமயம் என்ன தோன்றுவது என்னவென்றால், இந்த காங்கிரஸ், பாஜககாரர்களுக்கு ஒரு சில கோடிகளை விட்டெறிந்து விட்டிருந்தோம் என்றால், இது நல்ல காரியம் என்று அவர்கள் சொல்வார்கள்.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நடந்ததைப் பார்க்கும்போது என் மனம் வருத்தமடைகிறது. நாடாளுமன்றத்தில் அவர்கள் மிளகுபொடி தூவியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் என் மைக்கை உடைத்திருக்கிறார்கள். என் ஆவணங்களை கிழித்துப்போட்டிருக்கிறார்கள், ஓர் அமைச்சரிடம் வளையல்களை கொடுத்திருக்கிறார்கள்.. வளையல் கொடுப்பதென்றால் என்ன அர்த்தம்? பாஜக பெண்களை மதிக்கிறதா இல்லையா?

நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் என்கிறார்கள். சட்டமன்றமும் கோயில்தானாம், மசூதி தானாம். நான் கேட்கிறேன்: கோயில்களில் விக்கிரகங்களை உடைத்தெறிவீர்களா? மசூதியில் குரானை கிழித்தெறிவீர்களா? தேவாலயத்தில் விவிலியத்தை கிழித்தெறிவீர்களா? இயேசுபிரானின் சிலைகளை உடைப்பீர்களா?

வெட்கப்படுகிறேன். இந்த ஆட்கள் சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் கேவலப்படுத்திவிட்டார்கள்.
நாங்கள் அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செய்துவிட்டோமாம். எஃப்ஐஆர் போட்டது அரசியல் சாசன விரோதமாம். ஊழலுக்கு முடிவுகட்டுவதற்காக எஃப்ஐஆர் போட்டால் அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள், ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழியவேண்டும் என்றால் அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள். சட்டமன்றத்தில் சட்டங்களை முன்மொழிவதற்கு மத்திய அரசு அனுமதி வேண்டும் என்கிறார்கள். அவர்கள் புளுகுகிறார்கள் நண்பர்களே, நான் அரசியல் சாசனத்தைப் படித்திருக்கிறேன். மத்திய அரசின் அனுமதி வேண்டும் என அது எந்த இடத்திலும் சொல்லவில்லை.

தங்களை காலனிய ஆட்சியாளர்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது. தன்னை வைஸ்ராய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் லெப்டின்ன்ட் கவர்னர். இந்த சட்டமன்றமே ஒன்றுமில்லை என நினைக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களைக் கேட்டுதான் எதையும் செய்யவேண்டுமாம். அப்படி கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நான் அரசியல் சாசனத்தைத்தான் பின்பற்றுவேன். அரசியல் சாசனத்துக்காக நான் என் உயிரையே கொடுப்பேன். ஜன் லோக்பால் மசோதா முழுக்க முழுக்க அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே. அவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் ஊழலைத் தொடர்ந்து நடத்திட அவர்கள் விரும்புகிறார்கள்.

நண்பர்களே, நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆவணங்களை கிழித்தெறிந்தார்கள். பறித்துக்கொண்டார்கள், இதையெல்லாம் அரசியல் சாசன ரீதியிலானது என அவர்கள் நினைக்கிறார்கள். நாம் நாட்டுக்காக போராடுகிறோம். இதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்கிறார்கள்.

இந்த நாட்டின் மக்கள் உங்களுக்கு ஒரு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். இந்த நாட்டின் மக்கள் எப்போதுமே அமைதிகாக்கமாட்டார்கள்.

நான் நேரே இப்போது லெப்டின்ட் கவர்னரிடம் செல்கிறேன். 

கடவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்கு கருணை காட்டுங்கள், வழி நடத்துங்கள் என வேண்டிக்கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களை தியாகம்செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...